பெண் ஊடகவியலாளரை முகநூலில் ஆபசமாகவும், அவதூறாகவும் பதிவிட்ட நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
இதுகுறித்து மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ராதிக அளித்துள்ள புகாரில், தமிழகத்தில் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுவெளியில் மக்கள் சேவையாற்றும் பெண்களை பற்றி சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில் ஆபசமாகவும், அவதூறாகவும் பதிவு செய்து பகிரப்படுகிறது. சம்பந்தப்பட்ட பெண்களின் புகைப்படத்தை வெளியிட்டு அருவருக்கத்தக்க வார்த்தைகளில் பதிவிடுகின்றனர். இந்துத்துவ மற்றும் சாதிய அமைப்பை சேர்ந்தவர்கள் இத்தகைய நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். மேற்படி நிகழ்வுகளால் பொதுநோக்கத்திற்காக செயல்படும் பெண்கள் உயிருக்கும் அவமானத்திற்கும் பயந்து வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் சசிக்குமார் என்பவர் அவரது முகநூலில் ஊடகவியலாளர் கவின்மலர் என்பவரது புகைப்படத்தை வெளியிட்டு மிகவும் ஆபாசமான வார்த்தைகளை பதிவு செய்து அவமரியாதை மற்றும் மனவுழைச்சலை ஏற்படுத்தியுள்ளார். சமீப காலமாக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததான் விளைவாகவே இத்தகைய செயல்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆகவே மேற்படி கவின்மலர் புகைப்படத்தை அனுமதியில்லாமல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அறுவறுக்கத்தக்க வகையில் பதிவு செய்த சசிக்குமார் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன்படி 66(இ), 67 மற்றும் 1986ன்படி பிரிவு 3 மற்றும் இந்திய தண்டனை சட்டபிரிவு 292ஏன்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதிகா, பொருளாளர் ஜோதிமணி, மாநிலக்குழு உறுப்பினர்கள் ராஜலட்சுமி, சுதா உள்ளிட்ட திரளான மாதர் சங்க நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர்.