tamilnadu

ஆபாசப் படங்களைப் பதிவேற்றம் செய்தவர் கைது

தஞ்சாவூர், மே 28- குழந்தைகளின் ஆபாச படங்கள் அதிகளவில் வலை தளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதால் பாலியல் வன்முறைகள் அதிகரிக்கின்றன. இதைத் தடுப்பதற் கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பதிவேற்றம் செய்யப்பட்டது தொடர்பாக ஏற்கெனவே சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும், இது தொடர்பாக வலைதளங்களைக் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகில் பண்டாரவாடை கிராமத்தில் முகநூலில் குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பதிவேற்றம் செய்வது காவல் துறையினருக்குத் தெரிய வந்தது. இது குறித்து பாபநாசம் துறையினர் விசாரணையில் பண்டார வாடையைச் சேர்ந்த இளங்கலைப் பட்டதாரியான ரியாஸ் அகமது (44) இச்செயலில் ஈடுபடுவது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ரியாஸ் அகமதுவை புதன் கிழமை இரவு கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த மடிக்கணினி மற்றும் செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.