tamilnadu

தமிழ்ப் பல்கலை.க்கு சிங்கப்பூர் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை

தஞ்சாவூர்: சிங்கப்பூரில் உள்ள உமறுப்புலவர் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் ராமன், சுமதி ஆகியோர் எட்டு மாணவர்களுடன், தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடி மையம், நூலகம் மற்றும் பல்துறை ஆராய்ச்சிகள் குறித்து அறியும் நோக்கத்தோடும் ஆர்வத்தோடும் தஞ்சைக்கு வருகை தந்தனர்.  அவர்களைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்பிரமணியன் வரவேற்றுக் கலந்துரையாடினார். அயல்நாடுகளுடன் மேற்கொண்டுள்ள ஆசிரியர் மாணவர் பரிமாற்றங்கள், புரிந்துணர்வு உடன்படிக்கைகள் குறித்து சிங்கப்பூர் மாணவர்களும், ஆசிரியர்களும் கேட்டறிந்தனர். பிறகு, புகழ்பெற்ற முதுமுனைவர் வ.ஐ.சுப்பிரமணியம் நினைவு நூலகத்தைப் பார்வையிட்டனர்.  சுவடி மையத்திலிருக்கும் வருவாய் ஆவணச்சுவடிகள், முடங்கல், மருத்துவ ஓலைச்சுவடிகள் ஆகியவற்றைப் பார்வையிட்டனர். முன்னதாக தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் கு.சின்னப்பன், துணைப் பதிவாளர் கோ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.