சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக பெருகி வரும் கடும் பாலியல் குற்றங்களும், அரசு நிறுவனங்களை தவிர்த்த அனைத்து தனியார் நிறுவனங்களிலும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் உழைப்பு சுரண்டலும், பெண்ணிய போராட்டத்திற்கான அவசியத்தை உணர்த்துகிறது. பெரும் முதலாளிகள் தங்களின் லாப நோக்கிற்காக, விவசாய பொருட்களில் செய்த மரபணு மாற்றம்போல, ஒப்பனை பொருட்களையும், ஆடை அணிகலன்களையும் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள், திட்டமிட்டே பெண்ணியத்தின் முக்கிய கூறுகளை மாற்றம் செய்து, அடிப்படையற்ற போலி பெண்ணியத்தை சமுகத்தில் திணிக்க முயல்கின்றனர். வணிக உலகின் இந்த ஆபத்தான திணிப்பை பெரும்பான்மை ஊடகங்களும், திரைப்படங்களும் பெரிய அளவில் வரவேற்று முன்னெடுத்து செல்கிறது.
பெண்கல்விக்கு பாடுபட்ட சாவித்ரிபாய்புலேவில் தொடங்கி, சுவாமி விவேகானந்தர், முத்துலட்சுமிரெட்டி, ஆர்.எஸ்.சுப்புலட்சுமி, பி.ஆர்.அம்பேத்கர், பெரியார் என்று பல தலைவர்கள், பாலின வேறுபாடுகளை கடந்து பெண் சமத்துவத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் போராடியுள்ளனர். இன்றும் பல பெண் போராளிகள் பொது தளத்தில் பெண்களின் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். அத்தகைய போராளிகளின் பார்வையில் பெண்ணியத்தை புரிந்து கொண்டால் மட்டுமே, வணிக உலகம் காட்சிப்படுத்தும் போலி பெண்ணிய கூறுகளை பகுத்தறிந்து புறந்தள்ளும் திறன் பெண்களிடம் மேம்படும்.
பெண்ணியம் என்றால் என்ன?
சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் துறைகளில் பாலின சமத்துவத்திற்கான முயற்சிகளையும், போராட்டங்களையும், சமூகம், அரசியல் மற்றும் சட்டதளங்களில் முன்னெடுத்து செல்வதே, நம் தலைவர்கள் நமக்கு கற்றுத்தந்த பெண்ணியம்.
பொருளாதார பாலின சமத்துவமின்மை
இந்திய மக்கள்தொகையில் (1,370,381,067), 52 சதவிகிதம் ஆண்களும், 48 சதவிகித பெண்களுமாக எண்ணிக்கை அடிப்படையில் இரு பாலரும் சமமாக இருக்கின்றனர். ஆனால் பொருளாதார அடிப்படையில் நோக்கும்போது, ஆண் 80 சதவிகிதத்திற்கு அதிகமான பொருளாதாரத்தையும், பெண் 20 சதவிகிதத்திற்கு குறைவான பொருளாதாரத்தையும், தங்களின் உடைமையாக வைத்திருக்கும் ஆபத்தான பொருளாதார சமமற்றநிலைநிலவுகிறது. 2018 ஆம்ஆண்டில்ஆக்ஸ்பாம்இந்தியாஎன்றஅமைப்பு, இந்திய பெண்களின் பொருளாதாரநிலை பற்றிய கருத்துக்கணிப்பை வெளியிட்டது. அந்ததகவல்களின் அடிப்படையில், நேரடிவிவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் 80 சதவிகிதத்திற்கு அதிகமான உழைப்பு பெண்களுடையது. ஆனால் அதிகபடியான தங்கள் உழைப்பை செலுத்தும் பெண் சமூகத்திற்கு உடைமையாக 13 சதவிகிதத்திற்கு குறைவான விளைநிலங்களே உள்ளது என்று ஆக்ஸ்பாம் கூறுகிறது.
