tamilnadu

img

கொரோனாவை எதிர்கொள்ளும் சூழலில் கவனத்தில் கொள்ள வேண்டிய மனித உரிமை பிரச்சனைகள்

தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு ஒரு வேண்டுகோள்

உலகத்தையே பயமுறுத்திக் கொண்டு இருக்கக்கூடிய கொரோனா கொள்ளைநோயின் பின்னணியில் கடந்த மார்ச் 25ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 21 நாள் ஊரடங்கு அவசியமானதே. ஆனால் இது ஏழை எளிய சாமானிய மக்கள் மீது பல்வேறு சுமைகளை சுமத்தியுள்ளது. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் உணவுக்காகவும், தங்கும் இடம் தேடியும் அலைந்து கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான கூலித் தொழிலாளிகள், புலம்பெயர்ந்து வேலை செய்வோர், வீடற்றோர், அன்றாடங்காய்ச்சிகள் போன்ற விளிம்பு நிலையில் இருப்போர் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம்.

எனவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மனித உரிமைகள், குழந்தை உரிமைகள், புலம்பெயர் தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு தளங்களில் பணியாற்றுவோர் மிகுந்த அக்கறையோடும் ஆதங்கத்தோடும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களுக்கும், மாநில மனித உரிமை ஆணையங்களின் உறுப்பினர்களுக்கும் ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். சுற்றுச்சூழல் போராளி மேதா பட்கர், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய முன்னாள் தலைவர் சாந்தா சின்கா, கல்வியாளர் வே. வசந்தி தேவி, மனித உரிமைப் போராளிகள் இந்திரா ஜெயசிங், கல்பனா கண்ணபிரான், வீரேந்திர தயாள், வஜாகத் ஹபிபுல்லா, கவிதா ஸ்ரீவாஸ்தவா, மாயா தாருவாலா, ரூத் மனோரமா, ஹென்றி திபேன், மிலூன் கோத்தாரி, மிகிர் தேசாய், சுதா ராமலிங்கம், எம்.ஜி.தேவசகாயம், இ.ஆ.ப. (ஓய்வு), தலித் உரிமைப் போராளிகள் பால் திவாகர், ரமேஷ் நாதன் உள்ளிட்ட 48 மனித உரிமை ஆர்வலர்கள் கையெழுத்திட்டு 4 முக்கிய பிரச்சினைகளில் தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் உடனடியாக தலையிடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

1) காவல்துறையினர் அத்துமீறல்
இதுபோன்ற வேளைகளில் தங்களது பாதுகாப்பையும் உயிரையும் பணயம் வைத்து பொது மக்களின் நலனுக்காக காவல்துறையினர் பணிபுரிவது பாராட்டுதற்குரியது. பெருவாரியான மக்களின் நடமாடுவதற்கான சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான உரிமை, வேலைவாய்ப்பு, தகவல் பரிமாற்றத்திற்கான சுதந்திரம் போன்றவை இப்போது நிறுத்தப்பட்டுள்ள சூழலில் காவல்துறையின் பங்கு மிகவும் முக்கியமானது. சமூக ஊடகங்களிலும், பிற ஊடகங்களிலும் காவல்துறையினரின் அத்துமீறல்கள் குறித்து பல காணொலிகள் வந்தவண்ணம் உள்ளன. ஊரடங்கை மீறும் சாதாரண சாமானியர்கள் மீது தடியடி நடத்தியது, தரக்குறைவான, மனிதாபிமானமற்ற தண்டனைகளை வழங்குவது, அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்வது போன்ற அத்துமீறல்களை நிகழ்த்துகின்றனர். இது போன்ற உரிமை மீறல்களை தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் உடனே கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற கொள்ளை நோய் பேரிடர் சூழல்களைக் கட்டுக்குள் வைக்கும் பணிகளில் ஈடுபடும் போது காவல்துறையினருக்கு ஏற்படும் நெருக்கடிகள் பல உண்டு. ஆனால் அதேவேளையில் காவல்துறையினர் பலப்பிரயோகம் பயன்படுத்துவது குறித்த அனைத்துலக வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும். கொள்ளைநோய் எதிர்ப்பில் முன்வைக்கப்படும் பல்வேறு முன்னெடுப்புகள் மனிதாபிமான முறையிலும், கூடுதல் கவனத்தோடும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறையாகக் கடைபிடிக்கப்பட வேண்டும். நெருக்கடி காலங்களில் கூட வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் எந்தச் சூழலிலும் தடுக்கப்படக் கூடாது; குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

