தஞ்சாவூர்:
தஞ்சையின் புராதனச் சின்னமாக விளங்கும் பெரியகோவில் அகழியையொட்டி உள்ள கோட்டைச் சுவரை இடிக்கும் பணியை சிபிஎம்-சிஐடியு நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். இவற்றை மீண்டும் சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
தஞ்சாவூர் கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே, பெரியகோவில் கோட்டைக்கு அரணாக விளங்கும் அகழி சுவரை செவ்வாய்க்கிழமை, ஒப்பந்ததாரர் மேற்பார்வையில் சிலர் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் இடித்துக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் என்.குருசாமி, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு ஆகியோர் சென்று விசாரித்துள்ளனர். “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்திற்காக வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாக்கப்பட்ட பகுதியான அகழியை இடிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்த இருவரும், இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரனிடம் அலைபேசியில் புகார் செய்தனர். இதையடுத்து அங்கு வந்த மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி பொறியாளர் ஆகியோர், “இடித்தது குறித்து தகவல் தெரியாது” என தெரிவித்ததுடன், பணிகளை நிறுத்த உத்தரவிட்டனர்.
இதுகுறித்து சிபிஎம் மாநகரச் செயலாளர் என்.குருசாமி, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு ஆகியோர் கூறுகையில், “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் போது, கோட்டைச் சுவர், அகழி உள்ளிட்ட புராதனச் சின்னங்கள் பாதுகாக்கப்படும் என ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உறுதி அளித்திருந்த நிலையில், அதை மீறி அகழி கோட்டைச் சுவர் இடிப்பு நடந்துள்ளது. சுமார் 50 அடிக்கு, ஆங்காங்கே சேதப்படுத்தி உள்ளனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான வரலாற்று அடையாளத்தை பாழ்படுத்தி உள்ளனர். மாநகராட்சி ஆணையர், பொறியாளர் இடித்தது, தங்களுக்கு தெரியாது என்கின்றனர். இதனை ஏற்க முடியாது. அதிகாரிகளுக்கு தெரியாமல் எப்படி நடக்கும்? அகழியை பாதுகாக்கப் போகிறோம் எனச் சொல்லி, பல ஆண்டுகளாக குடியிருந்து வந்த மக்களை அப்புறப்படுத்தி விட்டு, இப்போது அதற்கு மாறாக அகழியையும், கோட்டைச் சுவரையும் இடிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை. மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்” என்றனர்.