மத்திய தொழிலாளர் அமைச்சர் தலைமையின் கீழ் ஒரே தேசிய சமூக பாதுகாப்பு வாரியமும், மாநிலத்தில் ஒரே சமூக பாதுகாப்பு வாரியமும் அமைக்கப்படுமாம். அதாவது கட்டுமானம் உள்ளிட்டு தமிழகத்தின் 17 முறைசாரா நல வாரியங்களும் கலைக்கப்பட்டு விடும்.
தமிழகத்தில் 17 முறைசாரா தொழிலாளர் நல வாரியங்கள் உள்ளன. கட்டுமானத் தொழிலாளர், உடலுழைப்புத் தொழிலாளர், அமைப்புசாரா ஒட்டுநர்கள், தையல், முடிதிருத்துவோர், சலவை, பனைமர தொழிலாளர், கைவினை தொழிலாளர், கைத்தறி மற்றும் பட்டு கைத்தறி, காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடுவோர், ஓவியர், பொற்கொல்லர், மண்பாண்ட தொழிலாளர், வீட்டுப்பணியாளர், விசைத்தறி நெசவாளர், பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர், சமையல் தொழிலாளர் என 17 நல வாரியங்கள் தொழிலாளர் துறையின் கீழ் செயல்படுகின்றன. கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தால், கட்டுமான பணியின் மொத்த மதிப்பீட்டில் 1 சதவீதம் நல வரியாக பெறப்படுகிறது. 2018-19ல் மட்டும் ரூ.567 கோடி நல வரி வசூல் ஆகியுள்ளது. 2018-19 நிதி ஆண்டில் புதிதாக 1,54,900 கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பி னர்களாக பதிவு செய்துள்ளனர். 2019 மார்ச் வரை 21538 வெளி மாநில கட்டுமானத் தொழிலாளரும் பதிவு செய்துள்ளனர். கட்டுமானத் தொழிலாளர் திறன், ஆற்றல், அறிவு மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு கட்டுமான கழகம் 4.1.2013 முதல் இயங்கி வருகிறது.
இலவசமாக அல்ல நலவாரிய நிதியிலிருந்து...
நல வாரிய நிதி ரூ.6 கோடி ஒதுக்கி, இதுவரை 2300 கட்டுமானத் தொழிலாளருக்கு தேசிய தொழில் நெறி கல்வி பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் மட்டும் நகரும் மருத்துவ மனைகள் மூலம் 80934 கட்டுமான தொழிலாளர் பயன் அடைந்துள்ளனர். மேலும் 47 நகரும் மருத்துவ வாக னங்கள் ரூ.18 கோடி செலவில் வாங்க, அரசு அனு மதித்துள்ளது. அங்கன்வாடி மையங்கள் மூலம் ஊட்டச்சத்து வசதி 1036 கட்டுமான தொழிலாளர் குழந்தைகளுக்கு கிடைத்துள் ளது. 400 அம்மா உணவகங்களில் 4.3.2019லிருந்து கட்டு மானத் தொழிலாளருக்கு இலவச உணவு வழங்கப்படு கிறது. இலவசம் என அமைச்சர் கூறுவது தவறான தகவல். இதற்கான அசல் செலவு நல வாரிய நிதியிலிருந்து எடுக்கப்படுகிறது. 1995 முதல் செயல்பட்டு வரும் கட்டுமானத் தொழிலா ளர் நல வாரியத்தில் ரூ.2000 கோடிக்கும் மேல் இருப்பு உள்ளது. ஆனாலும், இவர்களுக்கான பணப்பயன்களை இதர மாநிலங்களைப் போல் உயர்த்த அரசு மறுத்து வருகிறது. தில்லியில் மாத ஓய்வூதியம் ரூ.3000; கேரளா வில் மாத ஓய்வூதியம் ரூ.1200; தமிழகத்தில் ரூ.1000 பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளது. 1,94,281 கட்டுமானத் தொழிலாளருக்கு 2018-19ல் ரூ.112 கோடி நலத்திட்ட பணப்பயன்கள் வழங்கப்பட்டுள்ளது. அமைப்பு சாரா ஓட்டுநர் நல வாரியத்தில் 2018-19 நிதி யாண்டில், 7344 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 13838 ஓட்டுநருக்கு ரூ.6.2 கோடி பணப்பயன் வழங்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன வரியில் 1 சதவீதம் கூடுதலாக பெறப்படும் நிதி, 2018-19ல் வரவு ரூ.10.21 கோடியாகும்.
பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிட வேண்டும்
கட்டுமானம், ஒட்டுநர் நல வாரியங்கள் தவிர, இதர 15 முறைசாரா தொழிலாளர் நல வாரியங்கள் செயல்பட மாநில அரசுதான் பட்ஜெட்டில் உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 2018-19 ல் 15 வாரியங்களில் 71621 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 2,32,478 பயனாளிகளுக்கு ரூ.78 கோடி பணப்பயன் வழங்கப்பட்டுள்ளது. 2019-20க்கு ரூ.150 கோடி, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து பணப்பயன் கேட்பு மனுக்கள் மீதும் பரிசீலித்து, நிதி வழங்கிட இந்த ஒதுக்கீடு போதுமானதல்ல. 15 முறைசாரா, தொழிலாளர் நல வாரியங்களில் பல்வேறு பணப்பயன் மனுக்கள் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் உள்ளன. பணியிடத்தில் விபத்து மரணம் அடையும் கட்டுமானத் தொழிலாளர் (பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத) குடும்ப வாரிசுகளுக்கு ரூ.5லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது. ஆனால் ஒட்டுநர் உள்ளிட்ட 16 முறைசாரா தொழிலாளர் பணியிடத்திலோ, வெளியிலோ விபத்து மரணம் அடைந்தால், வாரிசுக்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே நிவார ணம் வழங்கப்படுகிறது. உயர் பண மதிப்பு இழப்பு, சரக்கு மற்றும் சேவைவரி, உப்பளங்களின் குத்தகை காலம் புதுப்பிக்காதது போன்ற பல காரணங்களால் ஒட்டுமொத்த முறைசாரா தொழில்க ளும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைக் கோ, நிரந்தரமான தொடர்ச்சியான வருமானத்திற்கோ பாது காப்பு இல்லை.
முத்தரப்புக் குழுக்கள்
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கக் கூடிய நல வாரிய முத்தரப்புக்குழுக்கள் 17 நல வாரியங்களி லும் தற்போது இல்லை. 2014ல் கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நல வாரிய முத்தரப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அவைகளின் ஆயுளும் முடிந்துவிட்டது. சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங் கங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுத்து, முத்தரப்புக் குழுக்கள் அமைத்து, நல வாரியங்களில் செயல் பாட்டுக்கு வழிகாட்டும் ஏற்பாட்டை செய்ய அரசு தவறி வருகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான மாவட்ட கண்காணிப்புக்குழுக்களும் முறையாக செயல்படு வதில்லை. சில மாவட்டங்களில் ஆட்சித்தலைவரின் பரிந்து ரைகளை, மாவட்ட நல வாரிய தொழிலாளர் உதவி ஆணை யர் (சமூகபாதுகாப்பு)கள் உதாசீனப்படுத்துகின்றனர். பல மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்கள் (சமூக பாதுகாப்பு) தொழிலாளர்களை, தொழிற்சங்கத் தலைவர்க ளை அவமதிக்கும் வகையில் செயல்படுவதை அரசு கண்டு கொள்ளாத நிலை உள்ளது. நல வாரிய தலைமை அலுவல கத்திலும், மாவட்ட அலுவலகங்களிலும் போதுமான நிரந்தர ஊழியர்கள் நியமிக்கப்படுவதும் இல்லை.
மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி
சமூக பாதுகாப்பு என்பது தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமை; அது யாசகமல்ல. சமூக பாதுகாப்பு திட்டங்க ளை மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு சீர்குலைத்து வருகின்றன. மத்தளத்திற்கு இரு பக்கமும் இடி! 44 அடிப்படை தொழிலாளர் சட்டங்களை 4 சட்டத் தொகுப்புகளாக தொழில் நடத்துவோர் வசதிக்காக சுருக்க வுள்ளோம் என நிதி அமைச்சர் மத்திய பட்ஜெட் சமர்ப்பித்து பேசும் போது கூறினார். சம்பள சட்டத் தொகுப்பு என்பது, குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை குப்பையில் போடும் ஏற்பாடு ஆகும். ஒட்டுமொத்த தொழிற்சங்க இயக்கமும், 2016 விலைவாசிப்புள்ளி அடிப்படையில் மாத குறைந்த பட்ச ஊதியம் ரூ.18000-மும், விலை உயர்வை ஈடுகட்டும் பஞ்சப்படியும் கேட்டு தொடர்ந்து பல வேலை நிறுத்தங்களை நடத்தியுள்ளன. தற்போது மோடி அரசு, நிபுணர் குழு பரிந்துரை என்ற பெயரில் ரூ.9000 குறைந்தபட்ச ஊதியம், தேசிய அடிமட்ட குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ.178 எனவும் அறிவித்து தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கிறது. சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பு சட்டமானால், அகில இந்திய முறைசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பு சட்டம் 2008, கட்டிட, கட்டுமான தொழிலாளர் சட்டம் 1996, தொழிலா ளர் நட்ட ஈட்டுசட்டம், 1923, பிரசவ நிதி சட்டம் 1961, கருணைத் தொகை (கிராஜிவிட்டி) சட்டம், 1972, இரும்பு தாது, மங்கனீஸ், குரோம் தாது நல நிதி சட்டம் 1976, பீடி தொழி லாளர் நல நிதி சட்டம் 1976, சினிமா தொழிலாளர் நல நிதி சட்டம் 1981 உள்ளிட்ட சட்டங்கள் ரத்து ஆகிவிடும். மத்திய தொழிலாளர் அமைச்சர் தலைமையின் கீழ் ஒரே தேசிய சமூக பாதுகாப்பு வாரியமும், மாநிலத்தில் ஒரே சமூக பாது காப்பு வாரியமும் அமைக்கப்படுமாம். அதாவது கட்டுமானம் உள்ளிட்டு தமிழகத்தின் 17 முறைசாரா நல வாரியங்களும் கலைக்கப்பட்டுவிடும். இவைகளும் வெறும் ஆலோசனை கள் வழங்கும் வாரியங்களாக சுருக்கப்பட்டு, தனியார் நிறுவ னங்கள் மூலம் சமூக பாதுகாப்பு வழங்கும் புதிய நடைமுறை அமலுக்கு வரும். எந்த ஒரு சமூக பாதுகாப்பு பணப்பய னுக்கும், அரசு நிர்ணயிக்கும் மாத ஊதியத்தில் 12.5 சத வீதத்தில் தொழிலாளி அரசுக்கு செலுத்தினால் மட்டுமே கிடைக்கும். ஏற்கனவே பதிவு செய்துள்ள தொழிலாளர்க ளின் பதிவு ரத்தாகிவிடும்.
மோசடி பென்சன் திட்டம்
2019 மார்ச் 5லிருந்து பிரதமமந்திரி ஓய்வூதிய திட்டம் 40 கோடி முறைசாரா தொழிலாளர்க்கானது என அறி விக்கப்பட்டு அமலாகி வருகிறது. இதில் நாடுமுழுவதும் 30 லட்சம் பேரும், தமிழகத்தில் 47828 பேரும் பதிவு செய்துள் ளனர். மாத ஓய்வூதியம் ரூ.3000 யாருக்கு? 18 வயது முதல் 40 வயது வரை உள்ள முறைசாரா தொழிலாளி மாதா மாதம் ரூ.55லிருந்து ரூ.200வரை, 60 வயதாகும் வரை, அரசுக்கு பங்களிப்பு செலுத்தி வந்தால் மட்டுமே ரூ.3000 கிடைக்கும். 40 வயதுக்கு மேல் உள்ள தொழிலாளிக்கு இத்திட்டம் பொருந்தாது. தற்போது ரூ.1000 ஓய்வூதியம் பெற்று வருபவருக்கு, அது உயராது! மோடி அரசின் மோடி மஸ்தான் மோசடி பென்சன் திட்டம் இது. முறைசாரா தொழிலாளர்களை பொறுத்தவரை, அவர்க ளின் பங்களிப்புத் தொகை பெறாமல் அரசு கண்ணியமான ஓய்வூதியம் / சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். மாத ஓய்வூதியம் ரூ.6000 ஆக உயர்த்த வேண்டும், தொழி லாளர்களின் பங்களிப்பு தொகை கேட்கக்கூடாது என்பதே நமது கோரிக்கை. முறைசாரா தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்து வருகிற ஆகஸ்ட் 1ல் தமிழகம் முழுவதும், மாவட்ட நல வாரிய அலுவலகங்களை சிஐடியு சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது.\
கட்டுரையாளர் : சிஐடியு மாநில துணைத்தலைவர்