நகரம் சார்ந்த பாலின பொருளாதார ஏற்றத்தாழ்விற்கு முக்கிய காரணம் ஊதிய சமமின்மை. Monster Salary Index, Paycheck.in மற்றும் IIM Ahmedabad ஆகிய மூன்று நிறுவனங்களும் வெளியிட்ட, “Monster Salary Index Report”, நகரம் சார்ந்த தொழில் நிறுவனங்களின் பாலின ஊதிய பாகுபாடு குறித்த தகவல்களை தோலுரித்து காட்டுகிறது. அவர்களின் ஆய்வின் அடிப்படையில் 2018 ஆம் ஆண்டில் சராசரியாக ஒரு ஆண் ஒரு மணி நேரத்திற்கு ஊதியமாக ரூபாய் 242.44 பெறுகிறான்.ஒரு பெண்,ஆணின் ஊதியத்தை விட 19 சதவிகிதம் குறைவாக ரூபாய் 196.3 பெறுகிறான். அனுபவ ஆண்டின் காலம் அதிகரிக்கும்போது, ஊதிய இடைவேளையும் அதிகரிப்பதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.10 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபம் உள்ள ஆணைக்காட்டிலும் அதே பணி அனுபவமும், அறிவும் உள்ள பெண் 25 சதவிகிதம் குறைவான ஊதியம் பெறுகிறாள். துறை சார்ந்த பாலின ஊதிய பாகுபாட்டுத் தகவல்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி அதிகபட்சமாக ஐ.டிதுறைகளில் 26 சதவிகித பாலின ஊதிய வேறுபாடும், உற்பத்தி துறையில் 24 சதவிகித வேறுபாடும், மருத்துவதுறையில் 21 சதவிகித பாலின ஊதிய வேறுபாடும் உள்ளது என்று கூறுகின்றனர்.
சமூக சமத்துவமின்மை
பெண்கள் எப்பொழுது நள்ளிரவில் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாடமுடிகிறதோ! அன்று தான் இந்தியா உண்மையில் சுதந்திரம் அடையும் என்பது நம் தேசதந்தை காந்தியடிகளின் பொன்மொழி. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. Thomson Reuters Foundation, 2018 ஆம் ஆண்டில் செய்த ஆய்வின் அடிப்படையில் உலகில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
மிகவும் காலம் தாழ்த்தி 2017 ஆம் ஆண்டின் குற்ற எண்ணிக்கைகள் குறித்த தகவல்களை National Crime Records Bureau, தற்போதுதான் வெளியிட்டுள்ளது. அந்த தகவல்களின் அடிப்படையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுதோறும் அதிகரித்தே வருகிறது. 2015 ஆம் ஆண்டில் 3,29,243 என்ற எண்ணிக்கையில் இருந்த பெண்களுக்கு எதிரான குற்றங்கள், 2016 ஆம் ஆண்டில் 3,38,954 ஆக அதிகரித்துள்ளது. 2017 ஆம்ஆண்டில்பெண்களுக்குஎதிரானகுற்றங்கள்மேலும்அதிகரித்து 3,59,849என்றஎண்ணிக்கையில்உள்ளது.2017 ஆம்ஆண்டில்மட்டும்,18வயதிற்குக்கீழ் உள்ளபெண்குழந்தைகள்சுமார்10,221 என்ற எண்ணிக்கையிலும்,18 வயதிற்குமேல் உள்ள பெண்கள் சுமார் 23,437 என்ற எண்ணிக்கையிலும், மொத்தம் 33,658 பெண் குழந்தைகளும், பெண்களும் பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களில் 10 சதவிகிதம் மட்டுமே புகார் அளிக்கப்படுவதாகவும், ஏனைய 90 சதவிகித குற்றங்கள் பல சமூக காரணங்களாலும், பெண்கள் மீது மட்டும் சுமத்தப்பட்டுள்ள கற்பு என்ற போலி கற்பிதத்தினாலும் காவல் நிலையங்களில் பதியப்படுவதில்லை என்று பெண்ணிய அமைப்புகளும், மகளிர் மற்றும் குழந்தைகள் நலவாரியமும் கூறுகிறது.
