தஞ்சாவூர், ஜூன் 16- நீட் தேர்வு அரசியல் சட்டத்துக்கு எதிரானது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றஞ்சாட்டியுள்ளார். தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன், மாநில உரிமைக்கு, சமூக நீதிக்கு எதிரான இந்தி, சமஸ்கிருதம், நீட் தேர்வுகளைத் திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த அவர் மேலும் பேசியது: பாஜக ஆட்சிக்கு வந்து 10 நாட்களில் இந்தி திணிப்பு, சம்ஸ்கிருத திணிப்பு, மாநில உரிமைப் பறிப்பு உள்ளிட்டவற்றை அறிவித்து வருகிறது. கல்வி அறிஞர்கள் அல்லாதவர்களைக் கொண்டு புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயங்களைச் சார்ந்த நடுத்தர, ஏழை மாணவ, மாணவிகள் பலியாகி வருகின்றனர். தற்கொலை சம்பவங்கள் தொடர்வது வேதனை அளிக்கிறது. நீட் தேர்வு அரசியல் சட்டத்துக்கும், மாநில உரிமைக்கும் எதிரானது. பல்கலைக்கழகங்கள் தான் தேர்வுகளை நடத்த வேண்டும். ஆனால், இவர்களே ஒரு குழுவை அமைத்து நீட் தேர்வை நடத்துகின்றனர். இது எந்த வகையில் நியாயம்? சமஸ்கிருதம் கட்டாயம் படிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். மேலும் பெரும்பான்மையோர் பேசும் இந்தி மொழியை அனைவரும் படிக்க வேண்டும் என திணிக்கின்றனர். இது ஒரு கலாச்சார திணிப்பு. குலக் கல்வி முறை ஒழிக்கப்பட்டு, பின்னர் காமராஜரால் பள்ளிகள் திறக்கப்பட்டன. இப்போது, மீண்டும் பள்ளிகளை மூடும் விதமாகப் புதிய கல்விக் கொள்கை உள்ளது. நீட் தேர்வு போன்று கலைக் கல்லூரிகளிலும் தேர்வு நடத்துவதற்கான அம்சம் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் இல்லை. இப்போது குடிப்பதற்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. தண்ணீருக்காக மக்கள் கண்ணீர் விடும் நிலை உள்ளது. இப்போது வந்துள்ள ஆபத்தை எதிர்த்து வழக்கம் போல திராவிடர் கழகம் குரல் கொடுத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் மு.அ.பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் வெ.ஜீவகுமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மைய மாவட்டச் செயலர் ச.சொக்கா ரவி, ஐஜேகே மேற்கு மாவட்டச் செயலர் ச. சிமியோன் சேவியர்ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலர் எஸ்.எம்.ஜெயினுல் ஆபிதின், மனித நேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலர் ஐ.எம்.பாதுஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.