ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் தாய்கட்ஸு என்ற பெயரில் சர்வதேச பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. முன்னணி வீரர் - வீராங்கனைகள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இந்த தொடர் பரபரப்பாக நகர்ந்து வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய் பிரணீத் இந்தோனேசியாவின் டாம்மி சுகியார்டோவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே அதிரடியில் களமிறங்கிய சாய் பிரணீத் 21-12, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் ஜப்பான் வீரர் கென்டோ மொமோடாவை சனியன்று எதிர்கொள்கிறார்.
சிந்து அவுட்
மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் அதிகம் எதிர்பார்த்த பி.வி. சிந்து ஜப்பான் வீராங்கனை அகனே யாமகுச்சி யிடம் 18-21, 15-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்து தொடரிலிருந்து வெளியேறினார். ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ராங்கிரெட்டி - சிராக்செட்டி ஜோடி ஜப்பானின் கமுரா - சோநோடா ஜோடியிடம் 19-21, 18-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை (அனைத்து பிரிவுகளுக்கும்) கொண்ட இந்த தொடரில் ஜப்பான்,சீன நாட்டு வீரர் - வீராங்கனைகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.