சீர்காழி ஜூலை 14- கொள்ளிடம் அருகே நல்லநாயகபுரத்தில் லேசான காற்றில் இரண்டு மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் தரமான மின்கம்பங்களை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே நல்லநாயகபுரம் மெயின் ரோட்டின் ஓரத்தில் இருந்த இரண்டு தெரு மின் விளக்கு கம்பங்கள் அடியோடு முறிந்து கீழே விழுந்தன. இதனால் மின் கம்பிகளும் அறுந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லை. எனவே யாருக்கும் பாதிப்பு இல்லாமல் தப்பினர். இது குறித்து தகவலறிந்த மின் ஊழியர்கள் மின்னோட்டத்தை துண்டித்து வேறு பகுதியிலிருந்து நல்லநாயகபுரம் கிராமத்திற்கு மின்சாரம் வழங்கினர். இது குறித்து ஓய்வு பெற்ற உதவி பொறியாளர் ஒருவர் கூறுகையில், நல்லநாயகபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தரமற்ற சிமெண்ட் கான்கிரீட் மின்கம்பங்கள் நடப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மின் கம்பங்களில் மிகவும் சிறிய அளவிலான கம்பிகள் பெயரளவுக்கு பொருத்தப்பட்டுள்ளன. வலுவற்ற மெல்லிய கம்பிகள் மின்கம்பத்திற்குள் இருப்பதால் அவை எளிதில் முறிந்து விழுகின்றன. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தயார் செய்யப்பட்ட சிமென்ட் கான்கிரீட் மின்கம்பி களில் தடிமனான இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தன. இதனால் அவை பெரும்பாலும் முறிந்து விழாமல் இருந்தன. ஆனால் சமீப காலங்களாக கிராமப் பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் தரமற்று எளிதில் முறிந்து விழும் நிலையில் உள்ளன. லேசான சாதாரண காற்று வீசினாலே முறிந்து விழும் மின்கம்பங்கள் பலத்த காற்று வீசினால் அதிக எண்ணிக்கையில் முறிந்து விழுந்து விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்றார்.