மயிலாடுதுறை, ஜூன் 30- நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்ன ன்பந்தல் ஏவிசி கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு ஏவிசி கல்வி நிறுவனங்களின் தலைவர் என்.விஜயரெங்கன் தலைமை வகித்து வரவேற்றார். செயலர் கே.கார்த்திகேயன், பொருளாளர் என்.ஞானசுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ஆர்.நாகராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், இதுவரை பெற்றோர்கள் பாதுகாத்து வந்தார்கள். இதன் பிறகு பெற்றுள்ள பட்டம் கேடயமாக இருந்து மாணவர்களை பாதுகாக்கும். சாதனையாளர்கள் யாரும் ஒரே நாள் இரவில் தோன்றியவர்கள் இல்லை. கடின உழைப்பு, நேர்மையான சிந்தனைகளால் உருப்பெற்றார்கள் என்றார். விழாவில் ஆயிரத்து 195 மாணவர்கள் பட்டம் பெற்றனர். கல்லூரி ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.