tamilnadu

img

தமிழக முதல்வரின் மாவட்டத்தில் தலைவிரித்தாடும் சாதிய வன்மம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிபிஎம் மனு

சேலம், ஏப்29- 
தமிழக முதல்வரின் மாவட்டத்தில்nஊராட்சி மன்ற தலைவரை சாதிய வன்மத்துடன் பணி செய்ய விடாமல் மிரட்டி வரும் அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக , மார்க்சிஸ்ட் கட்சியின்  சேலம் மாவட்டக்குழு சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், தாரமங்கலத்தை அடுத்த டி.கோணகாபாடி ஊராட்சிக்கு நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், ஊராட்சி மன்ற தலைவராக அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அம்சவள்ளி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் டி.கோணகாபாடி ஊராட்சிக்கு உட்பட்ட இலங்கை அகதிகள் முகாமில் குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக மக்களிடம் இருந்துவந்த கோரிக்கையின் அடிப்படையில் 22.04.2020 அன்று பஞ்சாயத்து தலைவர் அம்சவள்ளி, அவருடைய கணவர் சதீஷ்குமார் , துணைத்தலைவர் பிரபு ஆகியோர் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு போர்க்கால அடிப்படையில் குடிநீர் விநியோக பணிகளை மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த அதிமுகவின் எம்.ஜி.ஆர் மன்ற துணைத்தலைவரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவருமான மோகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இவர்களை வழிமறித்து, சாதியின் பெயரை சொல்லி இழிவாக திட்டியதோடு மட்டுமல்லாமல், அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்று பணி செய்யவிடாமல் தடுத்து, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

முன்னதாக , ஊராட்சி மன்றத்தலைவர் அம்சவள்ளி பொறுப்பேற்றதில் இருந்து அதிமுக நிர்வாகி மோகன் வழியில் பார்க்கும் போதும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அம்சவள்ளி அவர்கள் அமர்ந்திருக்கும் போதும், சாதியின் பெயரைச் சொல்லி இழி சொற்களால் தொடர்ந்து பேசி பஞ்சாயத்து தலைவரை அவமானப்படுத்தி வந்திருக்கிறார். இவ்வாறு அதிமுக நிர்வாகி மோகனின் தொடர் வன்முறை வெறியாட்டத்தை தாங்கமுடியாத ஊராட்சி மன்றத்தலைவர் அம்சவள்ளி, அவரது கணவர் சதீஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுக நிர்வாகி மோகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒன்பது பேர் மீது தாரமங்கலம் காவல்துறையினர் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.(மு.த.அ எண் 449/2020 )

இந்த வழக்கு நீர்த்துப்போக வேண்டும் என்ற நோக்கத்தில், ஆளும்கட்சி ஆதரவுடன் அதிமுக நிர்வாகி மோகனின் தூண்டுதலால் இவரது ஆதரவாளராக இருக்கக்கூடிய அதிமுக ஒன்றிய கவுன்சிலர் காவேரி அவர்களின் சகோதரர் தனபால் என்பவர் கொடுத்த பொய் புகாரின் அடிப்படையில் சதீஷ்குமார் மற்றும் துணைத் தலைவர் பிரபு ஆகியோர் மீதும் தாரமங்கலம் காவல்துறையினர் பொய்யாக வன்கொடுமை வழக்கை பதிவு செய்துள்ளனர்.(இந்த மு.த.அ எண் 450/2020.)

பாதிக்கப்பட்டோரை பயமுறுத்தும் விதமாகவும், எளிய மக்களுடைய குரல்வளையை நசுக்குவதற்கும், அரசும், காவல்துறையும் இதுபோன்ற பொய்யான புகார்களை ஊக்குவித்து வருவதை மார்க்சிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு பாரத் ஸ்டேட் வங்கியின் தாரமங்கலம் கிளையில் பணியாற்றி வந்த தலித் சமுதாயத்தை சேர்ந்த பெண் ஊழியரை, அதிமுக நிர்வாகி மோகன்,  சாதியை சொல்லி இழிவாக பேசி, அசிங்கமான வார்த்தைகளால் திட்டி இருப்பது அங்கு இருக்கின்ற சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்திருக்கிறது. அந்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.

இதுமட்டுமல்லாமல் அத்திக்கட்டானூர் அருந்ததியர் மக்களை சாதியை சொல்லித் திட்டுவதும், அவர்களது உடைமைகளை சேதப்படுத்துவதும், அம்மக்களை கடுமையாக தாக்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவருக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருப்பதால் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்க காவல் துறை முன்வருவதில்லை.

முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஆளும் கட்சியின் பொறுப்பாளர் என்றும், முதல்வரின் உறவினர் என்றும் கூறிக்கொண்டு அதிமுக நிர்வாகி மோகன் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத்தலைவர் அம்சவள்ளி மற்றும் அவரது கணவர் சதீஸ்குமார் இருவரையும் சாதி பெயரை சொல்லி இழிவு படுத்தியதொடு அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.இந்த சம்பவம் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலையில் நடந்தேறியுள்ளது வீடியோ ஆதாரங்களும் உள்ளன. இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் அதிமுக நிர்வாகி மோகனையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்ய காவல்துறை மறுக்கிறது.

ஆதாரங்களுடன் புகார் கொடுத்த பின்னும் கைது செய்யாமல் காலம் தாழ்த்துவது அரசின் மீதும், சட்டத்தின் மீதும், ஒடுக்கப்பட்ட எளிய மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சிதைக்கின்ற வகையில் சேலம் மாவட்ட காவல்துறை நடந்துக்கொள்வது வன்மையாக கண்டனத்திற்குறியது.

ஆகவே , காவல்துறையினர் உடனடியாக அ தி மு க நிர்வாகி மோகனை கைது செய்ய வேண்டும். சதீஷ்குமார் மற்றும் துணைத்தலைவர் பிரபு ஆகியோர் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும். ஊராட்சி மன்றத்தலைவர் அம்சவள்ளி மற்றும் அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக பாதுகாப்பு வழங்க வேண்டுமென சிபிஎம் சேலம் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்வதாக ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.