tamilnadu

img

தோழர் வி.பி.சிந்தன் நினைவு தினம் அனுசரிப்பு

திருப்பூர், மே 8 –தமிழக தொழிலாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்த வி.பி.சிந்தன் 32ஆம் ஆண்டு நினைவு தினம் மே 8ஆம் தேதி திருப்பூரில் எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது.திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே அரிசிக்கடை வீதியில் சுமைப்பணித் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வி.பி.சிந்தன் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிஐடியு சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ராஜகோபால், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், சாலையோர வியாபாரிகள் சங்கச் செயலாளர் பி.பாலன், சுமைப்பணித் தொழிலாளர் சங்கத் தலைவர் சதாசிவம் உள்ளிட்டோர் வி.பி.சிந்தன் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சுமைப்பணித் தொழிலாளர்கள் கலந்து கொண்டு வி.பி.சிந்தனுக்கு அஞ்சலி செலுத்தினர்.அதேபோல் திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள சிஐடியு அலுவலகம் முன்பாக தோழர் வி.பி.சிந்தன் படம் அலங்கரித்து வைக்கப்பட்டு சிஐடியு, மார்க்சிஸ்ட் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், பனியன் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத், மோட்டார் சங்க தலைவர் விஸ்வநாதன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாநகரச் செயலாளர் பி.முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினர்.அனுப்பர்பாளையம் சிஐடியு பாத்திரத் தொழிலாளர் சங்கம் சார்பில் பாத்திர சங்க அலுவலகம் முன்பாக வி.பி.சிந்தன் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் பாத்திரத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் குப்புசாமி, குபேந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியின் நகரக்குழு உறுப்பினர் அ.உமாநாத் உள்பட பாத்திரத் தொழிற்சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

;