திருச்சிராப்பள்ளி, ஜூலை 5- இந்திய ரயில்வேயை தனியாருக்கு கொடுக்கும் நூறு நாள் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். 55 வயது அல்லது 30 ஆண்டுகள் பணி முடிந்து இருந்தால் பணி தகுதி அடிப்படையில் கட்டாய ஓய்வு திட்டத்தை கைவிட வேண்டும். மூத்த குடிமக்கள் மானியத்தை கைவிட கோரும் கிவ் ட் அப் சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும். பணிமனை மற்றும் உற்பத்தி பிரிவுகளை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் போக்கினை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் பொன்மலை கிளைகள் சார்பில் வெள்ளியன்று பொன்மலை ஆர்மரிகேட் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டிஆர்இயு பொன்மலை கோட்ட தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி உதவி பொதுச் செயலாளர்கள் மண்னை.மனோகரன், மனோகர், டிபிஜெ கண்ணன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் டிவிஷன் நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.