சென்னை, ஜூன் 20- தனியார் அலுவலகங்கள் மற்றும் சுயதொழில் செய்யும் பெண்கள் வேலைக்கு செல்ல வசதியாக அம்மா இருசக்கர வாகனத் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது. மகளிருக்கு வாகனத்தின் விலையில் 50 விழுக்காடு அல்லது ரூ.25 ஆயிரம் ஆகியவற்றில் எதுகுறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி மகளிருக்கு கூடுதல் வசதி பொறுத்தப்பட்ட வாகனத்திற்கு மானியத் தொகையாக வாகனத்தின் விலையில் 50 விழுக்காடு அல்லது ரூ.31,250 இவற்றில் எது குறைவோ அந்த தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பெண்கள் கியர் அல்லாத 125 சி.சி.க்கு மிகாமல் வாகனத்தை வாங்க வேண்டும். மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வாங்கும் பெண்கள் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 40 வயது வரை உள்ளவராகவும் ஓட்டுனர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும். அவர்களின் தனி ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.மேலும் அதற்கான சான்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். 2018-19 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்களை தங்கள் பகுதிக்கு உரிய மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 20 முதல் ஜூலை மாதம் 4-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை நேரிலோ, பதிவு அல்லது விரைவு தபால் மூலமோ சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் அளிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். அதேபோல், ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை தொடர்பு கொண்டு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தினை மகளிர் மற்றும் பெண் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.