tamilnadu

புதுக்கோட்டை , தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

மின்னல் தாக்கி தொழிலாளி பலி 
புதுக்கோட்டை ஆக.31-புதுக்கோட்டை மாவட்டம் அருகே மேலமுத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சி.சுப்பிரமணியன்(37). கட்டிடத் தொழிலாளியான இவர், வியாழக்கிழமை மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மழை பெய்யவே வம்பன் 4 சாலைப் பகுதி மரத்தின் அருகே ஒதுங்கினார். அப்போது, மின்னல் தாக்கி படுகாயம் அடைந்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து ஆலங்குடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தஞ்சை போக்குவரத்து அலுவலகத்தில் ரெய்டு 
தஞ்சாவூர் ஆக.31- தஞ்சாவூரில், திருச்சி சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறையினர் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர். ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆய்வுக் குழுவினரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். இரவு 9 மணி வரை சோதனை நடந்தது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்ட அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத 2 லட்சத்து 93 ஆயிரத்து 840 ரூபாய் சிக்கியது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.