பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு டிசம்பர்6ஆம் தேதி இடிக்கப்பட்டது.இதனால் நாடு முழுவதும் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இடித்தவர்கள் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.ஏறக்குறைய 28 ஆண்டுகள் கடந்து விட்டன. செப்டம்பர்30ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. அன்றைய தினம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அத்வானி உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊடகங்கள் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்து பெரும் பரபரப்பை உருவாக்கவில்லை. நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பை வழங்கும் என்பதை ஊகத்தின் அடிப்படையில் உணர்ந்து கொண்ட மக்கள் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாகவே இருக்கின்றனர்.
பாபர் மசூதி 450 ஆண்டுகளுக்கு மேலாக அமைந்திருந்த இடம் யாருக்குச் சொந்தமானது என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்,”மசூதியை இடித்தது கிரிமினல் குற்றம் “ என முடிவு செய்தது. ஆகவே இடித்ததுகிரிமினல் குற்றம் என உச்சநீதிமன்றம் தீர்மானித்ததால், இடிக்கப்பட்ட இடத்தில் பாபர் மசூதியே மீண்டும் கட்டப்பட வேண்டும் என்ற தொடர் முடிவுக்கு நீதிமன்றம் இயல்பாக வந்திருக்க வேண்டும் என்பது தான் பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் அதற்கு முரணாக தேசத்தின் அடிப்படை சட்ட விதிமுறைகளை பின்னுக்குத் தள்ளி பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என நம்பிக்கைசார்ந்த ஒரு தீர்ப்பினை கூறியது. இது சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் மனதில் பெரும் அதிர்ச்சியை அப்பொழுது ஏற்படுத்தியது.
இளம்பெண்ணை பொது இடத்தில் கையைப் பிடித்து இழுத்தது குற்றம் என ஒரு கிராம பஞ்சாயத்து முடிவு செய்தால், குற்றம் புரிந்தவனுக்கு தண்டனை தான் வழங்குமே அன்றி அவனுக்கு அந்தப் பெண்ணை திருமணம் செய்து வைக்கும் முடிவை ஒருபோதும் உறுதியாக எடுக்காது. பொதுப்புத்தியில் கிராம பஞ்சாயத்துகளை, கட்டப்பஞ்சாயத்து என கேலி செய்யும் நிலையில், அதைவிட தரம் தாழ்ந்து “ பாபர் மசூதியை இடித்தது கிரிமினல் குற்றம், ஆனால் இடித்தவர்கள் மசூதி இருந்த இடத்தில்ராமருக்கு மந்திர் கட்டிக்கொள்ளலாம்” என உச்சநீதிமன்றம் செய்த சட்டப்பஞ்சாயத்து, மக்கள் மனதில் ஆறாத வடுவையும் அவநம்பிக்கையையும் நீதிமன்றத்தின் மீது ஏற்படுத்தி உள்ளது.பாபர்மசூதி ஒன்றும் தானாக இடிந்து விடவில்லை. திடீரென ஒரு விபத்து போலவும் அந்த சம்பவம் நடைபெறவில்லை. மனித சக்திக்கு அப்பாற்பட்ட கடவுளின் செயலாகவும் அது நிகழ்ந்து விடவில்லை. ஆர்எஸ்எஸ் இந்துத்துவா அமைப்புகளால் நாள் குறித்து லட்சக்கணக்கான கரசேவகர்களை ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட செயல். சம்பவத்திற்கு ஒரு நாள் முன்னதாக இடிப்பதற்கான ஒத்திகையும் அங்கே நடத்தப்பட்டு உள்ளது. அனைத்திற்கும் மாநில பாஜக அரசின் காவல்துறையும் மத்திய அரசின் ராணுவமும் மௌன சாட்சியாக இருந்துள்ளன.பாபர்மசூதி அருகில் ராம் கதா குஞ்சில் இருந்த அத்வானி,முரளி மனோகர் ஜோஷி, சுதர்சனம், அசோக் சிங்கால், உமாபாரதி உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் இந்துத்துவா தலைவர்கள் இடிப்பு நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடந்தேறுகிறதா என கண்காணித்து கரசேவகர்களுக்கு தலைமை தாங்கிக் கொண்டு இருந்தனர்.
