திண்டுக்கல்:
மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக திருநங்கை மீது பொய் வழக்கு பதிவு செய்து, வீடு புகுந்து தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டித்து திண்டுக்கல்கோட்டாட்சியர் அலுவலகத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தினர் சனிக்கிழமை முற்றுகையிட்டனர். மாதர் சங்க மாநிலத் துணைத் தலைவரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான கே.பாலபாரதி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்டச்செயலாளர் ஜி.ராணி, மாவட்டத்தலைவர் எம். ஜானகி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வனஜா, பாதிக்கப்பட்ட திருநங்கை சமந்தா மற்றும்அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர். போராட்டத்தைத் தொடர்ந்து கோட்டாட்சியர் உஷாவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் முத்தமிழ் நகரைச் சேர்ந்த திருநங்கை சமந்தா. இவரதுவீட்டிற்கு எதிர்புறத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். மணல் கடத்தலில் இவர் ஈடுபட்டுவருகிறார் என்கின்றனர் சுற்றுவட்டாரத்தில் வசிப்பவர்கள். இவர் சில தினங்களுக்கு முன்பு டிராக்டரில் மணல் கடத்தி வந்ததாகவும் அப்போது சமந்தா வீட்டில் உள்ள நாய்கள் குரைத்து இடையூறு செய்ததாகவும் கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன், சமந்தா வளர்த்த பத்து நாய்களையும் விஷம் வைத்துக் கொலை செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சமந்தா திண்டுக்கல் தாலுகா காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் மீது நியாயமான விசாரணை நடத்தாமல் காவல்துறையினர் சீனிவாசன், அவரது மகன் லெட்சுமணன், நிவின்குமார் என்ற அப்புக்குட்டன் ஆகியோருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். காவல்ஆய்வாளர் தெய்வம், சமந்தாவின் வீட்டிற்குச் சென்று மிரட்டி அவரை அடித்து வீட்டை விட்டு விரட்டியுள்ளார். சாதியைச் சொல்லி திட்டியுள்ளார். மூன்றாம் பாலினத்தவரை திருநங்கை என்று அழைக்கும் வழக்கத்திற்கு வந்துள்ள நிலையில் சமந்தாவை அவமதித்து திட்டியுள்ளார். சமந்தா வசிக்கும் பகுதியில் சில இளைஞர்களை தூண்டிவிட்டு மற்றவர்களின் வீட்டுக் கதவுகளை தட்டி இது சமந்தா வீடுதானா என்றுதொல்லை கொடுக்கச் செய்துள்ளனர்.
இதைப் பயன்படுத்தி சமந்தா மீது பொய் வழக்குப் பதிவு செய்துசிறையில் அடைப்பதற்காக மணல்கொள்ளையர்களும், காவல் ஆய்வாளரும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். சமந்தா அளித்த புகாரின் மீது ஆறு மாதமாக காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில் அவர் மாதர் சங்கத்தினரை அணுகிநடந்த சம்பவங்களை கூறியுள்ளார். இதையடுத்து சமந்தாவிற்கு நியாயம் கேட்டு சனிக்கிழமை திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக
முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலபாரதி, “திருநங்கை சமந்தா காவல் ஆய்வாளர் தெய்வத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். சமந்தா வளர்த்த 10 நாய்களை மணல் கொள்ளையர்கள் விஷம் வைத்து கொன்றுள்ளனர். இதுதொடர்பாக சமந்தா புகார் கொடுத்துள்ளார். சமந்தா அவர்களுக்குஇடையூறாக இருக்கிறார் என்பதற்காக தாக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சமந்தா மீது போடப்பட்ட பொய்வழக்கை திரும்பப் பெறவேண்டும். மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். நாய்களை கொலைசெய்தது தொடர்பாக முதல் தகவலறிக்கை பதிவு செய்து விசாரணைநடத்துவதோடு உரிய நிவாரணம் வழங்கவேண்டும். சமந்தாமீது பொய் வழக்குப் போடுவது, தரக்குறைவாக அவதூறு பரப்புவதுநாகரீகமற்ற செயல். அவரது உயிருக்கு பாதுகாப்பளிக்க வேண்டும்.காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை தவறும்பட்சத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்டு மக்கள் மத்தியில் பொது விசாரணை நடத்தப்படும். மனித உரிமை ஆணையம், பெண்கள் ஆணையம், தாழ்த்தப்பட்டோர் ஆணையம், புளூகிராஸ் என அனைத்து அமைப்புகளுக்கும் புகார் அனுப்பப்படும்’‘ என்றார்.