இதுபோன்ற நெருக்கடியான சூழல்களில் காவல்துறையினர் நடந்துகொள்ளும் முறை குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் சில வழிகாட்டுதல்களை உடனே வழங்கிட வேண்டும். தேசிய ஊரடங்கு நேரங்களில் காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சி (Commonwealth Human Rights Initiative) என்ற அமைப்பு உருவாக்கியிருக்கும் வழிகாட்டுதல்கள் இதற்கு பயன்படும்.  பலப்பிரயோகம் என்பது முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. தேவை ஏற்படின் மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தலாம். மக்களுக்கும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதற்கும் இடையே முக்கியமான பாலமாக அமைவது காவல்துறையின் பங்கு.
வீடற்றோர், புலம்பெயர்ந்தோர், அமைப்பு சாரா தொழிலாளிகள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள், பாலியல் தொழிலாளர்கள் போன்ற நலிவுற்ற பிரிவினரோடு காவல்துறையினர் பழகுவதற்கு தெளிவான வரையறைகளும், பணி சார்ந்த முறைகளும் உருவாக்கப்பட வேண்டும்.

ஊரடங்கை மீறும் மக்களை எச்சரித்து அனுப்பலாமே தவிர, அவர்களை தடுத்து வைப்பதும், கைது செய்வதும் தவிர்க்கப்பட வேண்டும். அத்துமீறும் காவல்துறையினர் மீது உடனே கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட வழிகாட்டுதல்களை மையமாகக்கொண்டு தேசிய மனித உரிமை ஆணையம் சில வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம். அவற்றை உடனே அனைத்து மாநிலங்களின் காவல் துறைத் தலைமை இயக்குநர்களுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்; இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கைகளைக் கோரிப் பெற வேண்டும்.

2) சிறைச்சாலைகள் / நீதிமன்ற காவல் நிறுவனங்களில் அடைபட்டுக் கிடக்கும் சிறைவாசிகளின் சூழல்

1993 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், பிரிவு 12 (c)-ன் படி தேசிய மனித உரிமை ஆணையம் எந்த சிறைச்சாலைகளிலும் அல்லது பிற நீதிமன்ற காவல் நிறுவனங்களிலும் அடைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சென்று சந்திக்கவும் அவர்களுக்கான பாதுகாப்பு அல்லது பராமரிப்பு குறித்த விஷயங்கள் குறித்து அறிக்கை பெறவும் கடமை உள்ளது. இப்போது நிலவும் பெரும்தொற்று பரவும் அபாயமான சூழலில் சிறைச்சாலைகளிலும் பிற நீதிமன்ற காவல் நிறுவனங்களிலும் அடைபட்டு கிடக்கும் சிறைக்கைதிகளின் நிலவரம் குறித்து விரிவான அறிக்கை தேவைப்படுகிறது. குறைவான பொதுப்புழங்குமிடம், கூடுதல் எண்ணிக்கையிலான சிறைவாசிகள், மிகக் குறைந்த வசதிகள், நெருக்கடியான இடம் போன்றவை சிறைச்சாலைக்குள் இந்த வைரஸ் தாக்கக்கூடிய வாய்ப்புகளை அதிகமாக உருவாக்கலாம். ஐ.நா.வின் மனித உரிமைகள் உயர் ஆணையர் ஏற்கெனவே இதுகுறித்து அனைத்து அரசுகளுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

