தேனி ,ஏப்.21- கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய- மாநில அரசுகள் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அமலில் உள்ளன. இதன் காரணமாக ஆண்டிபட்டி பகுதியில் ரூ.12 கோடி மதிப்பில் உற்பத்தி செய்யப்பட்ட வேட்டி -சேலைகள் தேக்கமடைந்துள்ளன. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவுத்தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் .
உற்பத்தியாளர்கள் வேலை செய்த நெசவாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நெசவாளர்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு வாழ்வாதாரம் இழந்துள்ளனர் .
ஆண்டிபட்டி பகுதிகளில் சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் ,முத்துகிருஷ்ணாபுரம், சண்முகசுந்தரபுரம், கொப்பையம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பணியாற்றி வருகிறார்கள் . இங்கு உற்பத்தி செய்யப்படும் சுங்குடி காட்டன்,செட்டிநாடு காட்டன்,பேப்பர் காட்டன்,காரைக்குடி காட்டன்,கோடம்பாக்கம் காட்டன் போன்ற சேலை ரகங்கள் புகழ்பெற்றவை .இந்த பகுதிகளில் ஒருநாளைக்கு 14 ஆயிரம் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தியாகும் சேலைகள் விருதுநகர், ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கும் கர்நாடகா,ஆந்திரா, கேரளா,குஜராத் போன்ற வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
விசைத்தறிக்கூடங்களும் அடைப்பு
ஊரடங்கால் போக்குவரத்து, சரக்கு வாகன சேவைகள் நிறுத்தப்பட்டன. ஆண்டிபட்டி பகுதியில் செயல்பட்ட விசைத்தறிக்கூடங்களும் அடைக்க ப்பட்டன. இந்த பகுதியில் வீட்டிலேயே விசைத்தறி இயந்திரங்கள் நிறுவி தொடர்ந்து உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து ஆண்டிபட்டி சுற்றுப்பகுதியில் உள்ள நெசவாளர்கள் கடந்த மார்ச் 23 ஆம் தேதியில் இருந்து நெசவு செய்த சேலைகள் தேங்கியுள்ளன. கடந்த 24 நாட்களாக உற்பத்தி செய்த 12 லட்சம் சேலைகள் தேங்கியுள்ளன.
அதிக அளவு தேங்கிக்கிடப்பதால் உற்பத்தியாளர்கள் ,வேலை பார்த்த நெசவாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்கள் .இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .
மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கிடுக:சிஐடியு
இதுகுறித்து சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்க தேனி மாவட்ட செயலாளர் எம்.காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது ,கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ரூ.12 கோடி மதிப்பில் சேலைகள் தேங்கி நிற்கிறது.இதன் காரணமாக நெசவாளர்கள் கூலி பெறமுடியாமல் ,அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் .மாநில அரசு நல வாரியங்கள் மூலம் ரூ.1000 ,அரிசி ,பருப்பு ,எண்ணெய் வழங்குவதாக அறிவிப்பு செய்தார்கள் . தொழிலாளர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை .இந்த சூழலில் வாரியம் மூலம் வழங்கப்படும் பென்ஷன் கூட இந்த மாதம் வழங்க வில்லை . நெசவாளர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை ,35 கிலோ அரிசி வழங்க வேண்டும் .அதுபோல உற்பத்தி செய்யட்ட சேலைகளை விற்பனைக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
(ந.நி)