tamilnadu

img

விளையாட்டுக்கதிர் : சவாலே... சமாளி!

“கிரிக்கெட் விளையாட்டில் சமீப காலமாக நடுவர்கள் வழங்கும் எல்பிடபிள்யூ ‘அவுட்’, ‘நோ பால்’ கொடுப்பது என பல்வேறு தீர்ப்புக்கள் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல பார்வையாளர்கள் வர்ணனையாளர்களிடமும் பல சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றன. மைதானம் முழுக்க கேமரா கண்கள் சென்றாலும், அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தினாலும் நடுவர்களின் முடிவுகள் சில தவறுகள் நடப்பது தவிர்க்க முடியாத ஒன்று தான் என்கிறார்கள். இத்தகைய சவாலான பணிகளில் ஆண்களுக்கு நிகராக சர்வதேச கிரிக்கெட் நடுவர் குழுவில் பெண் ஒருவர் முதன் முறையாக இடம் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.” கடந்த 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில்  பெண்கள் டி 20 ஓவர் உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தியது. இத்தொடரில் இங்கிலாந்து இடது கை சுழற்பந்து வீச்சாளர் சூய் ரெட்பெர்ன், நியூசிலாந்தின் கத்லின் கிராஸ், ஆஸ்திரேலியாவின் கிளார் போலொஷாக், கரீபியனின் ஜாக்லின் வில்லியம்ஸ் ஆகிய 4 பெண்கள் நடுவர்களாக பணியாற்றினர். இவர்களில் கிளர் போலோஷாக் மட்டுமே ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கும் நடுவராக தேர்வானார். ஓமன் அணியும் நபிமியாவும் விளையாடிய அந்த ஆட்டத்திற்கு நடுவராக பணியாற்றினார். இது அவருக்கு முதல் முறை அல்ல. உள்ளூரில் ஆண்கள் அணிக்கு நடுவராகவும் இருந்துள்ளார். இருந்தாலும் சர்வதேச அளவில் ஆண்கள் கிரிக்கெட்டில் நடுவராக பணியாற்றிய போதுதான் எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள உதவியது என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.  அந்த தொடர் முடிந்ததும் செய்தியார்களுக்கு அளித்த பேட்டியில்,“கிரிக்கெட்டிலும் பெண் நடுவர்களை அதிகப்படுத்த வேண்டும். அனைத்துப் பெண்களும் இந்த பதவிக்கு தாமாக முன் வர வேண்டும்” என்ற விருப்பத்தையும் தெரிவித்தார். விளையாட்டு உலகில் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருந்தாலும் பெண்களுக்கான விளையாட்டில் ஆண்களே நடுவர்களாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இந்நிலையில் முதல்முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய பெண் ஒருவர் நடுவராக தேர்வாகியிருக்கிறார் அவர் பெயர் ஜி.எஸ். லட்சுமி.

யார் இந்த லட்சுமி?
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிற்போக்கு சனாதானம் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர். படிப்பு பெரிய அளவில் கை கொடுக்காத நிலையில், கிரிக்கெட் வாழ்வில் உயர வழி வகுத்தது. பொறியியல் பட்டதாரியான லட்சுமியின் தந்தைக்கு ஜாம்ஷெட் பூர் டாடா நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் ஆந்திராவிலிருந்து இரும்பு நகரத்திற்கு குடிபெயர்ந்தது அவரது குடும்பம். டாடா நகரில் பள்ளிப் படிப்பையும் கிரிக்கெட் வாழ்க்கையும் ஒரே நேரத்தில் துவக்கினாலும், விளையாட்டை மட்டுமே கெட்டியாக பிடித்தார். பள்ளி இறுதித் தேர்வில் போதிய மதிப்பெண் இல்லை என்பதால் ஜாம்ஷெட்பூர் மகளிர் கல்லூரியில் சேர நேரடி அனுமதி மறுக்கப்பட்டது. விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ்  இடம் கிடைத்தது.

