தஞ்சாவூர், ஜூன்16- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில், மத்திய நிதித் திட்டத்தில் விடுபட்ட அனைத்து விவசாயிகளையும் சேர்க்கும் பொருட்டு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியர் க.ஜெயலட்சுமி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் முத்திரைத்தாள் கட்டணம் அ.கமலக்கண்ணன் தலைமை வகித்தார். இத்திட்டத்தின் முதல் கட்டமாக 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருந்த சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டொன்றுக்கு 6 ஆயிரம் நிதி உதவியானது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் தற்போது அனைத்து விவசாயிகளுக்கும், அதாவது சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே உயர் வருவாய் பிரிவினர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்களிக்கப்பட்ட நபர்கள் தவிர அனைத்து தகுதியுள்ள விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் அளித்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.