tamilnadu

img

மேட்டூரில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர் தனுஷ் தூக்கிட்டு தற்கொலை 

மேட்டூர் : சேலம் மாவட்டம் மேட்டூரில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர் தனுஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூரை சேர்ந்தவர் விவசாயி சிவகுமார் . இவரது இரண்டாவது மகன் தனுஷ்(19) மேட்டூரில் உள்ள தனியார்ப் பள்ளியில்  2019ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பை முடித்தார்.பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களை எடுத்திருந்த தனுஷ் , மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவைக் கொண்டிருந்தார். இவர் இரண்டு முறை நீட் தேர்வை எழுதியும் தேர்ச்சி பெறாததால் , இந்த ஆண்டு மூன்றாம் முறை நீட் தேர்வு எழுதத் தயாராகி வந்தார். 

இந்நிலையில் , இன்று நடக்கவிருக்கும் நீட் தேர்வுக்குப் படித்து வந்த அவர் , நேற்று மாலை தன்  நண்பரிடம் இந்த முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி அடையவில்லையென்றால் தன் மருத்துவராகும் கனவு களைந்து போகும் என்று கூறியுள்ளார். அதன் பிறகு , நேற்று நள்ளிரவு வரை தனது அறையில் படித்துக் கொண்டிருந்த தனுஷ் , இன்று காலை அவரின் தாயார் அவர் அறைக்குச் சென்று பார்க்கும்பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. 

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கருமலைக்கூடல் காவல்துறையினர் , சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

தமிழகத்தில் இன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில் , அந்த தேர்வில் பங்கேற்க இருந்த விவசாயி மகன் நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூழையர் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

;