tamilnadu

img

நீதிமன்றத்தில் வழக்கு இருந்தும் அதிகாரிகள் அத்துமீறல்

கும்பகோணம், ஜூன் 1- தஞ்சாவூர் முதல் விக்கிரவாண்டி வரையிலான நான்கு வழிச்சாலை திட்டத்திற்காக குடியிருப்பு வீடுகள், விளைநிலங்கள் உள்ளிட்டவை அழித்து சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதில் திருப்பனந்தாள் கோயிலுக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலத்தை சுமார் முப்பது வருடங்களாக இரண்டு தலைமுறையாக திருப்பனந்தாள் பகுதியை சேர்ந்த இக்பால் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இதில் நான்கு வழிச்சாலை நில எடுப்பிற்கு இக்பால் விவசாயம் செய்யும் சுமார் இரண்டரை ஏக்கர் நிலத்தை எடுப்பதற்காக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வாழை பயிரிட்டு அறுவடை நேரத்தில் நிலத்தை எடுக்க அதிகாரிகள் வந்தனர். காலங் காலமாக நாங்கள் ஆர்டிஆர் பதிவு பெற்று விவசாயம் செய்த நிலத்தை எடுப்பதற்கு எங்களுக்கு உரிய இழப்பீடு வேண்டும் எனக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு இக்பால் தொடுத்தார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் திடீரென சனிக்கிழமை ராட்சத எந்திரங்களைக் கொண்டு விளைந்த வாழைத் தோப்பில் அழிக்கும் பணியில் சாலை ஒப்பந்தக்காரர்கள் ஆன வட மாநிலத்தைச் சேர்ந்த பட்டேல் நிறுவனம் மற்றும் நில எடுப்பு அதிகாரி சுரேஷ் பாபு ஆகியோர் சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள வாழையை அழித்து நாசமாக்கினர்.முன்னதாக விவசாயி இக்பாலிடம் போனில், நில எடுப்பு அதிகாரி சுரேஷ் பாபு மிரட்டும் தொனியில் பேசினாராம். இதற்கு விவசாயி,  வழக்கு நிலுவையில் உள்ளதை கூறி வாழையை அறுவடை செய்து கொண்டு நிலத்தை ஒப்படைத்து விடுகிறேன். 2 மாத காலக் கெடு கொடுங்கள் என மன்றாடிக் கேட்டும், எவ்வித பேச்சையும் கேட்காமல் காவல்துறையை கொண்டு சாலைப் பணிக்காக வாழைத் தோட்டத்தை அழித்து அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறினார்.இது சம்பந்தமாக அகில இந்திய விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் பிஜி.ராஜேந்திரன், நகரச் செயலாளர் சாமிநாதன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சாமிக்கண்ணு ஆகியோர் அதிகாரிகளிடம் கால அவகாசம் கேட்டும் ஏற்றுக்கொள்ளாமல் வாழைகளை அழித்து சாலை போடுவதற்கான வேலை தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் அதிகாரிகள் அத்துமீறி நடந்ததை முறையிட்டு வழக்கு தொடரப்படும் என தெரிவித்தனர்.