இடிப்பு நிகழ்வுகளைப் பற்றி லிபரான் குழுவின் அறிக்கை பின்வருமாறு விவரிக்கிறது. “அத்வானி, ஜோஷி,விஜய்ராஜே சிந்தியா ஆகியோர் கரசேவகர்களை மசூதி மேலிருந்து கீழே இறங்கும்படி சுரத்தற்ற வேண்டுகோள்களை விடுத்தனர். நல்லெண்ணத்துடன் இதைச்செய்தார்களா அல்லது ஊடகங்களின் கண்துடைப்பிற்காக செய்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் கரசேவகர்களை கருவறைக்குள் நுழைய வேண்டாம் என்றோ கட்டிடத்தை இடிக்க வேண்டாம் என்றோ யாரும் கேட்டுக்கொள்ளவில்லை. இவ்வாறு அவர்கள் கேட்டுக் கொள்ளாதது, அவர்கள் சரச்சைக்குரிய கட்டிடத்தை இடித்து விடமென்பதையே அவர்களின் உண்மை அவா என்பதைக் காட்டுவதாக உள்ளது”.
இந்த தலைவர்களும் இவர்களின் கட்சி ஆட்சியிலிருந்த உத்தரப் பிரதேச மாநில அரசும், பாபர் மசூதியை இடிக்க மாட்டோம் என அன்றைய மத்திய அரசுக்கும், நீதிமன்றத்திற்கும் உத்தரவாதமும் உறுதியும் அளித்திருந்தனர். ராமர் பெயர் பொறித்த செங்கல்லை நட்டு கரசேவை செய்வதற்காக மட்டும் கூடுகிறோம் என ஏமாற்றி விட்டு மசூதியை இடித்து தள்ளினார்கள். அதற்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து அத்வானி நாடகம் ஆடினார்.இடிக்க மாட்டோம் என இடித்து விட்டு இப்பொழுது சிபிஐ நீதிமன்ற வழக்கு விசாரணையில், இடிப்பு சம்பவத்திற்கும் எங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என குற்றச்சாட்டை அத்வானி உள்ளிட்டோர் மறுத்தும் உள்ளனர்.
ஏற்கெனவே அத்வானி உள்ளிட்ட தலைவர்களை சட்டத்திற்கு உட்பட்டு விசாரிக்காமல், நம்பிக்கை சார்ந்துவிடுதலை செய்த சிபிஐ நீதிமன்றம், பிற்பாடு உச்சநீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் மீண்டும் வழக்கை விசாரித்திருக்கிறது. அதுவும் உச்சநீதிமன்றம் பாபர்மசூதி இடம் குறித்து தீர்ப்பளித்த பிறகு தனது தீர்ப்பை வழங்க உள்ளது.குற்றச்சாட்டை மறுத்த காரணத்தினால், நேரிடையாக கடப்பாறையையோ சம்மட்டியையோ எடுத்துக் கொண்டு போய் அத்வானி உள்ளிட்டோர் இடிக்கவில்லை எனக் கூறிசந்தேகத்தின் பலனை எதிரிகளுக்கு சாதகமாக்கி நீதிமன்றம்விடுதலை செய்யலாம். அல்லது உச்சநீதிமன்றம் இடித்தது கிரிமினல் குற்றம் என்று சொன்னதால் அத்வானி உள்ளிட்டோர் குற்றவாளிகள் என ஒருவேளை நீதிமன்றம் முடிவு செய்தாலும், இடித்த இடம் ராமர் கோவிலுக்கு உரியது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பதால், ராமர் கோவில் கட்டுவதற்காகத் தான் பாபர்மசூதியை நல்லெண்ணத்துடன் இடித்தார்கள். இதில் குற்றவியல் நோக்கம் எதுவும் இல்லை என்று கூட அத்வானி உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த தலைவர்களை நீதிமன்றம் விடுதலை செய்யவும் வாய்ப்புள்ளது. சாட்சியங்கள் பலமாக இருப்பதாகக் கருதினால் தண்டனை என்ற பெயரில் ஒரு கண்துடைப்பு நாடகத்தையும் நடத்தலாம்.இத்தகைய ஊகங்களின் அடிப்படையில் தான், சிபிஐ நீதிமன்ற விசாரணையை புரிந்து கொண்ட பொதுமக்கள் தீர்ப்பைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏதுமின்றி அலுத்தும் சலித்தும் போய் இருக்கிறார்கள். ஆனால் பாபர்மசூதி இடிப்பிற்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்ட 2000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களுக்கு யார் நீதி வழங்கப் போகிறார்கள்? வரலாறு தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்.
கட்டுரையாளர்: வரத.இராஜமாணிக்கம், வழக்கறிஞர், பழனி நகர்மன்ற முன்னாள் தலைவர்