tamilnadu

img

எப்படி ரஷ்யப் புரட்சி ஒன்றுபட்ட இந்தியாவின் இலக்கியக் கர்த்தாக்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் உத்வேகத்தை ஏற்படுத்தின? -சௌரவ் குமார்

(இந்தியாவில், பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு எதிராக நடந்து வந்த சுதந்திரப் போராட்டத்திற்கு ரஷ்யாவில் நடைபெற்ற முதல் வெற்றிகரமான சோசலிசப் புரட்சி எப்படி ஆழமான முறையில் உந்துசக்தியாக விளங்கியது என்பதை கட்டுரையாளர் இந்தக் கட்டுரையில் சுருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்.)

2019 நவம்பர் 7 – மாமேதை லெனின் தலைமையில் நடைபெற்ற அக்டோபர் புரட்சியின் 102ஆவது ஆண்டு தினமாகும். இப்புரட்சி இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்திற்காக போராடிவந்தவர்கள் மத்தியில் ஆழ்ந்த படிப்பினைகளையும் உற்சாகத்தையும் உருவாக்கியது. சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவுஜீவிகள் என்று சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்கள் மத்தியிலும் அக்டோபர் புரட்சி உத்வேகத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இதனை இவர்கள் தங்கள் கலை, இலக்கியப் படைப்புகளிலும் மிகவும் ஆழமான முறையில் பதிவு செய்தார்கள். இவர்கள் தங்கள் பங்களிப்புகளின் மூலமாக ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளுக்கு வழிகாட்டினார்கள்.

1905இல் நடைபெற்ற முதல் ரஷ்யப் புரட்சியிலிருந்துதான் கதார் கட்சி போன்ற சில அமைப்புகள் உருவாயின. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, இதனை “இந்த நூற்றாண்டின் மாபெரும் நிகழ்வு” என்றும், “நமக்கெல்லாம் ஒரு பெரிய படிப்பினை” என்றும் கூறினார்.  “கொடுங்கோலாட்சிக்கு எதிராக ரஷ்யப் பாதைக்கு இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது” என்றும் கூட காந்தி கூறியிருந்தார். ரஷ்யப் புரட்சி, மார்க்சிய – லெனினியத்தை சர்வதேச  அளவில் ஒரு வீறார்ந்த தத்துவார்த்த சக்தியாக மாற்றி இருந்தது.

கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில் ஆளும் வலதுசாரி சக்திகள், சோவியத் ரஷ்யாவில் நடைபெற்ற அக்டோபர் புரட்சி குறித்தும் அதற்குத் தலைமை தாங்கிய மாமேதை லெனின் குறித்தும் அதன் தாக்கம் இந்தியாவில் எப்படியெல்லாம் இருந்தது என்பது குறித்தும் துர்ப்பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் ரஷ்யப் புரட்சி, இந்தியாவிலிருந்த இலக்கியக் கர்த்தாக்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் எப்படியெல்லாம் பாதிப்பையும் உத்வேகத்தையும் அளித்த்து என்பதற்கு ஒரு சில எடுத்துக்காட்டுக்களைக் கீழே தருகிறோம்.

மேடம் பிகாஜி காமா (Madam Bhikaji Cama)

மேடம் பிகாஜி காமா, ரஷ்யாவில் நடைபெற்ற 1905 புரட்சியில் தொழிலாளர் வர்க்கத்தின் பங்களிப்பினைப் பாராட்டிய, வெளிநாடு வாழ் முதல் இந்தியப் பெண்மணியாவார். இவர் மார்க்சியம் குறித்தும், லெனின் மற்றும் போல்ஷ்விக்குகளின் முக்கியத்துவம் குறித்தும் உணர்ந்த முதல் நபராவார்.