சிறைச்சாலைகளிலும் பிற தடுப்புக்காவல் இடங்களிலும் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் விடுவிக்கப்பட்ட கைதிகளினால் சமுதாயத்தில் ஏற்படும் கொள்ளை நோய் தடுப்பு குறித்து அவர் விரிவாக எழுதியுள்ளார். சிறைகளும், பிற நீதிமன்ற காவல் நிறுவனங்களும் இதுபோன்ற கொள்ளை நோய் அதிகமாக பரவுவதற்கான சூழல்களாக அமையலாம் என்று உலக நலவாழ்வு அமைப்பும் தனது அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது. சிறைச்சாலைகளில் அடைபட்டுக் கிடக்கும் மக்களது உரிமைகள் மறுக்கப்பட்டால், அவர்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகும் சூழலும், அவற்றால் பாதிக்கப்படும் நிலையும் உருவாகலாம். அவர்களுக்கான நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் குறிப்பிட்ட வளாகங்களுக்குள்ளே நெருக்கமாக புழங்குவதால் ஒரு நபரிடமிருந்து இன்னொருவருக்கு நோய்த் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக உலக நலவாழ்வு அமைப்பு தெரிவிக்கிறது.

இதுபோன்ற வேளைகளில் நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு கைதிகளை பரோலில் விடுவிக்கலாம்; இது குறித்து முடிவெடுக்க உயர்மட்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும், ஒன்றிய பிரதேசங்களுக்கும் உச்சநீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது. ஏழாண்டு சிறைத் தண்டனைக்கு குறைவான தண்டனை பெற்றுள்ள சிறைக்கைதிகளையும், குறைந்த ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளையும் விடுவிப்பதற்கு மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரையையும் வழங்கியுள்ளது. கைதிகளை பரோலில் அல்லது ஜாமீனில் விடுவிப்பதற்கு அவர்களது வயது, சிறையில் அவர்கள் கழித்த ஆண்டுகள் மற்றும் அவர்களது தற்போதைய உடல்நலம் போன்ற அம்சங்கள் பல மாநிலங்களில் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுகின்றன. சிறைச்சாலைகளிலும் பிற நீதிமன்ற காவல் நிறுவனங்களிலும் சமூக விலகலைக் கடைபிடிக்கவும், சிறைவாசிகளின் நலவாழ்வுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பற்றி இதுவரையிலும் எந்தத் தகவல்களும் இல்லை.

சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்ட முகக் கவசங்கள், கை தெளிப்பான்கள், சோப்புகள் போன்றவை குறித்தும் எந்தத் தகவலும் இல்லை. சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கு அல்லது அவர்களுக்கான பாதுகாப்பு வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் எந்தத் தகவலும் இல்லை சிறைவாசிகளின் பாதுகாப்பையும், அவர்களின் ஆரோக்கியமான வாழ்வையும் உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளவேண்டிய வழிவகைகள் குறித்து சிறைத்துறை அதிகாரிகளுக்கும் நீதித்துறை மற்றும் சட்ட பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கும் காமன்வெல்த் மனித உரிமை முன்முயற்சி அமைப்பு ஓர் ஆவணம் தயாரித்துள்ளது எனவே உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யவும், இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் சிறைச்சாலை தொடர்பான கண்காணிப்புப் பிரிவுக்கு அதிகாரத்தை வழங்கலாம்.

