சீர்காழி, ஜூன் 30- சீர்காழி அருகே எருக்கூர் நுகர்பொருள் வாணிபக் கழக அரிசி ஆலை நிர்வாகத்தைக் கண்டித்தும், பகுதி-1 அரவை இயந்திரத்தை இயக்க வலியுறுத்தியும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூரில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை உள்ளது. சீர்காழி, டி.மணல்மேடு, எடமணல் ஆகிய பகுதிகளில் உள்ள 3 நெல் சேமிப்பு கிடங்குகளிலிருந்து கொண்டு வரப்படும் நெல் இந்த அரிசி ஆலையில் உள்ள பகுதி-1, பகுதி-2 ஆகிய இரு அரவை இயந்திரங்கள் மூலம் அரைக்கப்பட்டுச் சீர்காழி வட்டத்தில் உள்ள 141 ரேசன் கடைகளுக்கு அரிசி அனுப்பி வைக்கப்படுகிறது. இரு அரவை இயந்திரங்களும் 100 டன் அளவு நெல் அரைக்கும் திறன் பெற்றவை. இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பகுதி-1 அரவை இயந்திரம் நிறுத்தப்பட்டு ரூ.10 கோடி செலவில் சீரமைக்கப்பட்டது. இதன்பின் 2 ஆண்டு ஆகியும் இந்த இயந்திரம் இயக்கப்படாமல் உள்ளது. பகுதி-2 இயந்திரம் மட்டும் மயிலாடுதுறை பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படும் நெல்லை அரைத்துச் சீர்காழி பகுதி ரேசன் கடைகளுக்குப் போக மீதமுள்ளவை மயிலாடுதுறை பகுதி ரேசன் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. பகுதி-1 அரவை இயந்திரம் இயக்கப்படாததால் 50 ஆயிரம் மெட்ரிக் டன் சன்னரகம் நெல் அரைக்கப்படாமல் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. சன்னரகம் அரைத்தால் குறைந்த அளவே அரிசி கிடைக்கும் என்பதால் இந்தச் சன்னரகம் நெல்லை தனியார் அரவை மில்கள் மூலம் அரைத்துத் திருப்பூர், தருமபுரி, ஈரோடு போன்ற பகுதிகளுக்கு ரயில் வேகன்களில் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் சீர்காழி தாலுகா லாரி உரிமையாளர் சங்கத்திற்கு உட்பட்ட லாரிகள் இயக்கம் இன்றி அதன் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கடன் சுமையால் தவித்து வந்தனர். இதைதொடர்ந்து பகுதி-1 அரவை இயந்திரத்தை மீண்டும் இயக்கித் தேங்கியுள்ள சன்னரக நெல்லை அரைக்க வேண்டும் என்பதை வலியுறுத்திச் சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் செயலாளர் உலகநாதன், பொருளாளர் வெங்கடேசன் முன்னிலையில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்தனர். மேலும் 139 லாரிகளும் ஆலை அருகில் உள்ள யார்டில் நிறுத்தப்பட்டன. இப்பிரச்சனைக்குத் தீர்வு காணாவிட்டால் தொடர்ந்து லாரி உரிமம், ஆர்.சிபுக் ஆகியவற்றை ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தனர்.