tamilnadu

img

இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

சேலம், ஏப். 28- சேலத்தில் இருவேறு இடங்களில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்துள்ளனர்.சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள ஆண்டிகவுண்டர் காலனி குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 5 இருசக்கர வாகனங்களுக்கு சனியன்று நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில் வாகனங்கள் அனைத்தும் கொழுந்து விட்டு எரிவதை கண்டு வாகன உரிமையாளர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் வாகனங்கள் அனைத்தும் முழுமையாக எரிந்து சேதமடைந்தன.இதேபோல் அதே பகுதியில் எஸ்.கே கார்டன் குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 3 வாகனங்களுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்ததில் வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து வாகன உரிமையாளர்கள் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாநகர பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைந்துள்ள பகுதிலேயே நள்ளிரவில் 8 இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

;