அந்தந்த மாநிலங்களில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவித்து, சிறைகளின் சூழலைப் பராமரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு மாநில தலைமைச் செயலாளர்களுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும். சிறைச்சாலைகளில் பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள் குறித்து அந்தந்த மாநில முதன்மைச் செயலாளர்களிடமிருந்து (நலவாழ்வு) அறிக்கைகளை அனுப்ப ஆணை பிறப்பிக்க வேண்டும்..  விசாரணைக் கைதிகள் மற்றும் தண்டனை கைதிகளின் நலிவுற்ற நிலை குறித்த அறிக்கை ஒன்றை விரிவாக அந்தந்த மாநிலங்களிலிருந்து உயர்மட்ட குழுவுக்கு தாக்கல் செய்யும்போது, உலக நலவாழ்வு அமைப்பு குறிப்பிட்டபடி அவர்களின் வயது, அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, அவர்களது உடல்நலம் குறித்த பின்னணி ஆகியவற்றின் அடிப்படையில் இவ்வறிக்கையைத் தயார் செய்ய வேண்டும்.

3) வீடற்றோர் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை

நாடெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின், ரயில்களும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டதால், இலட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் உண்ண உணவின்றி, தங்க இடமின்றி, அடிப்படை வசதிகள் எதுவுமின்றி, எங்கு செல்வதென்று தெரியாமல் திக்கித் திணறிக் கொண்டிருக்கிறார்கள். தில்லியிலிருந்து உத்தரப்பிரதேசம், உத்தர்கண்ட், பீகார், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களுக்கு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவை நடந்தே கடந்து செல்லும் காட்சிகளை ஊடகங்கள் வழியாக நாம் கண்டோம். குழந்தைகள், பெண்கள் என்று அழைத்துக்கொண்டு தங்களது பொதிகளை சுமந்து கொண்டு குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் கொளுத்தும் வெயிலில் நடந்து செல்லும் காட்சி கொடூரமானது.

புதுதில்லி ஆனந்த விஹார் பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பேருந்துகளில் முண்டியடித்து ஏறும் அந்த காட்சியை கண்ட நமது நெஞ்சமெல்லாம் பதறுகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் இந்த சொல்லொணாத் துயரங்களை காணும்போது, தேசிய ஊரடங்கை அறிவிக்கும் முன்னர் நடுவண் அரசு எந்த முன்தயாரிப்பிலோ, முறையான திட்டமிடலிலோ ஈடுபடவில்லை என்று தெளிவாகத் தோன்றுகிறது.  வெளிநாடுகளில் வசிக்கின்ற இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்த நடுவண் அரசு இந்தியாவுக்குள்ளேயே பிற மாநிலங்களில் பிழைப்புக்காக வேலை தேடிச் சென்ற இலட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான வசதியும், அவர்களது சொந்த ஊர்களுக்கு திருப்பி செல்வதற்கான வழிவகைகளும் ஏற்படுத்திக் கொடுக்காமல் இருந்தது மிகவும் அவலமான நிலை.

பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இப்போது அமலில் இருக்கின்ற சூழலில் பாதிக்கப்பட்ட இதுபோன்ற தனி நபர்களுக்கும், நலிவுற்ற சமூகங்களுக்கும் அந்தந்த மாநில அரசுகளும் மாவட்ட நிர்வாகங்களும் உடனடியாக தேவைப்படக்கூடிய விஷயங்களை உடனே செய்ய வேண்டும். இது குறித்து ஐநா மனித உரிமை உயர் ஆணையர் தனது ஆழ்ந்த கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்திருக்கிறார். கைகளில் முத்திரை குத்துவது, வீடுகளுக்கு வெளியே நோட்டீஸ் ஓட்டுவது போன்றவை அந்நபர்களை சமூகத்தில் தனிமைப்படுத்துவதோடு, மோசமான அவப்பெயரையையும் ஏற்படுத்திவிடும் என்ற தனது அக்கறையை தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார். உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவு, தண்ணீர், படுக்கை வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, அவர்கள் மீது பாகுபாடு காட்டாதிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி மாவட்ட மற்றும் மாநில அளவில் முன்னெடுக்கப்பட வேண்டிய நிவாரணப் பணிகளை மாநில மனித உரிமை ஆணையமும் இணைந்து செய்வதற்கு தேசிய மனித உரிமை ஆணையம் வலியுறுத்தவேண்டும்.

