tamilnadu

வாலிபரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்

ராயபுரம், மே 27-வியாசர்பாடியை சேர்ந்தவர் சேர்மகனி (40). தனியார் நிறுவன ஊழியர். இவர் ஞாயிறன்று (மே 26) மாலை  மோட்டார் சைக்கிளில் தண்டையார்பேட்டைக்கு  வைத்தியநாதர் பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பறந்து வந்த காற்றாடியின் மாஞ்சா நூல் சேர்மகனியின் கழுத்தில் சுற்றியது. இதில் நிலை தடுமாறிய சேர்மகனி வாகனத்திலிருந்து கீழே விழுந்தார். மாஞ்சா நூல்அவரின் கழுத்தை அறுத்ததால் ரத்தம் கொட்டியது. வலியால் துடித்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் மாஞ்சா நூலில் காத்தாடிவிடுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டுவந்தன. காவல்துறையின் நடவடிக்கையில் காத்தாடிவிடுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் சென்னையில் மாஞ்சா நூலில் காத்தாடி விடுவது அதிகரித்துள்ளது.  எனவே பெரிய விபத்துகள் ஏற்படுவதற்குள் மாஞ்சா நூலில் காத்தாடி விடுவதை காவல்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.