tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தோழர் வ. சுப்பையா நினைவு நாள்

தோழர் வ.சுப்பையா பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி 1911 ஆம் ஆண்டு பிரெஞ்சிந்தியப் பகுதியான பாண்டிச்சேரியில் பிறந்தார். இவர் கலவை கல்லூரி உயர்நிலை பள்ளியில் கல்வி கற்றவர். ஆரம்பகால அரசியல்வாழ்வில் மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டார். 1933 ஆம் ஆண்டு அரிஜன சேவா சங்கம் துவக்கினார். “சுதந்திரம்” என்ற பத்திரிகை நடத்தி வந்தார். புதுவை ஒன்றிய பிரதேசத்தின் தொழிற்சங்க இயக்கம் உருவாக்கப்பட்டதின் முன்னோடி இவர்.

1935, 36 களில் புதுவைப் பஞ்சாலைகளில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்திற்கும்  வழிகாட்டியாகவும் உந்துசக்தியாகவும் இருந்து செயலாற்றியுள்ளார். 1936இல் எட்டு மணிநேர வேலை உள்ளிட்ட தொழிற்சங்க உரிமைகள் கோரி மூன்று பஞ்சாலைத் தொழிலாளர்களும் இணைந்து நடத்திய போராட்டத்தை ஒடுக்க 1936 ஜூலை 30 அன்று பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ராணுவத்தின் துணையோடு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இச்சம்பவம் இந்தியாமட்டுமில்லாமல் உலக நாடுகளின் கவனத்தைப் புதுச்சேரியின் பக்கம் திருப்பியது. இப்போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் தோழர் வ.சுப்பையா அவர்களே. அதன் விளைவாக 1937 ஏப்ரல் 6இல் பிரெஞ்சு - இந்தியாவிற்கான தொழிற்சங்கச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அதன்படி தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 8 மணிநேர வேலையும் தொழிற்சங்கம் அமைக்கும்உரிமையும் வழங்கப்பட்டன. ஆசிய நாடுகளிலேயே 8   மணிநேர வேலை என்பது புதுச்சேரி யில்தான் முதன்முதலாக அமுலாக்கப்பட்டது. அத்துடன் தொழி லாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம், ஓய்வுக் கால ஊதியம், பெண் ஊழியர்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் சமூகப் பயன் அளிக்கும் திட்டங்களும் வரையறுக்கப்பட்டன.

12 மணி நேர வேலை, மிக குறைவான ஊதியம், தொழிற்சங்க உரிமை மறுப்பு போன்ற பல இன்னல்களை அனுபவித்து வந்த 15,000 மில் தொழிலாளர்களை 1935ஆம் ஆண்டு தோழர் வ.சுப்பையா ஒருங்கிணைத்தார். அடிப்படை உரிமைகள் கோரி போராட்டம் நடத்திய ஆலை தொழிலாளர்கள் 12 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அதன்பின் நடந்த போராட்டத்திற்கு பிறகு 1936ஆம் ஆண்டு ஆசியாயவிலேயே முதல் முறையாக பிரெஞ்சு இந்தியா காலனியான புதுச்சேரியில் எட்டு மணி நேரவேலையும் தொழிற்சங்கம் அமைப்பதற்கு உரிமையும் ஆலை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.தோழர் வ.சுப்பையா 1998 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் நாள் காலமானார்.

==== பெரணமல்லூர் சேகரன்===