மத அடிப்படையில் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களை பிரிக்கும் இந்துத்துவா அமைப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக பள்ளிகளில் இந்து மாணவர்கள் முன்னணி மற்றும் கல்லூரிகளில் இந்து இளைஞர் முன்னணி அமைப்புகள் மாணவர்களை மதரீதியில் ஒருங்கிணைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளியில் மதரீதியான செயல்பாடுகளில் ஈடுபடுவதாக சட்டம் ஒழுங்கு முதன்மை செயலாளர் பள்ளிக் கல்வித்துறையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். சட்டம் ஒழுங்கு முதன்மை செயலாளரின் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை இணைச் செயலாளர் எஸ். வெங்கடேசன் பள்ளிக்கல்வித்துறைக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். இதைத்தொடர்ந்து தமிழக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களை ஒருங்கிணைத்து சித்தாந்தங்கள், இந்து மத தலைவர்களை பற்றிய விவரங்கள், மற்றும் இந்து சாஸ்திரங்களை கற்று கொடுப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்லூரிகளை பொறுத்த வரை பிற மதத்தை சேர்ந்த மாணவர்களுடன் இந்து மாணவிகள் பழகுகிறார்களா என்பதை கண்காணிக்குமாறு இந்து அமைப்புகள் மாணவர்களை கட்டாயப்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற நடவடிக்கைகள் பள்ளி கல்லூரிகளில் நடைபெறுகிறதா என்பதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.