பெரம்பலூர் மாவட்டத்தில் 2,001 பேர் ஆசிரியர் தேர்வில் பங்கேற்பு
பெரம்பலூர், ஜூன் 8- பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி, கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பனிமலர் மேல்நிலைப்பள்ளி, தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி, மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 6 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1 சனிக்கிழமை நடைபெற்றது. இத்தேர்வை 2,001 நபர் எழுதினர். இதில் 290 நபர் தேர்வில் பங்கேற்கவில்லை. இத்தேர்வு பணிகளில் 224 அலுவலர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர். பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. ஆய்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கு.அருளரங்கன், வட்டாட்சியர் பாரதிவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்களின் பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை
செ.ராமலிங்கம் உறுதி
சீர்காழி, ஜூன் 8- கொள்ளிடம் பகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய மயிலாடுதுறை எம்பி செ.ராமலிங்கம், அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று உறுதி கூறினார். நாகை மாவட்டம் கொள்ளிடம் கிழக்கு ஒன்றியத்தில் ஆர்பாக்கம், பச்சைபெருமாள் நல்லூர், திருமுல்லைவாசல், புதுப்பட்டினம், கொடியம்பாளையம் உட்பட 19 ஊராட்சிகளில் 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி, வீதியாக சென்று மயிலாடுதுறை எம்பி செ.ராமலிங்கம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசியது, நிதி ஒதுக்கீடு செய்த பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து தொகுதியில் என்னென்ன குறைபாடுகள் இருக்கிறதோ, அவற்றையெல்லாம் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பேன். என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு, நம்பிக்கைக்கு உகந்தவனாக பணிபுரிவேன் என்றார். திமுக மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன், முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மலர்விழி திருமாவளவன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காழிகலைவாணன், சீர்காழி நகர செயலாளர் தம்பிசுப்பராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.