tamilnadu

தருமபுரியில் ரூ.17 லட்சம் பறிமுதல்

தருமபுரி, ஏப்.3- தருமபுரி மாவட்டத்தில் தேர்தலையொட்டி நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் ரூ.17 லட்சத்து 9 ஆயிரத்தைதேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தருமபுரி மாவட்டத்தில், நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் இடைத் தேர்தலையொட்டி முதன்மைக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் கொண்ட குழு அமைக்கப்பட்டு முக்கிய இடங்களில் வாகனச்சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இக்குழுவினர்செவ்வாயன்று நடத்திய வாகனச் சோதனையில் பென்னாகரத்தில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.8 லட்சத்து 52 ஆயிரத்து 90 மற்றும் மற்றொரு குழுவினர் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சத்து 7 ஆயிரமும், பாப்பிரெட்டிப்பட்டியில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.5 லட்சத்து 36 ஆயிரமும், அதேதொகுதியில் மற்றொரு குழுவினர் நடத்திய சோதனையில் ரூ.86,250 மற்றும் அரூரில் நடைபெற்ற வாகனச் சோதனையில் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 625 என ஒரே நாளில் மொத்தம் ரூ.17 லட்சத்து 9 ஆயிரத்து 965 ஐ ஆவணங்கள் ஏதுமின்றி எடுத்து வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், இந்த ரொக்கப் பணத்தை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் ஒப்படைத்து அதற்கான ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

;