tamilnadu

ஆறலியே  எம்மனசே…  -ந.காவியன்

அம்பத்தொரு  வருசமாச்சே…
ஆறலியே   எம்மனசே…
கம்பலயும்   கண்ணீருமா சுத்துறமே- நாங்க
கைக்கூப்பி   வெண்மணியில்  நிக்குறமே…

பள்ளிக்கொடம்   போகலியே…
பால்வாசம்  மாறலியே….
கொள்ளியில   பாவிதூக்கிப்  போட்டானே- அந்தக்
கொழந்தைகள்   கதறல்சத்தம்  கேக்குதையா !       
-( அம்பத்தொரு…)
பூமுடிச்சுப்    பாக்கலியே…
பொட்டழகு   சேக்கலியே…
‘பூமயிலு’   பொசுங்கித்தானே  போனாளே- அவ
பொழச்சிருந்தா   பேரப்புள்ளங்க   ஆடுமல்லோ?
-(அம்பத்தொரு..)
ஏசுநாதர்    பண்டிகையாம்…
இருபத்தஞ்சு,    மார்கழியாம்…
நீசப்பய      திட்டம்போட்டுக்  கொன்னானே- இங்கே
நீத்துப்போன   நாப்பத்துநாலு   உசுரல்லோ?
-(அம்பத்தொரு…)
சேரியில      ஏத்துனமே !
செங்கொடியை    ஏந்துனமே !
போராட்டம்   அதிகக்கூலி  நெல்லுக்கல்ல- எங்க
பேருதந்த   கம்மூனிஸ்டு   கச்சிக்கல்லோ?
அம்பத்தொரு   வருசமாச்சே…
ஆறலியே    எம்மனசே…
கம்பலயும்   கண்ணீருமா   சுத்துறமே- நாங்க
கைக்கூப்பி   வெண்மணியில்  நிக்குறமே…