அரசியல் சமத்துவமின்மை
இந்திய மக்கள் தொகையில் 48 சதவிகிதம்பெண்கள்வாழ்கின்றனர், ஆனால் 15 சதவிகிதத்திற்கு குறைவான பெண்கள் மட்டுமே சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நிகழ்த்தப்படுவதற்க்கு, அரசியல் பாலின சமத்துவமின்மையே காரணம் என்று UnitedNations Equal Opportunity Commission கூறுகிறது. சட்டம் இயற்றும் இடத்தில் பெண்களின் பங்களிப்பு 30 சதவிகிதத்திற்கு அதிகமாக உள்ள நாடுகளில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக உள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. ஸ்வீடன், சுவிச்சர்லாந்து போன்ற, அரசியலில் பெண்கள் பங்களிப்பு அதிகம் உள்ள நாடுகளை தங்கள் கோட்பாட்டிற்கு ஆதாரமாக காட்டுகின்றனர். நம் இந்திய நாட்டில் 2008 ஆம் ஆண்டில், கொண்டு வரப்பட்ட பெண்களுக்கான 33 சதவிகிதம் அரசியல் இடஒதுக்கீட்டு மசோதா இன்று வரை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
மரபணு மாற்றப்பட்ட பெண்ணியம்.
வணிக உலகம் காட்சிப்படுத்தும் போலி பெண்ணியம், இந்த கட்டுரையின் முன் பகுதியில் சுட்டிக்காட்டிய எந்த சமத்துவமின்மையையும் எதிர்த்து போராடாது. அரசு நிறுவனங்களை தவிர்த்த அனைத்து தனியார் நிறுவனங்களும் பெண்களுக்கு ஆண்களை காட்டிலும் குறைவான ஊதியமே கொடுக்கின்றனர்.ஆகவே இந்த முதலாளித்துவ வணிக உலகம், பாலின ஊதிய சமத்துவமின்மை குறித்து பெண்கள் பேசா வண்ணம், அவர்களை அழகியல் என்ற மாயபோலி உலகில், அடிப்படையற்ற பெண்ணியம் பேசுபவர்களாக வைத்திருக்க முயற்சிகள் எடுக்கிறது.பாலின ஊதிய சமமின்மை வளர்ந்த நாடுகளிலும் காணப்படுகிறது. அதேப்போல் உலகெங்கும் பெண்களின் பொருளாதாரம் ஆணை விட மிகவும் குறைவாகவே உள்ளது. பெண்ணின் நிலை இவ்வாறு இருக்கும் நிலையில், பெண் உடை சார்ந்தும், ஒப்பனை சார்ந்தும் மட்டுமே மதிக்கப்படுகிறாள் என்ற தவறான கற்பிதத்தை வணிக உலகம் பெண்களின் மனதில் திணிக்கிறது. அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஆண் வேட்பாளரை, அவரின் கருத்தியல் சார்ந்து விமர்சித்த பல ஊடகங்கள்,பெண் வேட்பாளரை பல தருணங்களில் அவர்களின் உடை சார்ந்தும், ஒப்பனை சார்ந்தும் விமர்சித்த அவலம் நிகழ்ந்தது. இதன் காரணமாக பெண் தங்கள் ஊதியத்தில் கணிசமான தொகையை ஒப்பனை பொருட்களில் செலவிடுவதாக ஆய்வுகள் கூறுகிறது. Zion Marketing Research வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், உலகளாவிய ஒப்பனை தயாரிப்பு சந்தை 2024 ஆம் ஆண்டு, அமெரிக்க டாலரில் 863 பில்லியன் லாபம் ஈட்டும் என்று கணிக்கின்றனர்.
பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள பெண் சமுதாயம்,
தாங்கள் ஈட்டும் வருவாயை தங்கள் பொருளாதாரத்தை அதிகரிக்க பயன்படுத்தாமல், ஒப்பனை பொருட்களிலும், அதிகப்படியான ஆடை அணிகலன்களிலும் செலவிடும் ஆபத்தான போலி பெண்ணியத்தை, ஊடகங்களின், திரைப்படங்களின் துணைக் கொண்டு வணிக உலகம் கட்டமைக்கின்றனர். மேலும் ஆண் செய்யும்மது, புகை போன்ற உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தவறான பழக்கங்களை, பெண்களும் செய்வது பாலின சமத்துவத்திற்கு வழி வகுக்கும் என்ற தவறான கற்பிதங்களையும் சேர்த்தே வணிக உலகம் போலியாக பெண்ணியத்தை சித்தரிக்கிறது.
பெண்களை முன்னேற்றும் பெண்ணியம் எத்தகையது?
1.பெண் என்ற ஒற்றை காரணத்தால் ஊதியம் குறைக்கப்படும்போது, தங்கள்உரிமைக்காக குரல் எழுப்பும் வலிமை உடையது.
2.பெண்ணை சக பாலினமாக மதிக்காமல், போகப் பொருளாக பாவித்து, அவளின் மீது வன்முறை நிகழ்த்தப்படும் போது, அதை எதிர்த்து போராடும் தைரியம் உடையது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுக்க சமூக மற்றும் சட்ட வழி முறைகளை கண்டறியும் வல்லமை மிக்கது.
3.அரசியல் சமநிலை பெற முயற்சிகள் செய்யும் திறன்மிக்கது. தங்களின் 33 சதவிகித இடஒதுக்கீட்டு உரிமையை கோரும் போராட்டங்களை முன்னெடுக்கும் வலிமைமிக்கது.
4.தோலின் நிறம் குறித்தோ, முகத்தின் வடிவம் பற்றியோ, உடலின் தோற்றம் குறித்தோ, குழப்பிக் கொள்ளாமல், ஆரோக்கிய உடலின் அவசியத்தை மட்டுமே புரிந்துணரும் தெளிவுடையது.
5.தனிமனித ஒழுக்கம், வீரம் போன்ற அடிப்படை மனித பண்புகளை, ஒரு பாலினத்திற்கு மட்டும் தனியுடைமையாக்குவதை மாற்றி ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுயுடைமையாக்க வேண்டியதன்
அவசியத்தை சமுகத்திற்கு உணர்த்தும் வலிமைமிக்கது.
6.பெண் அறிவு சார்ந்து மதிக்கப்படாமல், ஒப்பனை சார்ந்து விமர்சிக்கப்படுவதை கேள்வி கேட்கும் தெளிவுடையது. பெண் உடலை காட்சி பொருளாக காட்டும் வணிக உலகின் உடை சார்ந்த அரசியலை கேள்வி கேட்கும் புரிதல் உடையது.
7.எதிர்பாலினத்தை சமமாக மதிக்கும் தெளிவுடையது. குடும்ப உறவுகளை மதிக்கும் மாண்புடையது. குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்த பொறுப்புகளையும் சிறப்பாகச் செய்யும் திறன் உடையது.பெண்ணியவாதி என்று ஒரு தனி பிறவி இல்லை. பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு பெண்ணியவாதியே. குடும்ப பெண்களுக்கு பெண்ணியவாதம் பொருந்தாது, என்ற அடிப்படையற்ற வாதங்களை உடைத்தெறிந்து, சமூக, பொருளாதார, அரசியல்தளங்களில் பெண் என்ற ஒற்றை காரணத்தால் நிகழ்த்தப்படும் அநீதிகளை எதிர்த்து கேள்வி எழுப்ப வேண்டும். பாலின சமத்துவத்திற்கான போராட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த மகத்தான சமத்துவத்திற்கான போராட்டத்தை, அறிவாயுதத்தின் துணைக்கொண்டு வலுவாக முன்னெடுத்துச் செல்வதே, இந்நூற்றாண்டின் முக்கிய கடமையாகும். பெண்ணியத்தின் அடிப்படை தத்துவத்தை உணர்ந்த பெண்களால் மட்டுமே வீடும், நாடும் பயன்பெறும்.