1907 ஆகஸ்ட் 22 அன்று அவர் ஆற்றிய ஓர் உரையில், “நான், மனித நீதியின் நடுவர் மன்றத்தின் முன் உரையாடுகிறேன். ஏனெனில் சோசலிசம் நீதியைச் சொல்கிறது …இந்தியாவும் விழித்தெழுந்து, ரஷ்யத் தோழர்களின் உதாரணங்களைப் பின்பற்றும் ஒரு நாள் வரும் என்று நான் நம்புகிறேன். அவர்களுக்கு நம் சகோதரத்துவ வாழ்த்துக்களை அனுப்பிடுவோம்,” (“I stand before the tribunal of human justice because Socialism spells Justice…I believe a day will come when India will awake and follow the example of our Russian Comrades to whom we particularly send our fraternal greetings.”) என்று கூறினார்.

மேடம் பிகாஜி காமா, சோவியத் புரட்சியின் அனுபவங்களையொட்டி இந்தியாவில் இளைஞர்களைத் தயார் செய்யும் விதத்தில் வந்தே மாதரம் (Bande Mataram) என்னும் இதழை ஜெனிவாவில் அச்சிட்டு வெளியிட்டார்.

பாரதியார்

தமிழ்க் கவிஞரும் எழுத்தாளருமான மகாகவி சுப்பிரமணிய பாரதியார், இந்தியாவில் தேசிய சிந்தனை எழுச்சிக்கு சர்வதேச உணர்வை ஓர் உரைகல்லாகக் கொண்டார். புதிய ரஷ்யா என்னும் தலைப்பில் சோவியத் புரட்சியை வாழ்த்தி கவிதை படைத்தார். அக்கவிதையர் அவர்,

குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு

மேன்மையுறக் குடிமை நீதி

கடியொன்றி லெழுந்தது பார் குடியரசென்று

உலகமறியக் கூறிவிட்டார்.

அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது

அடிமை இல்லை அறிக என்றார்

இடிபட்ட சுவர்போலே கலி விழுந்தான்

கிருத யுகம் எழுக மாதோ!

என்று பாடினார். இதில் அவருடைய அரசியல் சிந்தனையும் பிரதிபலித்தது.

காசி நஸ்ருல்

காசி நஷ்ருல், ஒரு வங்கிக் கவிஞர். இவ‘ரும் அக்டோபர் புரட்சியால்  ஈர்க்கப்பட்ட கவிஞர்களுள் ஒருவராவார். போல்ஷ்விக் புரட்சி குறித்து எண்ணற்ற கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

சதாத் ஹசன் மாண்டோ

அதேபோன்றே எழுத்தாளர் சதாத் ஹசன் மாண்டோ அவர்களும் அக்டோபர் புரட்சியின் ஆதரவாளர்களில் ஒருவர். இவர், “காரல் மார்க்ஸ்” என்று தலைப்பில் எழுதிய ரேடியோ நாடகம் ஒன்றில், அன்றைய “சோவியத் சோசலிசக் குடியரசு யூனியன் (USSR) என்பது ஒரு கனவோ அல்லது வறட்டுத்தனமான சிந்தனையோ அல்லது கிறுக்குத்தனமோ அல்ல. அது ஒரு துல்லியமான எதார்த்தம். இது,  ஆயிரக்கணக்கான மைல்கள் நீளம் கொண்டிருந்த இட்லரின் படைகளை, அவனுடைய உறுதியான பாசிசத்தைப் பொடிப்பொடியாகத் தகர்த்தெறிந்தது. அதுநாள்வரையிலும் ஒரு சிலரின் கனவாக இருந்த சோசலிசத்தை,  ரஷ்யாவில் நலிவுற்றிருந்த மனிதகுலத்தின் நம்பிக்கை என்னும் ஒளிக்கீற்றாக மாற்றியிருக்கிறது. இத்தகையதொரு சோசலிச அமைப்பைத்தான் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு காரல் மார்க்ஸ் தயாரித்து அளித்தார். இவ்வாறு அவர், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் தனக்காக மட்டுமல்ல, ஒரு தேசத்துக்காக மட்டுமல்ல,   ஓர் இனத்துக்காக மட்டுமல்ல, ஒரு நாட்டுக்காக மட்டுமல்ல, மாறாக உலகம் முழுமைக்கும், உலகத்தில் வாழும் மனிதகுலம் முழுமைக்கும் அளித்துச் சென்றுள்ளார்,” என்று குறிப்பிட்டார்.  

