சென்னையில் அக்டோபர் 14 அன்று மாலையில் திமுக சார்பில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி உரையாற்றினார். அவரது உரையின் பகுதிகள்:
‘கலைஞரே தலைமை ஏற்றிருப்பார்’
கருணாநிதி ஒரு கவிஞர் மட்டுமல்ல; சிறந்த நிர்வாகி; சிறந்த பத்திரிகையாளரும் கூட. அவர் முரசொலி நாளிதழில் அனல் தெறித்த வார்த்தைகளால் எழுதிய கட்டுரைகளை யாரும் மறந்துவிடமுடியாது. மிகச் சிறந்த பத்திரிகையாளராக திகழ்ந்த அவர் இன்று நம்மோடு இல்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. இன்று பத்திரிகை சுதந்திரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மத்திய ஆட்சியாளர்களால் அந்த சுதந்திரம் நாள்தோறும் பறிக்கப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர்கள் நிலையும் மோசமாக உள்ளது. கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்களுக்காகவும் நியூஸ்கிளிக் இணைய ஊடகம் உட்பட ஊடகங்கள் மீது ஒன்றிய அரசு நடத்தும் தாக்குதலை கண்டித்தும் அவரே தலைமையேற்று போராட்டம் நடத்தியிருப்பார்.
இந்திய வரலாற்றில் இன்று (14.10.23) மிகவும் முக்கிய மான நாள். சாதியின் அடிப்படையில் மக்களை பாகுபடுத்திய மனுஸ்மிருதியை கண்டித்து இந்து மதத்தில் இருந்து டாக்டர் அம்பேத்கர் பௌத்த மதத்திற்கு மாறிய நாள். எனவே பொருத்தமான நாளில்தான் இந்த மாநாடு நடைபெறுகிறது. கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை மற்றும் அவரது அரசியல் பொதுவாழ்வில் அவர் நடத்திய போராட்டங்களை இன்று நினைவுபடுத்த வேண்டியுள்ளது. அவர் தேர்தல் அரசியல் பாதைக்கு மாறுவதற்கு முன்பே தமிழகத்தின் அரசியல் கலாச்சார மாற்றத்திற்கு வித்திட்டவர். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே தமிழ கத்தில் சுயமரியாதை இயக்கம் வலுவாக இருந்தது. மனுஸ்மிருதி, வர்ணாசிரம அடிப்படையில் ஒடுக்கப் பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிக்கட்சி தலைமையில் இருந்தவர்கள் குரல் கொடுத்தார்கள்.
சுயமரியாதை இயக்கம்
சுயமரியாதை இயக்கத்தின் முக்கியத் தலைவராக தந்தை பெரியார் இருந்தார். பெரியார் எப்போதும் சுயமரியாதை பற்றி பேசும் போது, பெண் விடுதலை குறித்து பேசாமல் இருந்ததில்லை. அன்றைய கால கட்டத்தில் அடிமைகள் போல் நடத்தப்பட்ட பெண் களுக்கு சொத்துரிமை மட்டுமல்ல; வீடுகளிலும் சமூகத்திலும் சமவாய்ப்பு, சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று அவர் குரல் கொடுத்தார். தமிழகத்தில் அந்தப் போராட்டம் பெரியார் தலைமையில்தான் தொடங்கியது. அவர் நடத்திய சுயமரியாதை போராட்ட த்தில் பங்கேற்றவர்களில் தோழர் பி.ராமமூர்த்தியும் ஒரு தலைவர் என்று நான் பெருமையாக கூறுவேன். அந்த போராட்டங்களில் இருந்துதான் கருணாநிதி ஒரு கவிஞராக, ஒரு எழுத்தாளராக, ஒரு வசன கர்த்தாவாக, சிறந்த பத்திரிகையாளராக, சிறந்த பேச்சா ளராக உருவெடுத்தார். 1965 ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில் வலுவாக நடைபெற்ற இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தையும் அவர் தலைமையேற்று நடத்தினார். நான் அப்போது சென்னையில் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது அந்த போராட்டத்தை ஆதரித்த இந்தி மொழி பேசும் பெண் நான் மட்டுமே என்பதை பெருமையுடன் பதிவு செய்கிறேன். அந்த இயக்கம் தமிழகத்தின் அரசியல் பாதையை மாற்றியமைத்தது. தமிழ் மக்களின் எண்ண ஒட்டத்தையும் உணர்வுகளையும் சரியாக புரிந்து கொண்டதால் மிக விரைவிலேயே மாநிலத்தின் முதலமைச்சராக கருணாநிதி உயர்ந்தார். அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் தாம் பின்பற்றும் கொள்கை களுக்கு ஏற்ப ஆட்சி அதிகாரத்தில் மாற்றங்களை செய்ய முயன்றபோது பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. பெண்களுக்கு சொத்தில் சமபங்கு, கல்வியில் போதுமான வாய்ப்பு களை ஏற்படுத்தியது, அரசுப்பணிகளில் வேலை வாய்ப்பு, மிகவும் வறிய நிலையில் உள்ள பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து வழங்கியது எனப் பல முன்முயற்சிகளை அவர் மேற்கொண்டார்.