இதுதொடர்பாக கீழ்க்கண்ட பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன

*  24 மணி நேரமும் செயல்படக்கூடிய ஒரு ஹெல்ப்லைனை உருவாக்கி, பாதிப்புக்குள்ளான நிலையில் இருக்கும் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் உதவி செய்ய இந்த ஹெல்ப்லைன் எண்ணை வழங்கலாம்.
*    இதுபோன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருக்கக் கூடிய இடங்களில் போதிய நிவாரண பொருட்கள் உரிய நேரத்தில் சென்றடைகிறதா என்பதை மாநில மனித உரிமை ஆணையங்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். தேவைப்படின் நேரடியாக இந்த கண்காணிப்பில் ஈடுபடலாம்
*    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நாடோடிகள், பாலியல் தொழிலாளிகள், மாற்றுத் திறனாளிகள், திரு நங்கைகள், ஆதரவற்றோர் போன்ற நலிவுற்ற பிரிவினர் யாராக இருப்பினும் அவர்களிடம் எந்தவிதமான அடையாள அட்டையும் கேட்காமல் உடனடியாக அவர்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை (உணவு, தங்குமிடம், பிற அவசியத் தேவைகள்) நிவர்த்தி செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கும் உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும்
*    தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து செயல்பாட்டுக் குழுக்களை உருவாக்க வேண்டும். இக் குழுக்களில் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறை, நுகர்வோர் விவகாரங்கள் துறை, உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் பகிர்வுத் துறை போன்ற பல அரசுத் துறைகள் இதில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
*    தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் இறந்த புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசுகள் உடனடியாக இழப்பீட்டுத் தொகையை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையம் இதுதொடர்பாக தலையிட்டு இதற்குரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்.
*    ஆங்காங்கே சிக்கித் திணறும் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்பதற்கு உரிய வழிவகைகளை அந்தந்த மாநில அரசுகளுக்கும், ஒன்றிய பிரதேசங்களுக்கும் ரயில்வே துறை, விமானப் போக்குவரத்துத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு துறை போன்ற துறைகளுக்கு ஆணையிட வேண்டும்.
*    தங்களது கிராமங்களுக்கு திரும்பி வந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முறையாக தனிமைப்படுத்தி பரிசோதனை செய்வதற்கு போதிய வசதிகளை அந்தந்த மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இதுகுறித்து தெளிவான வரையறையை தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பிக்க வேண்டும்.
*    மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 12(a)-ன் படி இது போன்ற தேசிய ஊரடங்கு வேளைகளில் மாவட்ட நிர்வாக அதிகாரிகளின் செயலற்ற அல்லது பொறுப்பற்ற தன்மையினால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து பாதிக்கப்பட்டோர் தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்களிடம் முறையிடுவதற்கு வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.

4) சட்டத்தோடு முரண்படும் குழந்தைகள்
அண்மையில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற கிளையின் இளஞ்சிறார் நீதி குழு, நீதிமன்ற காவல் நிறுவனங்களில் அடைபட்டு கிடக்கும் அனைத்து குழந்தைகளையும் பிணையில் விடுமாறு அனைத்து இளைஞ்சிறார் நீதி குழுமங்களுக்கும் ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணை இளஞ்சிறார் நீதி சட்டம் 2015 அத்தியாயம் மூன்றின் அடிப்படையில் அமைய வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்குமான தேவைகள் மற்றும் அது எதிர்கொள்ளும் ஆபத்து குறித்த ஆய்வின் அடிப்படையில் இக்குழந்தைகளைப் பிணையில் விடவேண்டும். சட்டத்தோடு முரண்படும் குழந்தைகளுக்கு பிணை என்பது பொதுவானதாகும்: பிணை மறுப்பு என்பது விதிவிலக்காகும் என்பதை இச்சட்டத்தின் பிரிவு 12 தெளிவுபடுத்துகிறது.

குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களில் இருக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும். கொரோனா போன்ற கொள்ளை நோய் பரவி வரக் கூடிய சூழலில் - இதுகுறித்த அச்சம் மக்களிடையே நிலவி வருகின்ற வேளையில் - நீதிமன்ற காவல் நிறுவனங்களில் அடைபட்டுக் கிடக்கும் குழந்தைகளின் மனநிலை கவனிக்கத்தக்கது. தங்களது பெற்றோரோடு இணைந்து இருப்பதற்கான வாய்ப்பு இல்லாத இது போன்ற குழந்தைகளின் சூழல் மனரீதியாகவாவது அவர்களது பெற்றோரோடு இணைந்திருப்பதற்கு காணொலி மூலமாக வாய்ப்பை ஏற்படுத்தலாம். பாதுகாப்பற்ற சூழலில் வசிக்கும் பெற்றோர் அல்லது போதிய இடவசதி இல்லாத நிலையில் இருக்கும் பெற்றோர் தங்களது குழந்தைகளை, குழந்தை பராமரிப்பு நிறுவனங்களிலிருந்து அழைத்துச்செல்ல இது போன்ற சூழல்களில் கட்டாயப்படுத்தக்கூடாது

இந்நிறுவனங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பப்படும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை போல ஒரு உதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இது மாவட்ட ஆட்சியர் மூலமாக வழங்கப்பட்டு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மூலமாக விநியோகிக்கப்படலாம்.
இந்நிலையில் கீழ்க்கண்ட பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன.

*    வீடுகளுக்கு அனுப்பப்படும் குழந்தைகளை அழைத்துச் செல்வது யார் என்பது குறித்த விபரப் பட்டியலை தயார் செய்வதற்கான வழிமுறைகளை உருவாக்கிட குழந்தை மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்கு ஆணை பிறப்பித்து அதன்மூலம் மாநில அரசுகள் இதை செய்வதை உறுதி செய்ய வேண்டும். 
*    இவ்வாறு அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், அவர்களோடு உடன் செல்லும் காவல்துறையினருக்கு பயணம் மற்றும் தங்கும் வசதி, பயணத்தின் போது உணவு போன்ற செலவுகளுக்கான தொகையை வழங்குவது குறித்த தெளிவான வரையறைகள் வகுக்கப்பட வேண்டும்.

மேலும்..
கொடூரமான கொரோனா கொள்ளை நோய் நாடுமுழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தும் வேளையில் இந்த பரவலை தில்லி தப்லிக் ஜமாத் மையச் செயல்பாடுகளோடு இணைத்துப் பேசி, இது தொடர்பாக இஸ்லாமிய சிறுபான்மை சமூகங்கள் மீது வெறுப்புப் பிரச்சாரத்தை ஒரு சில நபர்கள், சில மத வெறி அமைப்புகள் மேற்கொள்கின்றன. அவர்களுடைய வெறுப்புப் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்திடவும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்திடவும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் அனைத்து மாநில மற்றும் ஒன்றிய பிரதேசங்களின் காவல்துறை தலைமை இயக்குனர்களுக்கு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும்.

பேரிடர் சூழல்களில் உடனடியாக இறங்கி செயல்பட வேண்டிய தேசிய பேரிடர் பாதுகாப்புப் படை (NDRF) செயல்படாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. 18 நிபுணர்களையும் 45 உயர் அதிகாரிகளையும் கொண்ட 12 படைப்பிரிவுகள் நாடு முழுக்க தயார் நிலையில் இருப்பதாக சொல்லப்பட்டாலும், கொரோனா கொள்ளை நோய் மிகத் தீவிரமாக இந்தியா முழுக்க பரவி மக்களை அச்சுறுத்தும் வேளையில், இத்தேசிய பேரிடர் பாதுகாப்பு படையின் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது ஏராளம். குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வீடற்றோர் போன்ற நலிவுற்ற பிரிவினருக்கு தேவைப்படும் நிவாரண உதவிகளை வழங்கிடுவதில் இப்படையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.