நடை தளர்ந்தாலும் தடையேதும் இல்லை என்பதை நிரூபிக்கும் ஜெனிதா தேர்வு செய்தது சதுரங்கம். திருச்சி பொன்மலை பட்டியைச் சேர்ந்த அவர் சதுரங்கத்தில் கொடிக் கட்டி பறக்கிறார். ரஷ்யா, ஸ்லொவேனியா,நார்வே என ஐரோப்பிய நாடுகள் கோலோச்சி வரும் செஸ் போட்டியில் 2013 ஆம் ஆண்டு முதல் 17 ஆம் ஆண்டு வரைக்கும் தொடர்ச்சியாக ஐந்து உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். பத்து வயதில் சதுரங்க விளையாட்டை தொடங்கிய ஜெனிதா, மூன்று மாதங்களிலேயே முதல் பரிசு பெற்றது செஸ் விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரித்தது. இந்தப் வெற்றிப் பயணம் படிப்படியாக மாவட்டம், மாநிலம், தேசியம் சர்வதேசம் என 15க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அழைத்துச் சென்றது.
‘குருவை மிஞ்சிய’...
ஒன்பது முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ஸ்லொவாகியாவின் ஸ்டீபனை சமீபத்தில் வீழ்த்தி 6வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துக் காட்டினார். 5 முறை உலகச் சாம்பியனான ரஷ்ய வீரரின் சாதனையும் தனது ‘ரோல் மாடல்’ விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோரது சாதனைகளை முறியடித்து சதுரங்க குருவை மிஞ்சிய சிஷ்யனாக சதுரங்க விளையாட்டு உலகில் இந்தியாவின் பெயரை வரலாற்றில் வலுவாக பதிவு செய்தார்.
வெறும் விளையாட்டல்ல...
கல்லூரி காலங்களில் செஸ் விளையாட்டின் ஜாம்பவானும் பள்ளி ஆசிரியருமான இருதயராஜ், மகளுக்கு ‘குரு’வாக மாறினார். அந்தப் பயணம்தான் இன்றைக்கு அவரை விளையாட்டு உலகில் அடையாளம் காட்டியது. சர்வதேச அளவில் விளையாடுவதற்கு பெங்களூர் பயிற்சியாளர் ரவிசங்கரின் ஆலோசனை, பயிற்சியில் 2007ஆம் ஆண்டு முதன்முதலாக வெளி நாடு சென்றபோது வெள்ளி பதக்கம் கிடைத்தது. ஆனாலும் மனம் தளரவில்லை. இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் நடந்த தெற்காசிய பாரா ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என நான்கு பதக்கங்களை வென்று பெருமை சேர்த்தார். 2013 ஆம் ஆண்டு முதன் முதலாக நம்பிக்கையுடன் களம் கண்டு உலக சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் ‘சர்வதேச மாஸ்டர் விருது பெற்ற உலகின் முதல் பெண் வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தமானார்.
அசைக்க முடியாத உறுதி!
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வரும் ஜெனிதாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரும் திருச்சி விமான நிலையத்திற்கே வந்து வாழ்த்தியது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாகும். முதலமைச்சர் எடப்பாடியும் பாராட்டினார். அத்தனை பாராட்டுகளும் அவ்வளவு சுலபத்தில் கிடைத்துவிடவில்லை.
