tamilnadu

கும்பகோணம் ,தஞ்சாவூர் ,சீர்காழி முக்கிய செய்திகள்

மின்சாரம் தாக்கி ஊழியர் பலி உறவினர்கள் மறியல் போராட்டம்

கும்பகோணம், செப்.14-  கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை மின் வாரியத்தில் ஏரகரம் கிராமத்தில் வசித்து வரும் காளிமுத்து மகன் செல்வம்(32) என்பவர் தற்காலிக மின் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.  இந்நிலையில் சுவாமிமலை மின்வாரிய அலுவலர் உத்தரவின் பேரில் கோனக்கரையில் உள்ள உயர் மின் அழுத்த கம்பியின் பழுது நீக்குவதற்காக மின்கம்பத்தில் ஏறி சரி செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பலியான மின் ஊழியர் செல்வத்திற்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். இந்த தகவல் அறிந்து உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாகராஜன் கண்ணன் செந்தில் நாகமுத்து வழக்கறிஞர் விவேகானந்தன் இளங்கோவன் பாலசுப்பிரமணியன் ராமர் தமிழினியன் உள்ளிட்ட ஏராளமானோர் செல்வத்தின் மரணம் குறித்து உரிய விசாரணை செய்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு அரசு வேலையும், உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மின் வாரிய அலுவலர்கள், காவல்துறையினர், வட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.  

அனுமதி இன்றி பேனர்:  81 வழக்குகள் பதிவு

தஞ்சாவூர், செப்.14- தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 3 மாவட்டங்களில் அனுமதி இன்றி ப்ளெக்ஸ் பேனர் வைக்கப்பட்டது தொடர்பாக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இதுகுறித்து தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் ஜெ.லோகநாதன் கூறியதாவது,  “மத்திய மண்டல காவல்துறை தலைவர் வி.வரதராஜூ உத்தரவின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் எஸ்.எஸ்.மகேஸ்வரன்(தஞ்சை), எம்.துரை (திருவாரூர்), டி.கே.ராஜசேகரன்(நாகை) ஆகியோர் மேற்பார்வையில் 3 மாவட்டங்களிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டு மொத்தம் 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் அனுமதி இன்றி விளம்பரப் பதாகைகள் வைப்பவர்களின் மீது, காவல்துறை மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 

கொள்ளிடம் தெற்கு ராஜன் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

சீர்காழி, செப்.14- நாகை மாவட்டம் சீர்காழி அருகே தைக்காலில், சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தெற்குராஜன் பாசன வாய்க்கால் குறுக்கே கட்டப்பட்டிருந்த மிகப் பழமையான பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. புதிய பாலம் கட்டுவதற்காக வாய்க்காலின் குறுக்கே மண்ணால் தற்காலிக தடுப்பணை அமைக்கப்பட்டிருந்தது.  பாலம் கட்டும் பணிக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் வகையில், திடீரென தண்ணீர் வந்தால் அதனை தடுக்கும் வகையில், மண் அணை அமைக்கப்பட்டிருந்தது. கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் சென்று கடலில் கலந்த போதிலும் பாசன வாய்க்காலான தெற்கு ராஜன் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடாமல் இருந்ததால் விவசாயிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில் பாலம் கட்டும் பணி முழுமையடையாமல் இருக்கும் நிலையிலேயே புதிய பாலத்திற்கும் 5 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மண் அணையை பொதுப்பணித் துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் ஊழியர்கள் அகற்றியதால் தற்போது வாய்க்காலில் தண்ணீர் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது.  ஆனால் தெற்குராஜன் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படும் கிளை வாய்க்கால்களையும் முழுமையாக தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் ஒருவர் படுகாயம் 

தஞ்சாவூர் செப்.14- கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்து குறித்து அறிந்து, மீட்பு பணிக்காக தஞ்சையில் இருந்து மோட்டார் சைக்கிளில் பாபநாசம் வட்டாட்சியர் கண்ணன் சென்று கொண்டிருந்தார். அப்போது அய்யம்பேட்டை அண்ணாசிலை அருகே சாலை வளைவில் திரும்பியபோது, தடுமாறி விழுந்து காலில் காயம்பட்டது.  தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றுப் பகுதிக்கு சென்று வட்டாட்சியர் கண்ணன் மீட்புப்பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து வலி அதிகமான நிலையில், கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதை மருத்துவர்கள் கண்டறிந்து சிகிச்சை அளித்தனர்.