கரூர், மே 23-கரூர் மக்களவைத் தேர்தல் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் செ.ஜோதிமணி, அதிமுக சார்பில் மு.தம்பிதுரை உள்ளிட்டோர் போட்டியிட்டனர். மேலும் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.செந்தில்பாலாஜியும், அதிமுக சார்பில் வி.வி.செந்தில்நாதன் உட்பட 63 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அரவக்குறிச்சியில் அனைத்து சுற்றுகளிலும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி முன்னிலை வகித்தார். அதே போல் ஜோதிமணியும் தொடர்ந்து முன்னிலை வகித்தார். கரூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 79.11 சதவீதமும், அரவக்குறிச்சி சட்டமன்றத் இடைத்தேர்தலில் 84.33 சதவீதம் வாக்குகள் பதிவானது. இரண்டு தேர்தலிலும் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை அன்று வாக்கு எண்ணும் மையமான தளவாப்பாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.மாலை 6 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 3 லட்சத்து 43 ஆயிரத்து 412 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். இதே போல் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி 20 ஆயிரத்து 75 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். தொடர்ந்து முன்னிலை வகித்த இரு வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.