tamilnadu

img

ஏற்காடு கோடை விழா, மலர்க்காட்சி துவக்கம்

ஏற்காடு, மே 31-ஏற்காட்டில் 44 ஆவது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி வெள்ளியன்று துவங்கியது.சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 44 வது ஏற்காடு கோடை விழா, மலர்க்காட்சி வெள்ளியன்று தொடங்கி ஜூன் 1 மற்றும் 2 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகின்றது. இம்மலர்க்காட்சியினை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் என்.சுப்பையன் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ரா.பாஜிபாகரே துவக்கி வைத்தனர். இம்மலர்க்காட்சியில் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் 2 லட்சத்து 50 ஆயிரம் வண்ண ரோஜா, கார்னேசன், ஜெர்பெரா, ஆஸ்டர், சாமந்தி போன்ற மலர்களைக் கொண்டு காண்போரை வியக்க வைக்கும் வகையில் சென்னை எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம், கேப்டன் அமெரிக்கா, விமானி அபிநந்தனுடன் கூடிய மிக் 21 ராணுவ விமானம் மற்றும் “மரங்களை வளர்ப்போம் இயற்கையை காப்போம்” என்பதை உணர்த்தும் வகையில் உலக உருண்டை போன்ற உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.மேலும், குழந்தைகளை கவரும்வகையில் 15,000 வண்ண ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்ட பென்குயின், இன்ஃபினிட்டி ஸ்டோன்ஸ் உடன் கூடியதானோஸ் மற்றும் ஐ.சி.சி கிரிக்கெட் உலக கோப்பை 2019 மாதிரி போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் மா, பலா, வாழை, அன்னாசி, பப்பாளி, எலுமிச்சை முதலான அனைத்து வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு பழ அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அண்ணா பூங்கா மலர்க்காட்சி திடலில் ரோஜா, ஜெர்பேரா, ஆந்தூரியம்,, கார்னேசன், ஆர்கிட்ஸ், டெய்சி, லிமோனியம், அகபேந்தஸ், ரெட்ஹாட்போக்கர், கிரைசான்திமம், அல்ஸ்டோமேரியா, கிலாடியோலஸ், பேட்டு ஆப் பரடைஸ்,வில்லியம், ஹெலிகோனியம், டெல்பீனியம், ஹெலிகிரைசம் மற்றும் கோல்டன் ராட், ஆஸ்டர், நிலச்சம்பள்ளி போன்ற மலர்களைக் கொண்டு 100-க்கும் மேற்பட்ட வடிவங்களில் தோட்டக்கலைத் துறையினரின் கை வண்ணத்தில் மலர் அலங்காரம், மலர்களின் எழில் கோட்டமாக அமைக்கப்பட்டுள்ளது.இக்கண்காட்சியில் சேலம் மாவட்டத்தில் முக்கிய உற்பத்தி பொருட்களைவிளக்கும் வகையில் நம்ம சேலம்என்னும் சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டு சேலம் மாவட்டத்தில் சிறப்பு பெற்ற உற்பத்தி பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், இவ்விழாவினை முன்னிட்டு பல்வேறு வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் 3 நாட்களுக்கு மிக சிறப்பாக நடைபெறுகின்றது. முன்னதாக, இதன் துவக்க விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.திவாகர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் (பொ) ஜி.மாலினி உட்பட கூட்டுறவு சங்க பொறுப்பாளர்கள், அரசு அலுவலர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.