tamilnadu

img

கண்ணீருக்கு கரை இருக்கா? - நவகவி

கங்கைக்கு... கரை இருக்கு...
கண்ணீருக்கு... கரை இருக்கா?...
நாளைக்கு... நிச்சயமாய்...
உலை கொதிக்க... வழி இருக்கா?...
          கோடித் துணி கிடைத்திடும் நிச்சயமா!
          போடத் துணி கிடைக்குமா நிச்சயமா?
(கங்கைக்கு)
வீதிகளே... வீடுகளாய்...
வெயில் ஒளியே... வெள்ளுடையாய்...
         ஏழை இந்தியா இடுப்பொடிஞ்சு கிடக்கு.
அரைப் பட்டினி... கூட்டத்திலே...
அன்னாடம்... காய்ச்சிகளே...
         செல்வச் சீமான் பரம்பரையாய் இருக்கு!
                       வேலைக்கு அலைகிற கூட்டம்.
                       விழிகளில் கண்ணீர்த் தோட்டம்.
கூலி வேலைக்கும் எங்கே வாய்ப்பிருக்கு?
கூலிக்குக் கொலை செய்யும் வேலை வாய்ப்பிருக்கு!
(கங்கைக்கு)
தேம்பி அழ... தெம்பின்றி...
விம்மி அழ... துணிவின்றி...
         வெடிக்காத எரிமலையாய் என் தேசம்.
நொடி தோறும்... நோய் நொடியில்...
அடிமாட்டு... மனநிலையில்...
      கோயில் என்றிவர் துதிப்பது கொலைக்கூடம்.
                       முழுமையும் கூட மொக்கை.
                       சாறு இருந்தும் சக்கை.
அறிவுஜீவிகள் சுகஜீவிகளாக
ஆகிப் போயினர் வீரியம் விலைபோக.
(கங்கைக்கு)
தலைகனத்தோர்...செய்த விதி...
தலைவிதியாய்... ஏன் நினைத்தீர்?...
         தலை கொடுத்தீரே ஏழை ஆடுகளே!
கொலைக் கத்தி...பளபளப்பு...
கொடுத்திடுமோ... வெளிச்சத்தை?...
         கோட்சே கும்பிடு தேசத்தை ஆள்கிறதே.
                       புயலுக்குப் போட்டனர் பூட்டு.
                       புயவலு எதிரிக்குக் காட்டு.
ஏழையின் சிரிப்பில் இறைவனை ஏன் காண?
எக்காளமாய் சிரி எமனை அவர் காண!
        (கங்கைக்கு)