பிரேம் சந்த்

புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் முன்ஷி பிரேம் சந்த், ரஷ்யாவில் நடைபெற்ற நிகழ்வுகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். இதை 1919 பிப்ரவரியில் சமானா (Zamana) என்னும் இதழில் எழுதியுள்ள ‘பழைய சகாப்தமும் புதிய சகாப்தமும் என்னும் கட்டுரையில் காண முடியும். இக்கட்டுரையில் அவர், ஒரு நேர்மையான தொழிலாளி எப்படி முதலாளித்துவத்தின்கீழ் முதலாளியின் அடிமையாக மாறுகிறான் என்பதைத் தோலுரித்துக் காட்டியிருப்பார். மேலும் பணம் படைத்த வர்க்கங்களால் மேற்கொள்ளப்படும் யுத்தங்களில் அவர்களுக்காக ஏழைகள் போராடி மடிவதையும் எடுத்துக்காட்டியிருப்பார். 

அதேபோன்று ரஷ்யப் புரட்சியின் நலன்களால் மிகவும் ஆழமானமுறையில் ஈர்க்கப்பட்டு, ஜமீன்தாரி (நிலப்பிரபுத்துவ) அமைப்பு முறைக்கு எதிராகவும், நிலச் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாகவும் எண்ணற்ற படைப்புகளைப் படைத்திருக்கிறார்.

முகமது இக்பால்

அக்டோபர் புரட்சியைக் கொண்டாடி ஆசியாவில் எழுதிய முதல் உருதுக் கவிஞர் முகமது இக்பால் ஆகும். இக்பாலின் மூலதனமும் உழைப்பும் என்கிற உருதுக் கவிதை, ரஷ்யாவில் மனிதகுலம் பெற்றிட்ட வெற்றிக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறது. ஏகாதிபத்தியத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் எதிராக நடைபெறும் யுத்தத்தில், உலகத் தொழிலாளர் இயக்கம் சோவியத் ரஷ்யா மேற்கொண்ட பாதையைப் பின்பற்ற வேண்டும் என்று  பகிரங்கமாக அறைகூவல் விடுத்தார்.

ரவீந்திரநாத் தாகூர்

ரவீந்திரநாத் தாகூர் எழுதிய “ரஷ்யாவுக்குக் கடிதம்” என்பது அக்டோபர் புரட்சி குறித்து முத்திரை பதித்த படைப்புகளில் ஒன்றாகும்.   இதில் அவர், “ரஷ்ய மண்ணில் காலடி வைத்த்துமே என் கண்ணில் கண்ட முதல் விஷயம், கல்வியில் அங்கே ஏற்பட்டிருந்த மாற்றமாகும். எந்தவிதத்தில் பார்த்தாலும்,  கடந்த 150 ஆண்டுகளில்  வேறெந்த நாட்டிலும் நடந்திராத விதத்தில் அங்கு ஆட்சி செய்கின்ற தொழிலாளர்-விவசாயிகள் வர்க்க ஆட்சியானது ஒருசில ஆண்டுகளிலேயே அளப்பரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதைக் கண்டேன்,” என்று எழுதியிருக்கிறார். மேலும் அவர், “ஒரு குறுகிய பத்தாண்டு காலத்திற்குள்ளாகவே, பல்லாயிரக்கணக்கான மக்களை அறியாமை மற்றும் சீரழிவுகளிலிருந்து அகற்றி, அவர்களுக்கு எப்படிப் படிப்பது என்றும் எழுதுவது என்றும் சொல்லிக் கொடுத்து மனித குலத்தின் மாண்பினை உணர வைத்துள்ளார்கள். கல்வியில் அவர்கள் செய்துள்ள சாதனையை நாம் இங்கேயும் கொண்டுவர வேண்டும்,” என்றும் கூறியுள்ளார்.