இருதயராஜ்-க்கு நான்கு குழந்தைகள். கடைக்குட்டியான ஜெனிதா, 3 வயது வரைக்கும் மற்ற குழந்தைகளைப் போல் ஓடி விளையாடினாள். ஒரு நாள் படுத்த படுக்கையானது அந்தக் குழந்தை.மருத்துவரிடம் பரிசோதித்தபோது ‘போலியோ’ தாக்கம் அதிகமானது தெரிய வந்தது. முதுகுத்தண்டு முழுமையாக பாதிக்கப்பட்டது. இரண்டு கால்களும், ஒரு கையும் செயலிழந்து விட்டன. நான்காண்டு காலம் வீட்டிலேயே பராமரித்து வந்தனர். அத்துடன் அவரது வாழ்வு முடிவுக்கு வந்துவிடும் என்று பெற்றோர் அச்சம் கொள்ளவில்லை. உடல் ஊனம் ஒரு தடையே இல்லை என்பதை உலகிற்கு உரக்கச் சொல்ல எட்டாம் வகுப்பு வரை பெற்றோரின் உதவியுடன் பள்ளிக்கு சென்று வந்தார். அதன் பிறகு வீட்டில் இருந்தபடியே தேர்வுகள் எழுதி இளங்கலை (பி.காம்) பட்டத்தையும் முடித்து விட்டார். அத்துடன் வீட்டிலேயே முடங்காமல் விளையாட்டிலும் கவனம் செலுத்தி 2001 ஆம் ஆண்டு தேசிய அளவில் கலந்து கொண்டு தொடர்ந்து பரிசுகளை குவித்து வெளிச்சம் போட்டு காட்டினார்.
தடைகளைத் தாண்டி...
நமது வீரர்களில் பலரும் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடி இவரையும் சிக்கலில் தவிக்க விட்டது. சுமார் 6 ஆண்டு காலம் வெளி நாட்டுப் பயணமும் போட்டிகளும் தடைபட்டது. பணி ஓய்வுக்கு பிறகு, இருதயராஜ் தனது ஓய்வூதியத்தின் பெரும்பகுதியை மகளின் வெளிநாட்டு பயணத்திற்கு செலவிட்டார். 2015 ஆம் ஆண்டுதான் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நிதி உதவி செய்தது. அதுவும் மிக எளிதில் கிடைக்கவில்லை. ஆனாலும் அவரது விடா முயற்சியின் பயனாக போலந்து, ஜெர்மனி, நார்வே, அர்ஜெண்டினா, ஸ்லொவாக்கியா ஆகிய நாடுகளில் நடந்த போட்டிகளில் மிகப் பெரிய ஜாம்பவான்களோடு மோதி உலக சாம்பியன் பட்டத்தை தொடர்ச்சியாக வென்று சாதிக்க முடிந்தது.
சத்தமில்லா பயணம்...
உடலில் ஒரு ஊனம் என்றாலே அதை சாபக்கேடாக பார்ப்போருக்கு தனது சாதனையின் மூலம் பதில் சொல்லும் 32 வயதாகும் ஜெனிதா, வாழ்க்கையிலும் சதுரங்க காய்களை மிக சாதுர்யமாக நகர்த்தி வருகிறார். ஆசிய கிராண்ட் ஸ்லாம்,கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் வெல்ல வேண்டும் என்ற லட்சியம், கனவை நிறைவேற்ற சிறப்பு பயிற்சிகள் மூலம் சத்தமில்லாமல் தன்னுடைய இலக்கை நோக்கி பயணித்து வருகிறார். வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பது போல் நமது நாட்டில் இல்லை. இது என்னைப் போன்ற வீரர்களின் வெற்றிக்கு தடையாக மாறி விடுகிறது என்ற அவரது ஆதங்கம் முற்றிலும் நியாயமானதே. தந்தையின் உதவியோடு சக்கர நாற்காலியில் வலம் வரும் ஜெனிதா தன்னம்பிக்கையை மட்டும் கைவிடவில்லை. மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நம்பிக்கை ஊட்டி வருகிறார். அவர் பட்ட கஷ்டங்களும் போராட்டங்களும் அவருக்கு சாதிக்க வேண்டும் என்ற சிந்தனையை ஏற்படுத்தி உள்ளது. யாருமே ஊனமுற்றோர் இல்லை. அத்தகைய குறிக்கோளை நிறைவேற்ற விளையாட்டை வெறும் விளையாட்டாக மட்டும் பார்க்காமல் மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு தூண்டுதலாக கருதி வருகிறார்.