திருவாரூர் செப்16- 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வேலை செய்யும் சுமைப்பணி தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் சிஐடியு திருவாரூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.பி.கே.பாண்டியன் தலைமையேற்றார். சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன், சங்க மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் எம்.கே.என்.அனிபா, டாஸ்மாக் சங்க மாவட்ட பொருளாளர் அசோக்ராஜ், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர்கள் ஜி.ரகுபதி, ஆர்.மோகன், சங்க மாவட்ட பொருளாளர் ஜெ.மனோகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். 44 மத்திய தொழிலாளர் நல சட்டங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக 4 தொகுப்புகளாக மாற்றுவதை கைவிட வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை ஊதிய சட்டத்திற்கும், சமூக நீதிக்கும் புறம்பாக குறைக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். நெற்கொள்முதல் நிலையங்கள், ரயில்வே சரக்கு கிடங்குகள், திறந்தவெளி சேமிப்பு கிடங்கு ஆகியவற்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியாக கூலி வழங்க வேண்டும். மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.