tamilnadu

img

மெக்கார்த்தியை தொடரும் டிரம்ப்...

இனி அமெரிக்காவில் வெளிநாடுகளில் இருந்து கம்யூனிஸ்டுகள் குடியேற அனுமதி கிடையாது என ஜனாதிபதி டிரம்ப் கொக்கரித்திருக்கிறார். உலக வல்லரசு என மார்தட்டும் அமெரிக்கா ஏன் கம்யூனிஸ்டுகளை பார்த்து பயப்பட வேண்டும்? எதற்காக புலம்பி அரற்ற வேண்டும்?  பொருளாதார தோல்வியில், கொரோனா நோய்த்தடுப்பில், இனவெறி தாக்குதலில் என அனைத்து அம்சங்களிலும் டிரம்ப்பின் தோல்வி முகத்தை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தும் பணியை வலுவாக துவக்கியுள்ளனர் கம்யூனிஸ்டுகள். அதனால் தான் இப்படி குய்யோ முறையோ என கூப்பாடு போடுகிறார். அமெரிக்காவில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான வெறுப்பை ஏதோ இன்றைக்கு அவர் துவக்கவில்லை. இவருக்கு வழிகாட்டியாக ஏற்கனவே ஒருவர் இருந்திருக்கிறார். ஆம், அவர்தான் ஜோசப் ரேமண்ட் மெக்கார்த்தி எனும் ஜோ மெக்கார்த்தி. அவரின் கம்யூனிஸ வெறுப்பு பிரச்சாரங்கள் தான் “மெக்கார்த்தியிசம்” என அமெரிக்காவில் இன்று வரையிலும் பரவலாக பேசப்படுகிறது. யார் அவர்? என்னதான் செய்தார்?

1946 முதல் 1957 வரை குடியரசுக் கட்சியால் தேர்வுசெய்யப்பட்டு அமெரிக்க செனட் அவையின்  உறுப்பினராக பணியாற்றியவர் ஜோ மெக்கார்த்தி. மனிதர் பொய்பேசுவதில் மகா சமர்த்தர். கூசாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் எடுத்து விடுவார். மெக்கார்த்தி 1942 இல் அமெரிக்க கப்பற்படையில் பணியாற்றிய போது, இரண்டாம் உலக மகா யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். போர் முனையில் தான் செய்ததாக வீர தீரசம்பவங்களையெல்லாம் பட்டியலிடுவார். ஆனால் ஒன்றில் கூட அவர் சம்பந்தப்பட்டிருக்க மாட்டார். இப்படிஅவர் அள்ளிவிடுவதை பார்த்து உடன் பணியாற்றியவர்கள் அவருக்கு “வாலில் துப்பாக்கி கட்டி சுடும் வீரர்” என ஒரு பட்டப் பெயரை கூட வைத்து அழைப்பார்கள். போர் முனையில் நின்று நாட்டைக் காப்பாற்றும் வீரனாக தன்னை விளம்பரப்படுத்திக் கொண்ட மெக்கார்த்தி, உண்மையில் போரின் போது கூட பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருமானம் பார்த்துக் கொண்டிருந்தார் எனஅவரைப் பற்றி அமெரிக்க பத்திரிக்கைகள் எழுதியதுண்டு.

சோவியத்தின் மகத்தான வெற்றி
இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் செஞ்சேனையின் சாகசங்கள், போருக்கு பிறகு உலகின் பல நாடுகள் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் பின்னால் அணிவகுத்து நின்ற காட்சிகள், உலக அரங்கில் அமெரிக்காவை விடவலுவான நாடாக சோவியத் மாறியது, அப்போது நடந்தசீனப் புரட்சி ஆகிய அனைத்தையும் கண்ட மெக்கார்த்திக்கு, கம்யூனிசத்தின் மீது ஒரு வித அச்சமும், வெறுப்பும் உருவாகத் துவங்கியது. அதுதான் அவரை ஒரு மிகத் தீவிரமான கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளராக மாற்றியது என்று கூட சொல்லலாம். கம்யூனிச சித்தாந்தத்தின் மீதும், கம்யூனிஸ்டுகள் மீதும் வெறுப்பை வாரிக் கொட்ட துவங்கினார். அமெரிக்க அரசுத் துறைகளில், வாய்ஸ் ஆப் அமெரிக்க எனும் வானொலியில், உளவு நிறுவனங்களில், ராணுவத்தில் என அனைத்து இடங்களிலும் கம்யூனிஸ்டுகள் ஊடுருவியிருக்கிறார்கள்; இதனால் அமெரிக்காவிற்கு பெரிதும் ஆபத்து உருவாகப் போகிறது என தெருத்தெருவாக புலம்ப ஆரம்பித்தார். போகிற இடங்களிலும், பேசுகிற கூட்டங்களிலும் தொடர்ச்சியாக இதே பாட்டைத் தான் பாடிக் கொண்டிருந்தார் மெக்கார்த்தி. 

