நெல்லை டவுனில் போக்குவரத்து மாற்றம்
திருநெல்வேலி, மே 5-நெல்லை மாநகராட்சிக்கு, தாமிரபரணி ஆற்றின் அரியநாயகிபுரம் அணைக்கட்டு நீர்த்தேக்க பகுதியிலிருந்து நாளொன்றுக்கு 50 மில்லியன் லிட்டர் தண்ணீரை குழாய் மூலம் கொண்டுவரப்பட்டு, பேட்டை காமராஜர் பள்ளி மாநகராட்சி வளாக பகுதியில் சுத்திகரிப்பு செய்து நெல்லை மாநகராட்சி பகுதிகள் முழுமைக்கும் குடிநீர் விநியோகம் செய்வதற்கான குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது குழாய் பதிக்கும் பணிகள் வரும் 07.05.2019 செவ்வாய்க்கிழமை முதல் டவுண் காட்சி மண்டபத்திலிருந்து அருணகிரி தியேட்டர் வரை 600 மி.மீ விட்டமுள்ள இரண்டு இரும்பு குழாய்கள் பதிக்கப்படவுள்ளது. எனவே அந்த வழியாக வரக்கூடிய பேருந்து வாகனங்கள், பேட்டை - சேரன்மகாதேவி - முக்கூடல் - கடையம்மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் நெல்லையப்பர் கோயில் சன்னதி - சந்திபிள்ளையார் கோயில் - காட்சி மண்டபம் வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தென்காசி மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் வண்ணார்பேட்டை - தச்சநல்லூர் - ராமையன்பட்டி - கண்டியப்பேரி - பழையபேட்டை வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின், நகர கோட்ட நிர்வாக பொறியாளர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஏரல் அருகே கார் கதவை உடைத்து 24 பவுன் நகை
தூத்துக்குடி, மே 5-ஏரல் அருகே கார் கதவை உடைத்து உள்ளே இருந்த சுமார் 24 பவுன் நகை மற்றும் 2 செல்போன்களை திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் இடையர்குளம் பகுதியை சேர்ந்தவர் அதிசயராஜ். இவரது மகன்ஆரோக்கியராஜ் பென்சிங் (33). இவர் தூத்துக்குடி மாவட்டம்ஏரல் அருகே பண்ணைவிளையிலுள்ள உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்து உள்ளார். தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக காரில் சென்றுள்ளனர். காரை ஆற்றங்கரையோரத்தில் நிறுத்தி விட்டு குடும்பத்துடன் அனைவரும் குளிக்கச் சென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது காரின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆரோக்கியராஜ் காரின் உள்ளே சோதனை செய்தபோது அவர்கள் வைத்திருந்த சுமார் 24 பவுன் நகை மற்றும் 2 செல்போன்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.4.5லட்சம் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஆழ்வார்திருநகரி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 செல்போன் திருட்டு,ரப்பர் கம்பெனியில் ரூ.1.5 லட்சம் கொள்ளை
நாகர்கோவில், மே 5-திருநெல்வேலி மாவட்டம், சிதம்பராபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் (48). இவர், கன்னியாகுமரி மாவட்டம், தாமரைகுட்டிவிளை பகுதியில் சொந்தமாக ரப்பர் கம்பெனி நடத்திவருகிறார். வழக்கம்போல், சனியன்று பணிகளை முடித்துவிட்டு தனது கம்பெனியை பூட்டி விட்டு சென்றார். மறுநாள்காலையில் கம்பெனியை திறக்க வந்த போது, அங்கு கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.உள்ளே சென்ற போது, ஆங்காங்கே பொருள்கள் சிதறியும், மேஜை டிராயரில் வைத்திருந்த ரூபாய் 1.5 லட்சம் ரொக்கபணமும் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் முருகேசன் கொடுத்த புகாரின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், கம்பெனியில் பதிவாகியிருந்த கைரேகைகளை எடுத்து சென்றனர். இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.