கத்தரி வெயில் காலத்தில் பாதுகாப்பை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்
அரியலூர், மே 8 -கத்தரி வெயில் காலத்தில் அரியலூர் மாவட்டத்தில் வழக்கத்தைவிட கூடுதலாக வெப்பநிலை இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், அரியலூர் மாவட்ட மக்கள் அனைவரும் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்படும் சூழ்நிலையில் வெளியில் செல்லும்போது, குடிநீர் கொண்டு செல்ல வேண்டும். தாகம் இல்லாவிடினும், அவ்வப்போது போதுமான குடிநீரை அருந்த வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது கடுமையான பணிகளை செய்வதை தவிர்க்கவும். மது, தேநீர் மற்றும்காபி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் வெளியில் செல்லும்பொழுது வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள லேசான, வெளிரிய, தளர்வான முழுக்கை உடைகள் மற்றும் பருத்தி நூல்ஆடைகளை அணியவும், காலணிகள் மற்றும் குளிர்கண்ணாடிஅணிந்து செல்ல வேண்டும். நோய், இருதய நோய், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலான பகுதியில் கட்டிவைத்து, அதற்கு போதிய அளவு குடிநீர் மற்றும் தீவனம் கொடுக்க வேண்டும்.மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி, பொதுமக்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
சொட்டுநீர் பாசன மானியம் வேளாண் அலுவலகம் வேண்டுகோள்
தஞ்சாவூர், மே 8-நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் சொட்டுநீர் பாசனத்தில் மானியம்பெற்றிட, உரிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலரையோ அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு, பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மாலதி கேட்டுக் கொண்டுள் ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த ஆறு மாத காலமாக ஒரு துளி மழைநீர்கூட பெறாமல் வறட்சியான வானிலை நிலவுவதால் நீரை நாம் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பேராவூரணி பகுதியில் கடும் வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இந்த தருணத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடியை கருத்தில் கொண்டுஅவர்களின் வாழ்வதாரம் மேம்படும் பொருட்டு வேளாண் துறை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.வறட்சியான காலம் மட்டுமின்றி எப்பொழுதுமே நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தென்னை அதிகபடியாக சாகுபடி மேற்கொள்ளும் பேராவூரணி வட்டாரத்தில் சுமார் 6,250 ஹெக்டேரில் தென்னையும், 500 ஹெக்டேர் அளவில் நிலக்கடலையும், 200 ஹெக்டேரில் உளுந்து பயிரும் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கண்ட பயிர்களுக்கு நீர் மேலாண்மை மேற்கொள்ள சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனமே சிறந்த முறையாகும். சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் விரயமாகாமல், பயிரின் வேர் பகுதிக்கு நேரிடையாக வழங்கப்படுவதால் குறைந்த நீர் தேவையே போதுமானது. மேலும் கரையும் உரங்களையும் பயிருக்கு நேரிடையாக வழங்க இயலும். தென்னை, எண்ணெய் பனை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்திட சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வேளாண்துறை மூலம் சொட்டுநீர் பாசன கருவிகள் சிறந்த நிறுவனங்கள் மூலம் அமைத்து தரப்படுகிறது. சொட்டுநீர் பாசனத்தின் மூலம் மட்டுமே தென்னை மரங்களை வறட்சியின் பிடியில் இருந்து காப்பாற்ற முடியும். எனவே பேராவூரணி பகுதியில் ஆர்வமுள்ள விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், நில வரைபடம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு, ரேசன்கார்டு, சிறு குறு விவசாயிகள் சான்று ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதிவேளாண்மை உதவி அலுவலரையோ அல்லது வேளாண்மைஉதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.