பட்டினியில் சாதனை படைத்த மோடி அரசு
நமது நாடு இன்று உலகப்பட்டினி குறியீட்டு எண்ணில் 111வது இடத்தில் உள்ளது. ஏழைகளாக உள்ள நாடுகளை விட இந்தியா மிகவும் பின்தங்கி யுள்ளது. இதுதான் நரேந்திரமோடி அரசின் உண்மை யான சாதனை. ஆனால் இதற்கு மாறாக தமிழக அரசும், கேரளாவில் உள்ள இடது ஜனநாயக முன்னணி அரசும் ஒரு குழந்தை கூட இரவில் பட்டினியோடு உறங்கச்செல்லக்கூடாது என திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகின்றன. இது இந்த அரசுகளின் மிகப்பெரிய சாதனையாகும்.
பொருளாதார சமத்துவமும் அவசியம்
சமூக நீதி, பாலின சமத்துவம், பொருளாதார சமத்துவம் ஆகிய ஒவ்வொன்றுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. ஒன்றைவிட்டு விட்டு மற்றொன்றுக் காக போராடினால் போதாது. இந்த மூன்றிக்காகவும் நாம் போராடினால் தான் சமூகத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். சமூக நீதிக்காகவும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் சமத்துவத்திற்காகவும் வாழ்நாள் எல்லாம் தலைவர்கள் போராடினார்கள். அதற்கு எதிராக இன்று நாட்டில் பெரும் தாக்குதல் நடத்தப்பட்டு வரு கிறது. மனுஸ்மிருதி அடிப்படையிலான கொள்கை களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசு மத்தியில் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளாக மனு ஸ்மிருதி அடிப்படை யிலான சமூகத்தை உருவாக்க பாஜக ஆட்சி யாளர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவேதான் மனு அடிப்படையிலான சட்டங்கள், மனு அடிப்படையிலான தீர்ப்புகளை அமல்படுத்த தடை யாக உள்ள அரசியலமைப்புச் சட்டத்தை படிப்படி யாக அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
8 மாதங்களில் 2 ஆயிரம் பாலியல் வன்கொடுமைகள்
சாதிய ஒடுக்குமுறையால் பெண்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்கள் மீதான தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 8 மாதங்களில மட்டும் பெண்களுக்கு எதிராக 2 ஆயிரம் பாலியல் வல்லுறவுக் கொடூரங்கள் நடைபெற்றுள்ளன. 2ஆயிரம் படுகொலைகள் நடந்துள்ளன. இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் இந்த நிலைமை என்றால் பாஜக ஆட்சி செய்யும் மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதை சொல்லத்தேவையில்லை. இந்த வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அப்படியே கைது செய்ப் பட்டாலும், சாதி, மதம் அடிப்படையில் தண்டனை வழங்கப்படவேண்டும் என்று பாஜகவினர் கருது கிறார்கள். குற்றவாளி எந்தசாதி, எந்த மதம், பாதிக்கப்பட்ட பெண் எந்த மதம், எந்த சாதி என்று பார்க்கிறார்கள். கடந்த சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியின் மாநிலமான குஜராத்தில் கொடூரமான குற்றவாளிகளை அம் மாநில அரசு விடுதலை செய்தது. பில்கிஸ் பானு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த குற்றவாளிகள் அனைவரையும் பாஜக அரசு விடுதலை செய்துவிட்டது.
