தஞ்சாவூர், மே 30- தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில், விசைப்படகு மீனவர்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் மாநில பொதுச்செயலாளர் ஏ.தாஜுதீன் தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஏ.ராஜமாணிக்கம், செயலாளர் கே.வடுகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மீன்பிடி தடைக் காலத்தை கொரோ னா ஊரடங்கு காலத்தையும் கணக்கில் கொண்டு கழித்து, முன் கூட்டியே தொழில் செய்ய அனுமதி தந்தமைக்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் படகு பராமரிப்பு செலவுக்காக, வங்கிகள் மூலம் கடன் வசதி ஏற்படுத்தித் தர, அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், வங்கிகளில் கடன் தர மறுத்து வரும் நிலை உள்ளது.
எனவே, மாவட்ட மீனவர்களுக்கு கடன் வசதி ஏற்படுத்தித் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்குச் சென்று பிடித்து வரும் இறால், மீன் உள்ளிட்ட கடல் உணவு பொருட்களை விற்பனை செய்வதற்கு, ஏற்றுமதியாளர்களை எதிர்நோக்கும் நிலை உள்ளது. ஆனால், ஏற்று மதியாளர்களிடம் போதிய பணியாளர்கள் இல்லாத தாலும், ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உள்ளதாலும், மீனவர்களிடம் கொள்முதல் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் மீனவர்கள் செலவு செய்து கடலுக்கு சென்று தொழில் செய்தாலும், கடல் உணவுப் பொருட்களை விற்க முடியாத நிலை உள்ளது. எனவே இதற்கான உரிய ஏற்பாடுகளை மாநில அரசு செய்து, மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்ச னைகளுக்கு தீர்வு காண வேண்டும். கடல் பொருட்களை தவிர்த்து வளர்ப்பு மீன்களுக்கும், இறால்களுக்கும் முக்கியத்துவம் அளித்து ஏற்றுமதி முதலாளிகள் செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால் கடல் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் அரசின் பல்வேறு சலுகைகளை பெற்று வருகின்றனர். இவர்களால் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்களுக்கு எந்த உதவியும் இல்லாத நிலை உள்ளது. எனவே, மீனவர்கள் பலனடையும் வகையில் மத்திய, மாநில அரசுகள் புதிய திட்டங்களை வகுக்க வேண்டும். மீனவர்கள் நிலை குறித்து அறிந்து கடலுக்கு தொழில் செய்யச் செல்ல மாநில அரசு அனுமதி வழங்கி இருந்தாலும், படகுகளை பராமரிப்பு செய்வ தற்கான தச்சுத் தொழிலாளர்கள், மெக்கானிக்குகள், உதிரிபாக விற்பனைக் கடைகள் இல்லாததால் படகுகளை கரையேற்றி பழுது நீக்கம் செய்ய முடியாத நிலையும் உள்ளது. மீன்கள் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களை தமிழகம் முழுவதும், மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்வதற்கு உரிய அனுமதி வழங்க வேண்டும்.
மீன் ஏற்றுமதியாளர்களை அரசு அழைத்து, முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, பண்ணை மீன், இறால்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல கடல் மீன்களுக்கும் முன்னுரிமை அளித்து கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்து தர வேண்டும். மேலும் தொழிற்சாலைகளுக்கு ஊரடங்கு உத்தரவில் இருந்து தளர்வு செய்தது போல், மீன்பிடி தொழிலுக்கும் தளர்வு செய்து தர வேண்டும். தற்போது அரசு ஜூன் 1 முதல் தொழில் செய்ய அனுமதி வழங்கியுள்ளது. நாகை, காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மீனவ சங்கங்களின் வேண்டுகோளுக்கிணங்க, பல்வேறு பிரச்சனை களையும் ஆய்வு செய்து, ஜூன் 2 ஆவது வார தொடக்கத்தில் அன்றைய நிலைமைக்கு ஏற்ப தொழிலுக்கு செல்ல முடிவுகள் மேற்கொள்வது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.