tamilnadu

img

சோர்வறியா உழைப்பாளி தோழர் லட்சுமணன்..

தோழர் டி.எல். என அழைக்கப் படும் தோழர் டி. லட்சுமணன் தற்போது நம்முடன் இல்லை என்பதை நம்ப மறுக்கிறது மனது. அவரது நெடிய தோற்றம், எப்போதும் மலர்ச்சியுடன் காணப்படும் முகம், தோளில் கை போட்டு
உரிமையுடன் உறவாடி, பணிகள் குறித்து நடத்தும் விவாதம் ஆகியவை நெஞ்சில் நிறைந்து நிற்கிறது.

90 களில் நான் கட்சியின் குமரி மாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட பின்னர்அப்போது மாநிலச் செயற்குழு உறுப்பினராகஇருந்த தோழர் டி. எல். குமரி மாவட்ட பொறுப்பாளராக சுமார் 4 ஆண்டுகள் செயல்பட்டார். அப்போதிருந்து அவரோடு நெருங்கிப் பழகும்வாய்ப்பை நான் பெற்றேன். கட்சி வளர்ச்சியிலும், பணிகளிலும் மிகுந்த அக்கறையுடன்  செயல்படுவார். மாவட்டச் செயலாளர் எனும் முறையில் எனது பணிகளுக்கு மிகுந்த ஒத்தாசையோடு செயல்படுவார்.எப்போது அழைத்தாலும் வந்து உதவுவார். கமிட்டிக் கூட்டங்களில் எளிய முறையில் அரசியல் ரிப்போர்ட்டிங் செய்வார். 

அவரது சிறப்பம்சமே பாதிப்புக்கு உள்ளாகும் பிரிவு மக்கள் பிரச்சனைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு செயல்படுவதாகும். இந்த குணநலன் தான் அவரை சிறுபான்மை மக்களின் நலனிலும், மாற்றுத் திறனாளிகளின் நலனிலும் அதிக அக்கரை கொள்ளச் செய்தது. கட்சியின்மாநில சிறுபான்மை பிராக்சனுக்கு நீண்ட காலம் பொறுப்பாளராக இருந்தார். பின்னர் அவர் செயற்குழுவிலிருந்து விடுவிக்கப்பட்டு, நான் மாநில செயற்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்ட பின்னரும் எவ்வித தொய்வும் இன்றி சிறுபான்மை மக்கள் நலனில் அக்கரை கொண்டுசெயல்பட்டு வந்தார். சில நேரங்களில் எனக்குதயக்கம் ஏற்பட்டால் கூட, மிகவும் வாஞ்சையோடு என்னிடம் பேசி சிறுபான்மை மக்களின்நலனில் அக்கறை கொண்டு செயல்பட்ட
தோடு, என்னையும் ஊக்கப்படுத்தி செயல்படவைத்தார் என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சிறுபான்மை மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள், வகுப்புவாதிகளின் செயல்களால் ஏற்படும் பாதுகாப்பின்மை போன்ற பிரச்சனைகளைக் கேட்டறிந்து, அப்பிரச்சனைகளில் கட்சி அதிக ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டுமென வற்புறுத்துவார். மேலும் சிறுபான்மை மக்களின் நலனைப் பாதுகாக்க ஒரு அமைப்பு தேவை என்பதைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு உருவானதில் முதன்மையான பாத்திரம் அலருடையதே. 2014 ல் திருச்சியில் முதல் மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் அதற்கான தயாரிப்புப் பணிகளிலும், மாநிலம் முழுவதிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொள்வதைஉத்தரவாதப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றினார். திருச்சி மாநாட்டில் தமிழ்நாடுசிறுபான்மை மக்கள் நலக்குழு உருவாக்கப் பட்ட போது அதன் மாநில துணை ஒருங்கிணைப்பாளராகவும், பின்னர் ஈரோட்டில் நடைபெற்ற 2 ஆவது மாநாட்டிலும், மதுரையில் நடைபெற்ற மூன்றாவது மாநாட்டிலும் மூத்ததுணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட் டார். 

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவைச் செயல்பட வைத்ததிலும், அப்பணிகளில் மாவட்டங்களை ஈடுபட வைத்ததிலும் அவரது பங்கு மகத்தானது. அப்பணிக்காக அவர் செல்லாத மாவட்டமே  இல்லை. இன்றைய தினம் சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்டக்குழுக்களில் அதிக செயல்பாடுள்ள முதன்மை மாவட்டமாக உள்ளது ஈரோடு மாவட்டம். அதற்கு பிரதான காரணம் தோழர் டி. எல். என்றால் அது மிகையல்ல. அடிக்கடி சென்று கட்சி தோழர்களையும்,இதர சிறுபான்மை பிரமுகர்களையும் சந்தித்து,ஊக்கப்படுத்தி செயல்பட வைத்தவர் தோழர்டி.எல். முஸ்லீம்சிறைவாசிகளின் விடுதலைக்காக அவர் தொடர்ந்து எடுத்த முன்னெடுப்புகளின் விளைவே சென்னையில் அதற்காக நடைபெற்ற சிறப்பான மாநாடு.கடந்த சில மாதங்களாக அவருக்கு மிகுந்தஉடல் உபாதைகள் இருந்தன. சில சந்தரப்பங்களில் மயக்கமடைந்தததாகவும் அறிந்து அவரதுபயணங்களை சற்று குறைத்துக் கொள்ளக் கூறினேன். கோவிட் 19 அவரையும் முடக்கிப் போட்டதோடு, இயங்கிக் கொண்டே இருந்ததோழரை நம்மிடம் இருந்து பறித்தும் விட்டது.என் குடும்பத்திலும் ஒரு முஸ்லீம் இருக்கிறார் என்பதை அடிக்கடி பெருமையுடன் கூறுவார். ஆம் . அவரது மருமகள் முஸ்லீம் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் இருந்தது.தோழர் டி.எல். அவர்களது இழப்பு தமிழ்நாடுசிறுபான்மை மக்கள் நலக்குழுவிற்கு ஈடு செய்ய இயலாத இழப்பு. இருந்தாலும் அவரது நினைவே இத்தகைய இயக்கங்களை மேலும் முன்னெடுத்து செல்ல உந்து சக்தியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

கட்டுரையாளர்  : எஸ்.நூர்முகம்மது, மாநிலத் தலைவர், 

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு