அம்பத்தொரு வருசமாச்சே…
ஆறலியே எம்மனசே…
கம்பலயும் கண்ணீருமா சுத்துறமே- நாங்க
கைக்கூப்பி வெண்மணியில் நிக்குறமே…
பள்ளிக்கொடம் போகலியே…
பால்வாசம் மாறலியே….
கொள்ளியில பாவிதூக்கிப் போட்டானே- அந்தக்
கொழந்தைகள் கதறல்சத்தம் கேக்குதையா !
-( அம்பத்தொரு…)
பூமுடிச்சுப் பாக்கலியே…
பொட்டழகு சேக்கலியே…
‘பூமயிலு’ பொசுங்கித்தானே போனாளே- அவ
பொழச்சிருந்தா பேரப்புள்ளங்க ஆடுமல்லோ?
-(அம்பத்தொரு..)
ஏசுநாதர் பண்டிகையாம்…
இருபத்தஞ்சு, மார்கழியாம்…
நீசப்பய திட்டம்போட்டுக் கொன்னானே- இங்கே
நீத்துப்போன நாப்பத்துநாலு உசுரல்லோ?
-(அம்பத்தொரு…)
சேரியில ஏத்துனமே !
செங்கொடியை ஏந்துனமே !
போராட்டம் அதிகக்கூலி நெல்லுக்கல்ல- எங்க
பேருதந்த கம்மூனிஸ்டு கச்சிக்கல்லோ?
அம்பத்தொரு வருசமாச்சே…
ஆறலியே எம்மனசே…
கம்பலயும் கண்ணீருமா சுத்துறமே- நாங்க
கைக்கூப்பி வெண்மணியில் நிக்குறமே…