பயிற்சியாளராக...
வலது கை சுழற்பந்து வீச்சாளரான லட்சுமி, 1986 ஆம் ஆண்டிலிருந்து 2004 வரையிலும் ஆந்திரா, பீகார் ரயில்வே மகளிர் கிரிக்கெட் அணிக்காகவும் மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். இந்திய ரயில்வே அணியிலும் ஆதிக்கம் செலுத்தினார். திருமணத்திற்கு பிறகு கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்ந்தும் சர்வதேச ஆட்டங்களில் அவரால் ஜொலிக்க முடியவில்லை.
கிரிக்கெட் விளையாட்டு போதிய அளவுக்கு கை கொடுக்கவில்லை என்பதால் இளம் வீராங்கனைகளை உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்பினை ஏற்று பயிற்சியாளராக மாறினார். ரயில்வே ஊழியரான இவர், தெற்கு ரயில்வே அணியின் பயிற்சியாளராக 10 ஆண்டு காலம் பணியாற்றினார். இவரது பயிற்சியில் இளம் பெண்கள் பலர் இந்திய அணியில் இடம் பிடித்தனர்.

மாறாதது ஏதும் இல்லை...
ஆண்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் பெண்கள் கிரிக்கெட்டில் கிடைப்பதில்லை. இருந்தாலும் தடைகள் பலவற்றையும் உடைத் தெறிந்து சாதித்து வருகிறார்கள் பெண்கள். அதில் ஒருவர்தான் 51 வயதாகும் லட்சுமி. ஆண்கள் மட்டுமே இருந்த ஐசிசி சர்வதேச கிரிக்கெட் நடுவர் குழுவில் முதல் முறையாக இந்திய கிரிக்கெட் பெண்கள் அணியின் முன்னாள் வீராங்கனை லட்சுமி இணைந் துள்ளார். இது ஒன்றும் லட்சுமிக்கு அவ்வளவு எளிதில் கிடைத்து விடவில்லை. நீண்டகால உழைப்புக்கும் முயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் கிடைத்த பரிசாகும்.

புதிய பாதை...
தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த சிறப்பு பேட்டி ஒன்றில் “ஐசிசி-யின் சர்வதேச நடுவர் குழுவில் தானும் ஒரு அங்கமாக இருப்பது பெருமையாக இருக்கிறது. இந்தப் பொறுப்பு எனக்கு பல புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதால் கிரிக்கெட் நிர்வாகம், குடும்பத்தார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். கிரிக்கெட் வீராங்கனையாகவும் போட்டி நடுவராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளதால் சர்வதேச தளத்தில் அந்த அனுபவங்களை சிறந்த முறையில் பயன்படுத்த தயாராக இருக்கிறேன்” என்றார். இளம் பெண்களின் சிறந்த வழிகாட்டியான லட்சுமிக்கு 5 பேர் கொண்ட பெண்கள் நடுவர் குழுவில் இடம் கிடைத்தது. 2008 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்த அந்த பொறுப்பை ஏற்று அடுத்த நிலைக்கு உயர்ந்தார். 2014ஆம் ஆண்டு நடுவர்களுக்காக முதன்முறையாக பிபிசிஐ நடத்திய தகுதித் தேர்வில் பங்கேற்ற 120 நபர்களில் முதல் நபராக வெற்றி பெற்றார். இந்த வெற்றியைத் தொடர்ந்து முதன் முறையாக உள்நாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான தொடரில் நடுவராக பணியாற்றினார். பெண்களுக்கான கிரிக்கெட் ஆட்டத்தில் சர்வதேச அளவில் 3 ஒருநாள் போட்டிகளுக்கும் டி20 போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றிய லட்சுமியை ஆட்ட நடுவர் குழுவில் போட்டி நடுவராக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது ஐசிசி. இதன்மூலம் ஆண்கள் கிரிக்கெட்டிலும் சர்வதேச நடுவராக பணியாற்ற உள்ளார். மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் போட்டி மற்றும் டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டங்களில் நடுவராக பணியாற்ற வேண்டும் என்ற அவரது லட்சியம் நிறைவேற வாழ்த்துவோம்!