பட்டுக்கோட்டையில், காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் அடையாலம் தெரியாத நபர்கள் அதிகாலை பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, ஆனை விழுந்தான் குளத்தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 26),. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மாணவர் அணி மாநில பொதுச் செயலாளராக உள்ளார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (23ம் தேதி) அதிகாலை 1:30 மணிக்கு, பைக்கில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஸ்ரீகாந்தின் வீட்டை நோக்கி பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதில் வீட்டின் முகப்பு கதவில் இருந்த ஸ்கிரீன் எரிந்தது. ஸ்ரீ காந்த் வீட்டின் வெளியே தீப்பிடித்து எரியவதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர், அவரை சத்தம் போட்டு எழுப்பினர். அவர் உடனே வெளியே வந்து பார்த்து தீயை அணைத்தார். இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் இது குறித்து ஸ்ரீகாந்த் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அக்கம்பக்கத்தில் உள்ள சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, பெட்ரோல் குண்டு வீச்சுக்கான காரணம் என்ன? ஸ்ரீகாந்திற்கு வேறு யாருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததா? அல்லது வேறு காரணமா என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் பட்டுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.