மல்யுத்த வீராங்கனைகளை வீதிக்கு விரட்டிய பாஜக
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் என்ன நடந்தது என்பதை நாடே பார்த்தது. தலித்பெண் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதில் அவர் உயிரிழந்தார். அவரது உடலைக் கூட குடும்பத்தினரிடம் கொடுக்காமல் காவல்துறையின் உதவியோடு இரவோடு இரவாக வயல்வெளியில் எரித்துவிட்டனர். அந்த பெண் பொய் சொல்கிறார் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் ஈவிரக்கமில்லாமல் பேசினார். அந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட 3 பேரும் முதலமைச்சரின் சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் விடுவிக்கப்பட்ட னர். பாலியல் வன்கொடுமையே நடக்கவில்லை என்று நீதிபதி மூலம் தீர்ப்பெழுத வைத்தனர். இதுமட்டுமல்ல பாஜக ஆட்சியில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிரான பாலியல் புகார்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மல்யுத்த வீராங்கனைகள் தில்லியில் தொடர் போராட்டம் நடத்தி னர். தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல்களை செய்த அந்த நபர் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமர்ந்திருக்கிறார். அந்த நபர் மீது பாஜக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கத் தயாராக இல்லை.
இரட்டை எஞ்ஜின் சர்க்காரின் லட்சணம்
பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் இதுவரை நாம் பார்த்திராத வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பெண்களுக்கு எதிராக மிக மோசமான தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டிய காவல்துறையே, அடைக்கலம் புகுந்த பெண்களைப் பிடித்து குற்றவாளிகளிடம் ஒப்படைத்த மிகமோசமான நிகழ்வு நடைபெற்றது. அவர்கள் கும்பல் வல்லுற வில் ஈடுபட்டதோடு அந்த பெண்களின் ஆடைகளைக் களைந்து ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். மாநி லத்திலும் மத்தியிலும் ஒரே ஆட்சி நடைபெற்றால் அரசு நிர்வாகம் இரட்டை எஞ்ஜின் வேகத்தில் விரைந்து செயல்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியும் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கும் கூறினார்கள். அவர்கள் சொன்னது இந்த மோசமான நிலையைத் தானா என்பதைக் கேட்க வேண்டியுள்ளது. நாடு முழுவதும் பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற வன்முறைகள் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படி பெண்களுக்கு எதிராக செயல்படக்கூடிய ஒரு கட்சி, பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து திசை திருப்ப, நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றிவிட்டதாக கூறுகிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினாலும் அது எப்போதிலிருந்து அமலுக்கு வரும் என்பது யாருக்கும் தெரியாது. அந்த சட்டம் உடனே அமலுக்கு வரவேண்டும் என்றால் மத்தியில் உள்ள பாஜக அரசு அதிகாரத்தில் இருந்து துாக்கியெறிப்படவேண்டும்.
திசை மாறுகிறது காற்று
நாட்டில் மாற்றம் வந்து கொண்டிருக்கிறது. இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. காற்று திசைமாறி வீசிக்கொண்டிக்கிறது. சமூக நீதிக்கான குரல், பாலின சமத்துவத்திற்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இவை இன்று நாட்டின் மையப்பிரச்சனைகளாக உருவெடுத்துள்ளன. கேரள இடது ஜனநாயக முன்னணி அரசும் தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசும் முற்போக்கு இயக்கங்களுக்கு உந்துசக்தியாக திகழ்கின்றன. உண்மையான சமூக நீதி என்பது பாலின சமத்து வத்தையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். அது மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கத்திற்கும் உண்மை யான சமூக நீதி கிடைக்கவேண்டும் என்றால் அது பொருளாதார நீதியாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் உண்மையான சமூக நீதியை நாம் அடைய முடியும். இதற்கான போரை நாம் நடத்தியாக வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் முகத்தோற்றத்தை மாற்றமுடியும்.
-தொகுப்பு : அ.விஜயகுமார்