tamilnadu

ஏழை எளிய மக்களுக்காக துவங்கிய திருச்சி ஆயுதப்படை உணவகம் தனியாரின் நவீன ஓட்டலாக மாறியது

திருச்சிராப்பள்ளி, மே 27-திருச்சி மாநகர காவல் ஆயுதப்படை காவலர்கள் மாநகரின் பாதுகாப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் திருச்சி மாநகரில் மன்னார் புரத்திலிருந்து கருணாநிதி நகர் வரை உள்ள ஏழைகளின் உணவு பசியும் தீர்த்து வந்தனர். இதற்கு உதாரணமாக விளங்கியது மாநகரஆயுதப்படை சிற்றுண்டி உணவகம்.

குறைந்த விலையில்  தரமான உணவு

இந்த உணவகமானது கேகே நகர் உழவர் சந்தை அருகில் பொதுமக்களுக்கு சேவையாற்றும் வகையில் அப்போதைய மாநகர காவல்ஆணையராக இருந்த ஜாபர் சேட்டால் 28.3.2008 அன்று துவங்கப்பட்ட இந்த உணவகமானது பல்வேறு வகையில் பொதுமக்களுக்கு சேவையாற்றி வந்துள்ளது. குறிப்பாக ஏழைஎளிய மக்கள் பயன்பெறும் வகையில் இங்கு விற்கப்படும் உணவுகளின் விலைப்பட்டியலானது தரமான உணவு வகைகளை குறைந்தவிலையில் வழங்கி வந்துள்ளது.இந்த உணவகத்தில் சேவைமனப்பான்மையுடன் ஐந்து காவலர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இந்த உணவகத்தில் காலை நேரங்களில் இட்லி ரூபாய் 5, தோசை வகைகள் 15 முதல் 25 வரையிலும் பூரி (2)ரூபாய் 15 க்கும் மதிய வேளையில் சாத வகைகளும் இரண்டு நாட்கள் அசைவ உணவு வகைகளும், இரவு நேரங்களில் டிபன் வகைகளான இட்லி, தோசை, புரோட்டாபோன்றவைகளும் மிகச் சிறப்பான முறையில் பொதுமக்களுக்கு வழங்கி வந்தனர்.மேலும் உடலுக்குஎவ்வித தீங்கும் ஏற்படுத்தாத வகையில் உணவுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம்இந்தப் பகுதியில் கட்டிட வேலைக்கு செல்பவர்களும் இங்கு வந்து உணவு வகைகளை குறைந்த விலையில் வாங்கிபயன்பெற்று வந்தனர். 

புதிய கட்டட வாடகை  ரூ.2 லட்சம்

மேலும் இந்த உணவகத்திற்கு எந்தவிதமான வாடகை கட்டணங்கள் இல்லாமல் இயங்கி வந்தது. இந்த நிலையில் கடந்த 11 ஆண்டுகளாக இயங்கி வந்தஇந்த உணவகமானது தற்போது அதன் அருகில் இருந்த காலி இடத்தில் ரூபாய் 85 லட்சம் செலவில் அனைத்து வசதிகளுடன் மேஜை மற்றும் தளவாட சாமான்களும் கொண்ட உணவகமாக புதிய கட்டிடம் கட்டப்பட்டு குளிரூட்டப்பட்ட உணவகமாக மாற்றப்பட்டு தற்போது தனியார் வசம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. இவ்வாறு தனியார் வசம் ஒப்படைக்கும் போது புதிய கட்டிடத்திற்கான வாடகையாக சுமார் 2 லட்சம் வரை வசூலிக்க இருப்பதாகவும் தெரியவருகிறது.இவ் வாறு வசூலிப்பதன் மூலம் வழங்கப்படும் உணவு வகைகளின் விலையை உயர்த்தி வழங்கினால் மட்டுமே அவர்களால் மேற்கண்ட தொகையினை வழங்க இயலும். ஆகையால் இங்கு விற்கப்பட இருக்கும் உணவுப் பொருட்களின் விலையும் உயர்த்தப்படும் என தெரியவருகிறது. இதனால் இந்த உணவகமானது பொது மக்களுக்கு சேவையாற்றும் வகையில் குறைந்த விலையில்தரமான உணவுகளை வழங்கி வரும்நிலையில் அது மாற்றமடைந்து, வரும் ஒன்றாம் தேதி முதல் சோதனை அடிப்படையில் தனியாரால் துவங்கப்பட்டு ஒன்பதாம் தேதி முதல் நிரந்தரமாக இயங்கவுள்ளது. இந்தஉணவகம் ஆனது பொதுமக்களுக்கு சேவை செய்யும் வகையில் துவங்கப்பட்டு தற்போது வியாபார அடிப்படையில் மாற்றப்பட உள்ளது. இந்த உணவகத்தில் விற்கப் பட இருக்கும் உணவுகளின் விலைகளும் அதிக விலையில் விற்கப்படவிருப்பதாக தெரியவருகிறது. மேலும் ஏற்கனவே இயங்கி வந்த உணவக கட்டிடமானது இடிக்கப்பட்டு தற்போது துவங்க இருக்கும் உணவகத்திற்கான வாகனங்கள் நிறுத்துமிடமாக மாற்றப்படும் பணி நடைபெற்று வருகிறது.இதனால் இந்த உணவகத்தில் பயன்பட்டு வந்த ஏழை எளிய மக்கள்அதிக அளவில் பாதிப்படைவார்கள் என தெரியவருகிறது. இதனை மாற்றியமைத்து பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பழைய விலைகளிலேயே உணவுப் பொருட்களை வழங்கிட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.