tamilnadu

img

ஏப்ரல் 23: உலக புத்தக தினம்

ஒரு திருமண நிகழ்வில் பட்டுச் சட்டை பளபளக்க ஓடிவரும் சிறுமியின் கையில்  வண்ண வண்ணப் புத்தகங்களைப் பரிசளிக்க வாய்த்த அந்தத் தருணம் அற்புதமானது.  நூல்களைப் பார்த்ததும் வியப்பால் விரிந்த அந்தப்  பரவசக் கண்களே பேசும் ஓவியம் தான்!  அதிதியின் கொள்ளுத் தாத்தா எம்.வி.கிருஷ்ணன், சென்னை மாநகரத் தொழிற்சங்க இயக்கத்தின் பழுத்த அனுபவமுள்ள தன்னடக்கமிக்க தலை வர்களில் ஒருவர், சில மாதங்களுக்குமுன் முகவரி கொடுத்து, இந்தச் சிறுமிக்கு நீங்கள் விரும்பும் புத்தகங்கள் அனுப்பி வையுங்கள், அபாரமாக வாசிக்கிறாள் என்று சொல்லி இருந்தார். 

எந்த வயதிலும் புத்தக வாசிப்பை விட்டு விடக் கூடாதென்று துடிக்கிற முதியவர்களையும் பார்க்கிறோம்.   மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜ கோபாலன், அவருடைய இணையர் சீதாலட்சுமி இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பல நூறு  பக்க நூல்களை மூன்று நான்கு நாட்களுக்குள் வாசித்து முடிக்கிறவர்கள்.  சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ள அற்புதமாகத் தீட்டப்பட்ட ஓவியங்களில் உயிர்ப்போடு இருக்கும் தமிழறிஞர்களை நெல்லை ஓவியர் வள்ளிநாயகம் அன்போடு அருகிருந்து விவரித்துக் கொண்டே வருகையில் மேதையர்தம் வாழ்க்கையில் வாசிப்பின் வெளிச்சம் மின்னக் காணமுடிந்தது.

புத்தக வாசிப்பைத் தூண்டிக் கொண்டே இருப்போர் எண்ணிக்கை குறைவு என்றாலும் அவர்களது பங்களிப்பு மகத்தானது.  தமது அன்றாட வாசிப்பைப் பதிவு செய்து கொண்டிருப்போர் வணக்கத்திற்கு உரியவர்கள். வாசிக்காத தன்மையை நேரப் பற்றாக்குறை என்று நியாயப்படுத்த முனை வோரை இத்தகையோரது  பகிர்வுகள் உண்மை யான நியாயத்தின் பக்கம் இழுக்கத்தான் செய்யும்.  எப்படியாவது படித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் யார் தடுத்துவிட முடியும்!

குழந்தைக்கு ஒரு வயது நெருங்கும்போதே  ஆரோக்கியமான வளர்ச்சிக்காக உணவுப் பொருள்களைச் சிறுச்சிறிய அளவில் உண்ணப் பழக்க வேண்டும் என்பார்கள் மருத்துவர்கள்.  இளம்வயதில் வாசிப்புப் பழக்கமும் ஊட்ட வேண்டும். குழந்தைகள் எப்போதும் பெரிய வர்கள் தட்டிலிருந்து தட்டிப்பறித்து உண்ணு வதைக்  கொண்டாட்டமாகச் செய்வார்கள். அப்படி யான  ஒன்றாக வாசிப்பும் அமையவேண்டும் எனில், பெற்றோர் சிறந்த வாசகர்களாக இருத்தல் அவசியம். 