பூபேந்திரநாத் தத்தா

அக்டோபர் புரட்சியும், அதில் லெனின் பெற்ற வெற்றியும் இந்தியாவில் காலனி ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த இளைஞர்கள் மத்தியிலும் ஆர்வத்தை ஏற்படுத்தின. அவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்தபோதிலும், ஏகாதிபத்திய ஆட்சியின் சுரண்டல் மற்றும் பாகுபாடுக்கு எதிராக மனித  குலத்தை விடுவிப்பதற்கு சோசலிசப் பாதையே சிறந்த பாதை என்று கண்டனர். ஸ்வாமி விவேகானந்தரின் சகோதரர் பூபேந்திர தத்தா, ரஷ்யப் புரட்சியால் மிகவும் ஈர்க்கப்பட்டு அதன் படிப்பினைகளை இந்திய நிலைமைகளுக்கேற்ப அமல்படுத்திட முயற்சித்தார். இவர் 1921இல் மாஸ்கோவில் கம்யூனிஸ்ட் அகிலத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

எம்.என்.ராய் மற்றும் பிரேந்திரநாத் தாஸ்குப்தா ஆகியோரும் கம்யூனிஸ்ட் அகிலத்தில் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வினைத் தொடர்ந்து, தத்தா, 1921 ஆகஸ்ட் 23 அன்று, “கம்யூனிஸ்ட் புரட்சியே, இந்தியப் பிரச்சனைக்கு இறுதித் தீர்வு” என்னும்  தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரை (thesis) யை அனுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்து லெனின் அவருக்கு “விவசாயிகளின் பிரச்சனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்,  அதுவே இந்தியாவின் விடுதலைக்கு முக்கியம்,” என்று அறிவுறுத்தி இருந்தார்.

கேப்டன் லட்சுமி சேகல்

ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்துடன் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற துணிவுமிக்க வீராங்கனைகளில் தோழர் கேப்டன் லெட்சுமி சேகலும் ஒருவர். மீரட் சதி வழக்கின்போது தலைமறைவாயிருந்த லெட்சுமி சேகலின் குடும்பத்துடன் தங்கியிருந்த லெட்சுமி சுஹாசினி நம்பியார், போல்ஷ்விக் புரட்சி குறித்தும், லெனின் குறித்தும், இந்தியாவில் அப்போது அரும்பி வளர்ந்துகொண்டிருந்த கம்யூனிஸ்ட் இயக்கம் குறித்தும் கூறியிருக்கிறார். இவைதான் பின்னர் கேப்டன் லெட்சுமி சேகலை, தன்னுடைய மத்தியதர அபிலாசைகளுக்கும் மேலாக நாட்டில் உள்ள வறுமையை, சாதியக் கொடுமைகளை, ஆண்-பெண் பாகுபாடுகளையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற உறுதியை அளித்தது. லட்சுமி சுஹாசினி நம்பியார்  அவருக்கு சர்வதேச கீதத்தையும் பாடுவதற்குக் கற்றுக் கொடுத்தார். பின்னர், கேப்டன் லட்சுமி, இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் தன்னை இணைத்துக்கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தார்.

பகத்சிங்

ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த பகத்சிங்கும், சோவியத் ரஷ்யாவின் வெற்றிகளுக்குக் காரணமான தத்துவத்தால் ஈர்க்கப்பட்டார். இதன் விளைவாக, 1928இல் தில்லியில் இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம் (HSRA-Hindustan Socialist Republican Association) என்னும் அமைப்பை ஏற்படுத்தினார். 

1930‘ ஜனவரி 21இல் பகத்சிங்கும் அவருடைய தோழர்களும், லாகூர் சதிவழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகும்போது, தலையில் சிவப்பு கழுத்துப்பட்டையை அணிந்து கொண்டு வந்தனர். நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு வந்தவுடன், “சோசலிசப் புரட்சி நீடூழி வாழ்க!” என்றும், “கம்யூனிஸ்ட் அகிலம் நீடூழி வாழ்க!” என்றும், “மக்கள் நீடூழி வாழ்க!” என்றும், “லெனின் பெயர் என் றென்றும் இறக்காது!” என்றும் “ஏகாதிபத்தியம் ஒழிக!” என்றும் முழக்கமிட்டனர்.

