tamilnadu

img

மின் கட்டண உயர்வை வாபஸ் பெறுக - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநாடு வலியுறுத்தல்

தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. 
திண்டுக்கல்லில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 12வது மாவட்ட மாநாடு புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெற்றது. மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக மாலையில்  நாகல்நகரிலிருந்து பேரணி புறப்பட்டு மாநாடு நடைபெறும் மகாலிங்க நாடார் திருமண மண்டபத்தை அடைந்தது. மாநாட்டின் கொடியை  மாவட்டக்குழு உறுப்பினர் பி.வள்ளியம்மாள் ஏற்றி வைத்தார். தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டத்தலைவர் எம்.ஜானகி மாநாட்டிற்கு தலைமை வகித்தார்.  வரவேற்புக்குழு தலைவர் டாக்டர் அமலாதேவி வரவேற்புரையாற்றினார். மாவட்டத்துணைத்தலைவர் எஸ்.எம்.பழனியம்மாள் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். மாநாட்டை துவக்கி வைத்து மாநில துணைத்தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.பாலபாரதி பேசினார். மாவட்டச்செயலாளர் ஜி.ராணி அறிக்கை சமர்ப்பித்து பேசினார். மாநாட்டை வாழ்த்தி மாநில செயலாளர் ஆர்.சசிகலா,  பேராசிரியர்கள் பாலசுந்தரி,  உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக பேரா. சோ.மோகனா,  திருநங்கை குணவதி,  சக்திக்கலைக்குழு ஃபெல்சி,  வாலிபர் சங்க மாவட்டச்செயலாளர் கே.ஆர்.பாலாஜி,  விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத்தலைவர் பி.வசந்தாமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தீர்மானங்களை முன்மொழிந்து மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வனஜா,  மாவட்ட துணைச்செயலாளர்   பாண்டியம்மாள் பேசினர். மத்தியக்குழு உறுப்பினர் வி. பிரமிளா நிறைவுரையாற்றினார். நகரச்செயலாளர் ராஜேஷ்வரி நன்றி கூறினார். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
கள்ளக்குறிச்சி மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்டும் துவங்க வேண்டும். 2 கேஸ் சிலிண்டர் இருந்தால் முதியோர் பென்சனை நிறுத்த வேண்டும் என்ற மாநில அரசின் உத்தரவை திரும்ப பெற வேண்டும். மின் கட்டண உயர்வை கடுமையாக உயர்த்தியதை வாபஸ் பெற வேண்டும்.   பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பணித்தளங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை மாநாட்டில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. (நநி)