‘லீ பட்டியல்’
சரி, இவர் சொல்கிற விஷயத்தை சற்று ஆராய்ந்துதான் பார்ப்போமே என்ற ஒரு விசாரணையை துவக்க முன்வந்தது அமெரிக்க அரசு. ராபர்ட் லீ என்பவர் தலைமையில் எஃப்.பி.ஐ. (FBI) எனும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு ஒரு விசாரணையை துவக்க, “மில்லர்ட் டைடிங்க்” என்பவர்தலைமையில் ஒரு விசாரணைக்குழுவையும் தனியாக அமைத்தது செனட் அவை. கம்யூனிஸ்ட் உளவாளிகள் என மெக்கார்த்தி கொடுத்த ஒரு பெரிய பட்டியலை ஆய்வு செய்த ராபர்ட் லீ அந்த பட்டியல் போலியானது என அறிவித்தார். “லீ பட்டியல்” என அமெரிக்க அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட பட்டியல் அது. “மில்லர்ட் டைடிங்க்” தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியின் அறிக்கையோ வேறுவிதமாகவும் மிகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. “ஒரு வேளை நாங்கள் மெக்கார்த்தியை எங்களோடு விசாரணைக்கு மூன்று நாட்கள் அழைத்துச் சென்றிருந்தால் அவர் தனது முகத்தைக் கூட செனட் அவையில் காட்டமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்.. அவ்வளவு மோசமான அனுபங்கள் எங்களுக்கு கிடைத்தன என்று டைடிங்க் அறிவித்ததோடு,  மெக்கார்த்தி முன்வைத்தவை மோசடியும், புரளியும் நிறைந்த குற்றசாட்டுகளே எனவும் சொன்னார். மேலும் வேறும் வாய்ச்சவடால் பேர்வழி இந்த மெக்கார்த்தி எனவும் செனட் ஆய்வுக் குழுவின் தலைவர் அவரை பகிரங்கமாகவே கடிந்து கொண்டார். 

கட்டமைக்கப்பட்ட மனநிலை
பொதுவாகவே அமெரிக்காவில் ஒரு கம்யூனிச எதிர்ப்பு மனநிலை என்பது மிக நீண்ட காலமாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பிரதான காரணம் 20 சதவீதம் அளவில் ஒரு வலுவான வாக்கு வங்கியை வைத்திருக்கும்  கத்தோலிக்க மத நிறுவனங்களே ஆகும். மெக்கார்த்தி தன்னை ஒரு கத்தோலிக்கராக அடையாளம் காட்டிக் கொண்டு கத்தோலிக்க சபைகளை தனக்கு ஆதரவாக பேச வைக்க முடியுமா என்று முயன்று கூட பார்த்தார்.ஆனால் அமெரிக்காவில் அப்போதிருந்த கத்தோலிக்க சபைகளின் தலைவரான அருட்தந்தை ஜான் பிரான்சிஸ் கூட மெக்கார்த்தியிசத்தை நிராகரித்து விட்டார்.அமெரிக்க ஜனாதிபதிகளான ட்ரூமன் மற்றும் ஐசனோவர் ஆகியோரிடம் மிக நெருக்கமாக இருந்து பணியாற்றியிருக்கிறார் மெக்கார்த்தி. ஆனால் முதலாளித்துவவாதிகளான அவர்களும் கூட மெக்கார்த்தியின் கொள்கைகளில் தங்களுக்கு ஏற்பு உண்டென்றாலும் அவரின் வழிமுறைகளை நாங்கள் ஆதரிக்க முடியாது என நிராகரித்தனர். இப்படியாக கம்யூனிச எதிர்ப்பையே தனது முழுநேரதொழிலாக கொண்ட “ஜோ மெக்கார்த்தியை” காலம்தனது குப்பைக் கூடையில் தூக்கி வீசியது என்பதே வரலாறு. ஆனால் பாவம், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அவர்களோ இப்போது  மெக்கார்த்தியின் சீடராக மாறி வரலாற்றின் குப்பையிலிருந்து கிளறி  “மெக்கார்த்தியிசத்தை” எடுத்துக் கொண்டு வந்து தூக்கிப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறார். 

முதலாளித்துவத்தின் மரணம் தவிர்க்க முடியாதது
மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் ஐரோப்பாவை ஒரு பூதம் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது என ஐரோப்பிய மூலதனம் அச்சத்தோடு அரற்றியது. இதோ தற்போது அமெரிக்க மூலதனமும், அதன் காவலருமான ஜனாதிபதி டிரம்ப் “ அமெரிக்காவையும் அதே பூதம் பிடித்து ஆட்டுகிறது” என புலம்ப துவங்கியிருக்கிறார். அதனால் தான் “கம்யூனிஸ்டுகளுக்கு அமெரிக்காவில் இடம் கிடையாது” என குழந்தைத்தனமாக பிதற்றுகிறார். ஒரு சில கம்யூனிஸ்டுகளை வேண்டுமெனில் அவர் தடுக்கலாம். ஆனால்கம்யூனிசம் என்பது ஒரு சமூக விஞ்ஞானம்.  அது முதலாளித்துவத்தின் சாம்பல் மீது வளரும் வல்லமை கொண்ட தத்துவம். முதலாளித்துவத்தின் மரணமும், பாட்டாளி வர்க்கசர்வாதிகாரமும் சமூக வளர்ச்சி போக்கில் தவிர்க்கவே முடியாதவை எனும் பேருண்மையை ஒரு வேளை அவரால்புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் எதை வைத்து அந்த உண்மையை மறைக்கப் போகிறார் டிரம்ப்!