இன்று [10/10/2020] காலை வழக்கம் போல் ஒரு துயரச் செய்தியோடு விடிந்தது . என் அன்புத் தோழன் கே.சி.கருணாகரன் மறைவுச் செய்திதான் அது. எனக்கும் கே.சி.கே வுக்கும் உள்ள தொடர்பை அசை போடுகிறேன்.அவசர காலத்தில் சென்னை பழவந்தாங்கலில் சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணியை துவக்க முயற்சி எடுக்கிறோம். முன்னோடியாக இருக்கும் கோவைக்கு கடிதம் எழுதி விவரம் கேட்பது என முடிவெடுத்து கே.சி.கே வுக்கு கடிதம் எழுதினேன். ஒரு பிரசுரமும் சில துண்டறிக்கைகளும் தபாலில் வந்தது . என் முதல் தொடர்புஅதுவே.
சென்னையில் வாலிபர் முன்னணி உதயமானது. இவை அவசரகால பேயிருட்டில் நடந்தது.அவசர காலம் முடிவுக்கு வந்தபின் 1978 ஏப்ரல் 16 ஆம் தேதி தோழர் பி.ஆர். பரமேஸ்வரன் என்னை அழைத்து சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணி மாநில அமைப்புஉருவாக்கும் கூட்டம் கோவையில் நாளை நடை பெறுகிறது போய் வாருங்கள்என்கிறார். போக்குவரத்துச் செலவை போக்குவரத்து ஊழியர் சங்கம் கொடுத்தது. தோழர் றைமண்டும், நீராவியும் என்னை அழைத்துப் போய் கோவைக்கு பஸ் ஏற்றினர்.
பஸ் கோவைக்கு போய்ச் சேரும் போதுகாலை 9 மணி ஆகிவிட்டது. அப்போது காட்டூரிலுள்ள கட்சி அலுவலகத்துக்கு சென்றேன் . மூத்த தோழர் கே.ரமணியும்,தோழர் கே. முத்தையாவும் காத்திருந்தனர்.நேரமாகிவிட்டது .எல்லோரும் போய் விட்டனர். சீக்கிரம் ரெடியாகு என்றனர். குளித்துவருவதற்குள் இட்லி பொட்டலம் இருந்தது.சாப்பிட்டுவிட்டு காரில் கே. ஆர் , கே.எம்,நான் மூவரும் விளாங்குறிச்சிக்கு புறப்பட்டோம். ஒருவர் சற்று வழுக்கை மண்டையோடு எங்களோடு காரில் ஏறினார். அவர் கையில் சைக்கிளோஸ்டைல் செய்யப்பட்ட காகிதங்கள் இருந்தன. அவரை கே.சி.கருணாகரன் என அறிமுகம் செய்து வைத்தனர். அன்று தொடங்கியது எங்கள் தோழமை.17 ,18 ஆகிய இரு தினங்கள் நடை பெற்றகூட்டத்தில் சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணி ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது. கே.சி.கே அதன் ஒருங்கிணைப்பாளர் [கன்வீனர் என கே.சி.கே.பெயரை முன் மொழிய ஒருங்கிணைப்பாளர் என நான் சொல்ல,தோழர் கே.எம்மும் கே. ஆரும் சபாஷ் போட்டு ஆதரித்தனர்] நானும் அதில் ஓர் உறுப்பினர். அங்கு திட்டமிட்டபடி குமரிமாவட்டம் களியக்காவிளையிலிருந்து என்.நன்மாறன் தலைமையிலும், கோவையிலிருந்து கே.சி.கே தலைமையிலும் சென்னை கோட்டை நோக்கி வேலை கேட்டு சைக்கிள் பயணம். சென்னையில் பெரும்பேரணி என முடிவு சிறப்பாக அமலானது.வாலிபர் சங்கத்துக்கு உந்து விசை ஆனது.திருப்பூரில் 1979 ஜனவரியில் மாநில அமைப்பு மாநாடு. கே.சி.கே தலைவர். நன்மாறன் செயலாளர், முருகன் பொருளாளர். நான் துணைச் செயலாளர். மாநிலம் முழுவதும் சுற்றி அமைப்பைக் கட்டும் பணியை நானும் நன்மாறனுமே செய்யவேண்டி இருந்தது. காரணம் கே.சி.கே கோவை கட்சிப் பணியிலும் தீவிரமானார். பின்னர் 1980 ல் அகில இந்திய அமைப்புஉருவானது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என்று பெயரும் மாறியது. வெள்ளைக் கொடியும் சேர்ந்தது. இப்போது நன்மாறன் மாநிலத் தலைவர், நான் மாநிலச் செயலாளர் ,முருகன் பொருளாளர்.
இப்படி தொடங்கியது எங்கள் உறவு. கட்சி அமைப்புக் கோட்பாடுகளில் மிகவும்பிடிவாதமானவர் . பல்வேறு இன்னல்களையும் சவால்களையும் சந்தித்து மீண்டவர்.இவர் உரையாற்றினால் கூட்டம் சேரும். தனிப்பட்ட முறையில் பழக மிகவும்இனியவர். என்னோடு கடைசி வரை மிகவும் அன்பு பாராட்டியவர். கடைசியாக அவரது இணையர் இறந்த போது அலைபேசியில் பேசினேன்.அவர் மிகவும் மனம் ஒடிந்திருந்தார். அதுதான் அவரோடு கடைசியாகப் பேசியது. அப்போது அவர் சொன்னார் யார் முந்தி என்பதில் அவள் முந்திக் கொண்டார் என்றார். இப்போது அவர் எம்மை முந்திக் கொண்டார்.
அன்புத் தோழனை இழந்து நிற்கிறோம்.
என் செய்ய?
செவ்வணக்கம் கே.சி.கே!
==சு.பொ.அகத்தியலிங்கம்===