புத்தக வாசிப்பு தங்களது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது என்று எண்ணற்றோர் சொல்வ துண்டு.  ஒரு சிறுகதை, ஒரு கவிதை அல்லது ஒரு கட்டுரை எத்தனையோ ரசவாதங்களை நிகழ்த்திவிட முடிகிறது.  ஒரு நாவலில் இடம்பெறும் ஒரு வரி ஊசலாடிக் கொண்டி ருக்கும் உள்ளத்தை சமநிலைக்கு மீட்டுப் புத்துணர்ச்சி கொள்ள வைத்துவிடுகிறது. நம்முள் உறைந்திருக்கும் பனியை ஒரு கோடரி போல் ஓங்கி உடைத்து இளக்கிவிடக்கூடியதாக வாசிப்பு அமையவேண்டும் என்ற எழுத்தாளர் காஃப்கா மேற்கோள் ஒன்று முக்கியமானது. 

‘தானே’ பெரும்புயலில் கடுமையான சேதத்தைக் கடலோர மாவட்டங்கள் எதிர்கொண்ட சமயத்தில், நாட்கணக்கில் கடலூர் நகரமே மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டுத்  தவித்த இரவுகளில்தான்,  குடும்பங்கள் வீதிகளில்  பாய் தலையணையோடு வந்திறங்கி அண்டை அயலாரோடு பரஸ்பரம் பேசிக் கொஞ்சம் இளைப்பாறிக் கொண்டனர் என்று குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகி மருதவாணன் பதிவு செய்திருந்தார். கொரோனா முடக்க நேரத்தில் நிகழ்ந்த கூடுதல் வாசிப்பு அனுபவம் பற்றி நண்பர்கள் பலரும் சொல்லக் கேட்டதுண்டு. இயற்கை உற்பாதங்களோ, கிருமித் தொற்றோ தேவைப்படக் காத்திருக்காமல் நல்ல பண்பாக்கங்களை மனித சமூகம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். 

உலகப் புகழ் பெற்ற நாடகமேதை ஷேக்ஸ்பியர் பிறந்த நாள் (நினைவு நாளும்!) என்ற  முறையில் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது என்று சொல்லப்படு கிறது.  

இந்த நாளை புனித ஜார்ஜ் நாளெனும் பெயரில் ஸ்பெயின் நாட்டில் கேட்டலோனியா நகரம் கொண்டாடும் விதத்தைப் பற்றி எத்தனை முறை சொன்னாலும் திரும்பத் திரும்பக் குறிப்பிடும் ஆவல் தடுக்க முடியாதிருக்கிறது. அன்றைய தினத்தில் காதலர்கள் தங்களது காதலிக்கு ரோஜாப் பூ கொடுக்க, அன்புக் காதலி யர் பதிலுக்குப் புத்தகம் கொடுத்து மகிழ்வார் களாம்.

லட்சக் கணக்கில் ரோஜாக்களும் புத்தகங் களும் கை மாறுமாம். ஆண்டு முழுவதும் விற்பனையாகும் புத்தகங்களில் பாதியளவு இந்த ஒரு நாளில் விற்றுப் போகுமாம்!

குழந்தைகள் தினத்தன்று நாமும் குழந்தைகளாக உணர்வதில்லையா....உழைப்பாளிகள் தினம் உழைப்பை முன்னிறுத்து வதில்லையா...மகளிர் தினம் பாலின சமத்துவம் பற்றி எல்லோரிடத்தும் கேள்விகளை எழுப்பு வதில்லையா....உலக புத்தக தினம் ஆண்டு தோறும் புதிய வாசகர்களைத் தன்னகத்தே பதிவு செய்து கொண்டு செல்லத்தானே வரு கிறது!  வாசகர் பிறந்த நாளாக அது நிலை பெறட்டும்! தேர்தல் நாளன்று வாக்குச் சாவடி வரை சென்று பார்த்துப் பெயர் இல்லையே  என்று அதிர்ச்சி அடைவது எத்தனை வேதனையானது, புத்தக தினம் என்று தனியாக ஒரு நாளுக்குக் காத்திருக்க வேண்டியதில்லை, எல்லா நாளையும் புத்தக தினமாக்கிக்  கொள்வோம்!

- எஸ்.வி.வேணுகோபாலன்