சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை தனியார் பேருந்து வந்தது. அப்போது அந்தப் பேருந்தில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் மளமளவென தீ பரவியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், பேருந்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.