பகத்சிங் தந்தி வாசகம் ஒன்றை நீதிமன்றத்தில் படித்துக்காண்பித்துவிட்டு பின்னர் அதனை கம்யூனிஸ்ட் மூன்றாவது அகிலத்திற்கு அனுப்ப வேண்டும் என்று நீதித்துறை நடுவரிடம் கேட்டுக்கொண்டார். அந்தத் தந்தியில், “லெனின் தினமான இன்று நாங்கள், மாமேதை லெனினின் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக ஏதேனும் ஒருவிதத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ரஷ்யாவில் நடைபெற்ற மாபெரும் புரட்சி வெற்றி பெற வாழ்த்துகிறோம்.  எங்கள் குரலை, சர்வதேச தொழிலாளர் வர்க்க இயக்கத்துடன் நாங்கள் இணைத்துக்கொள்கிறோம். தொழிலாளர் வர்க்கம் வெல்லும். முதலாளித்துவம் தோற்கடிக்கப்படும். ஏகாதிபத்தியத்திற்கு சாவுமணி அடிக்கப்படும்.”

(“ON LENIN DAY WE SEND HEARTY GREETINGS TO ALL who are doing something for carrying forward the ideas of the great Lenin. We wish success to the great experiment Russia is carrying out. We join our voice to that of the international working class movement. The proletariat will win. Capitalism will be defeated. Death to Imperialism”.) என்று எழுதியிருந்தது.

பகத்சிங் தூக்குமேடை ஏறிய அன்றையதினம் கூட, கிளாரா செட்கின் என்கிற ஜெர்மன் மார்க்சிஸ்ட் எழுதிய, லெனின் நினைவுக்குறிப்புகள்  (Reminiscences of Lenin) என்று பெயரிட்டிருந்த நூலை வாசித்துக் கொண்டிருந்தார்.

ரஷ்யப் புரட்சியையும் அதன் முக்கியத்துவத்தையும் இந்தியாவின் சமூகப் பொருளாதார பின்னணியில் எந்தக் காலத்திலுமே நீர்த்துப்போகச் செய்திட முடியாது.  ஏனெனில், இந்திய அரசமைப்புச் சட்டமே, புரட்சிக்குப் பின் சோவியத் ரஷ்யா அடைந்த அளப்பரிய முன்னேற்றங்களின் விளைவாக உருவானதுதான். நம் அரசமைப்புச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் கண்டுள்ள அரசின் கொள்கைகளின் வழிகாட்டும் நெறிமுறைகளும் (Directive Principles of State Policy), மற்றும் 39, 41, 42, 43 மற்றும் 46 ஆகிய ஐந்து பிரிவுகளும் “சோசலிசக் கொள்கைகளை” அடிப்படையாகக் கொண்டவைகளாகும்.

சோசலிசத்தை அடைவதற்கான யுத்தம் தொடர்கிறது. இந்தியாவில் சோசலிசம் என்பதன் பொருள், இந்தியப் புரட்சியின் ஜனநாயகக் கட்டம் நிறைவுபெற்ற பின்னர், அதாவது, மக்கள் ஜனநாயகப் புரட்சி நடந்த பின்னர் மட்டுமே, கெட்டிப்படுத்தப்படும்.

காரல் மார்க்சின் நம்பிக்கையூட்டும் வாசகமான, “இதுவரையிலும் தத்துவஞானிகள் உலகின் நிலை குறித்து பல்வேறு வழிகளில் வியாக்கியானம் மட்டுமே செய்திருக்கிறார்கள். எனினும், பிரச்சனை என்னவென்றால்   அதனை எப்படி மாற்றுவது என்பதேயாகும்,” என்று கூறியுள்ளதன் அடிப்படையில், இந்தியாவில் சமதர்ம சமுதாயம் காண்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிந்து அந்தத் திசைவழியில் முன்னேறுவதற்கு, நம்மை நாம் தயார்ப்படுத்திக் கொள்வோம்.

(நன்றி: நியூஸ்கிளிக் இணைய இதழ்)

(தமிழில்: ச.வீரமணி)